இனியவை நாற்பது காட்டும் அரசியல் நெறிகள்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 659
அரசியல் நெறிகளைப்பற்றி தமிழ் இலக்கியங்கள் தெள்ள தெளிவாக வரையறை செய்துள்ளன. தமிழகத்தில் சங்கம் மருவிய காலத்தில் இயற்றப்பட்ட பதினெட்டு நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என வழங்கப்படுகின்றன. இதில் அறநூல்கள் பதினொன்று, அகநூல்கள் ஆறு, புறநூல் ஓன்றாக அமைந்துள்ளன. இந்நூல் அறநூல்கள் பதினொன்றில் ஒன்றாக விளங்குகிறது. இந்நூலின் ஆசிரியர் பூதஞ்சேந்தனார். இவர் சிவன், திருமால், பிரம்மன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் பொதுச்சமய நோக்குடையவர் என்பதை அறிய முடிகிறது. இந்நூலில் அமைந்துள்ள நாற்பது பாடல்களில் சில பாடல்கள் 4 கருத்துக்களையும் சில பாடல்கள் 3 கருத்துக்களையும் சொல்லுகின்றன. இந்நூலில் இடம்பெறும் அரசியல் நெறிகளை அறிய முற்படுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அரசன்
இனியவை நாற்பதில் அரசியல் நெறி அரசனையே மையமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அரசன் என்பதற்கு க்ரியா அகராதி பரம்பரை முறையில் ஒரு நாட்டை ஆளும் உரிமையை பெற்றவர் என்றும் KING என்றும் பொருள் கூறுகிறது.மேலும் அரசன் செய்யும் அரசாட்சியை ஆளுகை,நிர்வாகம் RULE OR REIGN OF A KING என்று பொருள் உரைக்கிறது. (ப.38) மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி என்பது பழமொழி.இதற்கு காரணம் மன்னது நீதி ஆட்சி முறையில் தான் மக்களது நல்வாழ்வு அடங்கும்.ஆட்சியின் உயர்வும் தாழ்வும் மக்களை நேரிடையாகப் பாதிக்கும் என்பதை மோசிகீரனார்,
நெல்லும் உயிரென்றே நீரும் உயிரென்றே
மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்
அதனால், யானுயிர் என்ப தற்கை
வேல்மிகு தானே வேந்தற்குக் கடனே (புறம்.186)
என்ற பாடலின் மூலம் மக்கள் மகிழ்ச்சியுடனும்,செழுமையுடனும் வாழ்வதும, பகை,பஞ்சம்,பிணி போன்றவற்றிலிருந்து காப்பதும் மன்னன் ஆகையால் நெல்லும் நீரும் உயிரன்று மன்னனே மக்களுக்கு உயிர் போன்றவன் என்கிறது.மேலும் புலி தன் குருளைகளைப் பேணுவதைப் போல அரசன் மக்களைப் பேணி காத்தான் என்பதை,
புலி புறங்காங்கும் குருளைப் போல
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப (புறம்.42:10-11)
என்ற பாடலடிகள் மூலம் அறியமுடிகிறது.
ஆட்சிமுறை
செங்கோலாட்சி
நாடாளும் அரசனுக்கு இன்றியமையாது இருக்க வேண்டிய இயல்புகள் பல.அவன் அறநெறியில் இருந்து வழுவாது ஒழுகும் முறைமையுடையவனாக இருத்தல் வேண்டும்.அறமல்லாத தீய நெறியை நீக்கும் முறைமையுடையவனாகவும் இருத்தல் வேண்டும்.என்பதை,
அறன் இழுக்காது அல்லவைநீக்கி மறன்இழுக்கா
மானம் உடையது அரசு (384)
என்ற குறளின் வழி அறியமுடிகிறது.
ஆட்சி செய்யும் மன்னவன் கொடுங்கோல் ஆட்சி செலுத்தாமல் செங்கோலாட்சி ஆட்சி செலுத்துவதே அறம்.மன்னவனையே காப்பதும் செங்கோலின் அறமாகும் என்பதை
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
மறைகாக்கும் முட்டாச் செயின் (547)
என்ற குறளின் வழி அறியமுடிகிறது.இக்கருத்தையே சிறுபஞ்சமூலமும் குறிப்பிடுகிறது.இதனை,
கொண்டான் வழியொழுகல் பெண்மகன் றந்தக்குத்
தண்டான் வழியொழுகல் தன்கினையஃ - தண்டாதே
வேல்வழி வெம்முனை வீடாது மன்னாடு
கோல்வழி வாழ்தல் குணம். (சிறு.15:3-4)
என்ற பாடலடிகள் மன்னனுக்கு சிறப்பு தருவது அவனது கோல் என சுட்டுகிறது.இக்கருத்தையே இனியவை நாற்பதும் கூறுகிறது.இதனை,
கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ்
செய்யாமை முன்னினிது செங்கோலன் ஆகுதல்
எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
பொலலாங்(கு) உரையாமை நன்கு. (இனி.5:2-3)
என்ற பாடலடிகள் உணர்த்துகிறது.
