Switch Language:   English | தமிழ்

    கல்வியின் மேன்மைகள்

    சில நாளில் தோன்றிச் சில நாளிருந்து சிலநாளில் மறைந்து போவதாகிய இம் மக்களுடம்பில் பிறந்த நாம் எந்த வகையான செல்வத்தை பெறுவதற்கு முயலல் வேண்டுமென்றால் நம் உடம்பு அழிந்தாலும் நமது உயிரோடு சேர்ந்து நம்மை எல்லாப் பிறப்புக்களிலும் தொடர்ந்து வருவதாய் உள்ள அழிவில்லாப் பெருஞ்செல்வமாகிய கல்விச் செல்வத்தையே அடைவதற்குக் கண்ணும் கருத்துமாய் இருக்க வேண்டும். கல்வியானது வௌ்ளத்தால் அழியாது; வெந்தழலால் வேகாது; கள்வர்களால் கொள்ளையடிக்க முடியாது; கொடுக்க கொடுக்கப் பெருகுமே தவிர குறையாது; பாதுகாப்பும் எளிது.

            “கல்வி கரையில் கற்பவர்; நாள்சில
             மெல்ல நினைக்கிற் பிணிபல.”
    என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பல்பிணிச் சிற்றறிவுடைய மாந்தர் கரைதுறையற்ற கல்வியை முற்றாகக் கற்றல் முடியாதென்பது இதன் பொருள். எனினும் பரந்துபட்ட இக்கல்வியில் சிற்றளவையேனும் கற்றுச் சிந்தையிளருத்தி, அறிவுச் செல்வத்தைச் சிரத்தையுடன் தேடும்போதே மனித வாழ்வு செழிப்படைகிறது. மனிதன் மனிதனாகிறான். கல்வியின் மேன்மை பற்றி அன்று தொட்டு இன்று வரை பல நூல்களும் பழமொழிகளும் பறைசாற்றி வருகின்றன.

            “இளமையில் கல்வி சிலையில் எழுத்து”
    என்பர். அதாவது நாம் இளவயதிலிருந்தே கல்வியைக் கற்று வந்தால் அது நம் எதிர்காலத்தின் ஆணி வேராக திகழும். கல்வியின் மேன்மையையும் சிறப்பையும் பற்றி அறிந்ததாலன்றோ திருவள்ளுவரும் உலகப் பொதுமறையாம் திருக்குறளில் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறார். கல்வி கற்றவர்களிற்கு மட்டுமே முகத்தில் கண்கள் இருப்பதாகவும் பேதையருக்கு கண்களிற்குப் பதிலாக முகத்தில் இரு புண்களே உள்ளன என்றும் சிற்றறிவுடையவர்களிற்கு நுட்பமான அறிவு சில வேளைகளில் காணப்பட்டாலும் அதனை அறிவென பெரியார் கொள்ளமாட்டார்கள் எனவும் கல்வி கற்றோரே மனிதர்கள் அன்றி கற்காதோர் விலங்குகளே எனவும் திருவள்ளுவர் கல்வியின் மேன்மை பற்றி வலியுறுத்துகின்றார்.

        இங்கனம் கல்வியை பற்றி பவர் அறிந்திருந்தும் அறியாமை எனும் இருளில் அகப்பட்டவர்களாகி நம் அறிவை இழந்து அழியாச் செல்வத்தை அடைய முயாலாமல் நிலையின்றி அழிந்து போகும் பொருட்களையே நிலையாகப் பிழைபட நினைத்து அவற்றை பெறுவதிலும் அவற்றை நுகர்வதிலுமே நமது காலத்தைக் கழித்து வருகின்றோம். இதனால் இம்மையிற் பழியும் மறுமையின் துன்பமும் எய்துகின்றோம். ஆனால் இவற்றையெல்லாம் துறந்து கல்வியில் நமது நாட்டத்தைச் செலுத்தினால் அதனால் உண்டாகும் மேன்மை நிலையில்லாச் செல்வத்திலிருந்து கிடைக்கும் நன்மையை விடப் பன்மடங்கு பெரியதாகும். இங்கனம் கல்வியின் உயர்ச்சியை சொல்லப் போன ஔவையார் கற்றோனை மன்னனுடன் ஒப்பிடுகின்றார்.

             “ மன்னனும் மாசறக் கற்றோனை சீர் தூக்கின்
              மன்னனிற் கற்றோன் சிறப்புடையன் - மன்னனுக்குத்
              தன்தேச மல்லாற் சிறப்பில்லைக் கற்றோர்குச்
              சென்றவிட மெல்லாஞ் சிறப்பு ”
        இங்கனம் மன்னனையும் கற்றோனையும் ஒப்பிடுகையில் மன்னனுக்குத் தன் தேசத்தில் மட்டும் தான் சிறப்பு. ஆனால் கற்றோனுக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு. இனி கல்வியை பெறுவதற்கு நாம் மிகவும் முயன்று வருவதோடு உயர்ந்த நூல்களையும் கற்று வரும் போதே அந்நூல்களிற் சொல்லப்பட்ட நல்லொழுக்கங்களிலும் நாம் பழகி வருதல் வேண்டும். அதற்காக கல்வி கிடைத்ததையிட்டு செருக்கு அடையாமல் பணிந்த சொல்லும் பணிந்த செயலும் உடையமையாய் எல்லா உயிர்களிடத்தும் அன்பும் இரக்கமுங்