அரசர் படைகள்
வள்ளுவர், அரசனுக்கு உரிய உறுப்புகளில் ஒன்றாக படையை குறிப்பிட்டுள்ளார்.இதனை
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு (581)
என்ற குறளில் அறியலாம்.
சுக்கிர நீதியானது அரசின் உறுப்புகள் பற்றி வரையறை செய்யுமிடத்து அரசு,அமைச்சு, நட்பு,பொருள்,நாடு,அரண் ,படை, என்றும் அவற்றுள் அமைச்சு கண்ணாகவும், நட்பு செவியாகவும் பொருள் முகமாகவும்,படை மனமாகவும்,அரண் கையாகவும் ,நாடு காலாகவும் அரசுறுப்புகள் அமையும் என விளக்குகிறது.(பக்.8-9)
படைமாட்சி,படைச்செருக்கு என்னும் அதிகாரங்கள் படைத்தொழில் அக்காலத்துப் பெற்றிருந்த சிறப்பைக் காட்டும். வள்ளுவர் காலத்தில் நால்வகைப் படைகளும் இருந்தன என்பதற்குச் சான்றாக பின்வரும் குறள் அமைந்துள்ளது.
உறுப்பறைந் தூறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை (761)
யானை முதலிய நான்குறுப்பானும் நிறைந்து உறுபடுதற்கஞ்சாது நின்று பகையை வெல்வதாய படையை வெல்வதாய படை,அரசன் செல்வங்கள் எல்லாவற்றுள்ளும் ,தலையாய செல்வம். (திருக்குறள் பரிமேலழகர், குறள்.761)
படையை ஆளும் தன்மை
நாட்டை ஆளும் மன்னன் படையை ஆளும் தன்மை பெற்றவனாக இருக்க வேண்டும் என்று இனியவை நாற்பது கூறுகிறது.இதனை
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே; (இனி.7:2)
என்ற பாடலடி மூலம் புலப்படுகிறது.
யானைப்படை
அரசர்களுக்கு யானைப் படை முக்கியம் ஆகும். இப்படையைப் பயன்படுத்தி போர்ச்செய்தலைக் காண்பது நன்மையுடையது ஆகும்.இதனை,
யானை யுடைய படைகாண்டல் முன் இனிதே (இனி.4:1)
கார்வரை யானைக் காண்டல் முன் இனிதே (இனி.8:1-3)
என்ற பாடலடிகள் மூலம் விளக்கப்பட்டுள்ளன.மேலும் சிறுபஞ்சமூலமும் யானைப் படை இருந்த செய்தியை கூறியுள்ளது.இதனை,
வரைவு இல்லாப் பெண் வையார்; மண்ணைப் புற்று ஏறார்;
புரைவு இல்லார் நள்ளார்; போர் வேந்தன் வரைபோல்
கடுங் களிறு விட்டுழி, செல்லார்; (இனி.80.3-4)
என்ற பாடலடிகள் மூலம் புலப்படுகிறது.மேலும் யானைப் படையில்லாத மன்னரைக் காண்பது பெருந்துன்பம் இதனை,
யானையில் மன்னரைக் காண்டல் நனி இன்னா (இன்.22:1)
என்ற பாடலடி சுட்டுகிறது.இதன் மூலம் அரசர்களுக்கு யானைப் படை முக்கியம் என்பதை அறியமுடிகிறது.பூதஞ்சேந்தனார் மற்றொரு பாடலில் வீரம் மிக்க அரசர்கள் இருந்த செய்தியை கூறியுள்ளார்.இதனை,
மறமன்னர் தங்கடையிள் மாமலை போல் யானை
மதமுழக்கம் கேட்டல் இனிது (இனி.15:3-4)
என்ற பாடலடிகள் புலப்படுத்தியுள்ளன.இதன் மூலம் அரசனுக்கு யானைப் படை முக்கியம் என்பதை அறியமுடிகிறது.
குதிரைப் படை
அரசனுக்கு சிறப்பு தரும் படைகளில் ஒன்று குதிரைப்படை ஆகும்.அரசருக்கு உரியவையாக குதிரைப்படையைத் தொல்காப்பியர் கூறியுள்ளார். இதனை,
படையும் கொடியும் குடையும் முரசும்
நடைநவில் புரவியும்,களிறும் தேரும்
தாரும் முடியும் நேர்வன பிறவும்
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்கு உரிய (தொல்.பொருள்.1571)
என்ற நூற்பா வழி அறியமுடிகிறது.
குதிரை வலிமையுடையதாக இருக்க வேண்டும் என்பதை,
ஊரும் கலிமா உரனுடைமை முன் இனிதே (இனி.9:1 )
என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் குதிரைப் படை இருந்த செய்தியை இன்னா நாற்பதும் கூறியுள்ளது.இதனை
கள்ளில்லா மூதூர் களிகட்கு நன்கின்னா
வள்ளல்க ளின்மை பரிசிலர்க்கு முன்னின்னா
வண்மை யிலாளர் வனப்பின்னா வாங்கின்னா
பண்ணில் புரவி பரிப்பு. (இனி.9:3-4)
என்ற பாடலடிகள் புலப்படுத்துகின்றன.
அன்புடைய அரசனாக இரு
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்ப் பேரகராதி அன்பு என்பதற்கு தொடர்புடையார் மாட்டு உண்டாகும் பற்று ,நேசம்,கருணை, பக்தி என விளக்கமளிக்கிறது.
தாம் வாழும் காலம் சிறிது என்றாலும் அக்காலம் வரையிலும் பிறர்மேல் அன்பு செய்து வாழ்வதே சிறந்தது ஆகும்.இனியவை நாற்பதும் அரசன் குடிமக்கள் மீது அன்பு வைக்க வேண்டும் என்கிறது. இதனை,
பந்தம் உடையான் படையாண்மை முன் இனிதே (இனி.7:2)
என்ற பாடலடி உணர்த்துகிறது.மேலும் மற்றொரு பாடலில் பூதஞ்சேந்தனார் குடிமக்களின் பால் அன்பில்லாத அரசன் ஆளும் நாட்டில் வாழக் கூடாது என்கிறது.இதனை,
பற்றமையா வேந்தன்கீழ் வாழமை முன் இனிதே (இனி.7:2)
என்ற பாடலடி உணர்த்துகிறது.இதன் மூலம் அரசன் அன்புடையவனாக இருக்க வேண்டும் என்ற செய்தியை அறியமுடிகிறது.
மெய்காவல் வீரர்களோடு நட்புக் கொள்
நாட்டை காவல் செய்யும் வீரர்களுடன் நட்புக் கொள்ள வேண்டும்.நட்பு என்பதற்கு கௌரா தமிழ் அகராதி நண்பு,சுற்றம்,கேள்,தொடர்பு,நண்பன்,யாழின் நான்காம் நரம்பு,கேண்மை,காதல் எனப் பொருள் கூறுகிறது.(ப.453)
மேலும் க்ரியா அகராதி நட்பு என்பதற்கு ஒத்த கருத்து,நலன்,அக்கறை முதலியவற்றின் அடிப்படையில் (பொதுவாக) உறவினர் அல்லாதவருடன் கொள்ளும் உறவு (FRIEND) ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கொண்டிருக்கும் சுமுகமான தொடர்பு (AMITY OR FRIEND SHIP BETWEEN COUNTRIES)என்று பொருள் கூறுகிறது. அரசனுக்கு காவலாக இருப்பவரே மெய்க்காப்பாளர் ஆவார். மெய்காப்பு வீரனோடும் அரணில் பொருந்துதல் வேண்டுமென 17வது பாடலில் கூறப்பட்டுள்ளது
பற்பல தானியத்து ஆகிப் பலருடையும்
மெய்த்துணையும் சேரல் இனிது (இன்.34)
என்ற பாடலில் விளக்கப்பட்டுள்ளது.
போர்க்கள வீரர்கள்
காலாட்படை
"பொரு" என்னும் வேர்ச்சொல்லின் அடியாக பிறந்தது "போர்" எனும் சொல்.ஆற்றலிலும் படைப்பலத்திலும் ஒத்த தன்மையரோடு பொருதலைப் போர் என்பது பண்டையத் தமிழரின் கொள்கை. தற்காலத்தில் நிகழ்வது போல் எதர்பாராது தாக்குதல், மறைந்திருந்து தாக்குதல் போன்ற முறைகளில் போர் நிகழவில்லை.போர் செய்யப் போவதை அறிவித்தப் பின்னர் போர் செய்யப் போவதை அறிவித்தப் பின்னர் போர் செய்ய போவதை அறிவித்த பின்னர் செய்வது மரபாக நிலவியது .தேர்,யானை ,குதிரை ,காலாள் என நால்வகைப் படைகளும் அணிவகுத்துப் போரில் ஈடுபட்டன.வில்,வாள், வேல் போன்ற படைக்கலங்கள் போரில் ஈடுபட்டன.வில் போன்ற படைக்கலங்கள் போரில் ஈடுபட்டன.போர்ப்பண்பு என்பது என்றும் மாறாத உலகியற்கை என்பார் வே.முத்துலெட்சுமி (பண்பாட்டுச் சிந்தனைகள் ப.59)
ஒருவனை யொருவன் அடுதலும் தொலைதலும்
புகுவது அன்றிவ் வுலகத் தியற்கை (புறம். )
என்ற பாடலடி உணர்த்துகிறது.
வீரர்கள் போர்க்களத்தில் சோர்வடைதல் கூடாது என்பதை கபிலர்,
மறமனத்தார் ஞாட்பின் மடிந்தொழுகல் இன்னா (இன்.6:2)
என்ற பாடலடி மூலம் அறியலாம்.
போர் நடக்கும் சமயத்தில் உதவியாக உள்ள சிற்றாள் (ஆயுதம்) படைக்கலம் வைத்திருக்க வேண்டும் என்பதை 38 பாடல் கூறுகிறது. இதனை,
சிற்றாளுடையான் படைக்கலம் மாண்பினிதே (இனி.38:1)
என்ற பாடலடி குறிப்பிடுகிறது.
சேனைகள் போரிடுதலை தடுத்தல்
அரசர்களது சேனைகள் போரிடுதலை ஒர் அரசனோ சான்றோரோ விலக்குதல் வேண்டும் என்பதை,
வாள் மயங்கு மண்ட மருள் மாறாத மாமன்னர்
தானை தடுத்தல் இனிது (இனி.33:3-4)
என்ற பாடலடிகள் சுட்டுகிறது.
ஒற்றறிதல்
வள்ளுவர் ஒற்றாடல் எனப்படும் உளவறிதல் பற்றி தனி ஓர் அதிகாரமாக வைத்துள்ளார்.ஒற்றர், நீதி நூல் ஆகிய இரண்டும் அரசனது கண்கள் ஆகும். இதனை வள்ளுவர்,
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
கொற்றம் கொளக்கிடந்து இல் (583)
என்ற குறளின் வழி குறிப்பிட்டுள்ளார்.
இனியவை நாற்பது என்ற நூலிலும் ஒற்றர்கள் பற்றிய செய்தி இடம்பெறுகிறது.வெற்றி மேவும் வேல் ஏந்திய மன்னன் ஒற்றர்கள் வாயிலாக எல்லா இடத்திலும் நிகழ்வனவற்றை அறிந்து ஆராய்ந்தல் வேண்டும் என்று பூதஞ்சேந்தனார் கூறியுள்ளார். இதனை,
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரிதல் முன் இனிதே (இனி.35:1)
என்ற பாடலடி உணர்த்துகிறது.
நடுநிலைமை
ஒருவர் பக்கம் சேராமல் இருவர்க்கும் பொதுமை உடையவராய் இருத்தல் நடுநிலைமை ஆகும். க்ரியா அகராதி நடுநிலைமை என்பதற்கு விருப்பு,வெறுப்பு இல்லாத சமநிலை ஒரு சமநிலை ஒரு கொள்கையை ஆதரிப்பதும் மற்றொன்றை எதிர்ப்பதும் இல்லாத நடுத்தரப் போக்கு IMPARTIALITY:NEUTRALITY (ப.605) வள்ளுவர் துலாக்கோலுடன் ஒப்பிட்டு நடுநிலைமையைச் சொல்லுகிறார். இதனை ,
சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை சான்றோர்க்கு அணி (118)
என்ற குறளின் வழி அறிய முடிகிறது.
அரசன் நடுநிலைமை தவறி, தன்கண் வினைசெய்வார்க்குச் சிறப்பு செய்யாமை,குற்றத்தை ஆய்ந்து முறையான தண்டனை அளித்தல்,விருப்பு வெறுப்பின்றி எல்லா உயிர்களுக்கு பொதுவாகச் சீர்தூக்கிப் பார்த்தல் என 5,35 ஆகிய பாடல்கள் கூறுகின்றன. இதனை,
………………………கோல்கோடி மாராயம்
செய்யாமை இனிது (இனி.5:1-2)
முற்றான் தெரிந்து முறைசெய்தல் முன் இனிதே
பற்றிலனாய்ப் பல்லுயிர்க்கும் பாத்துற்றுப் பாங்கறிதல்
வெற்றிவேல் வேந்தர்க்கு இனிது (இனி.35:2-4)
என்ற பாடலடிகள் மூலம் உணரமுடிகிறது.
முடிவுரை
இனியவை நாற்பதில் அரசியல் நெறிகளாக மன்னனின் ஆட்சி செங்கோன்மை ஆக இருக்க வேண்டும் என்பது பற்றி அறியமுடிகிறது. மன்னனின் நடுநிலைமை பற்றி உணரமுடிகிறது. போர் பற்றியும், படைகள் பற்றியும், சிற்றாள் பற்றியும், படைக்கலன் பற்றியும், மெய்க்காப்பாளர் பற்றியும், அரசனின் அன்பு பற்றியும், ஒற்றறிதல் பற்றியும் அறியமுடிகிறது.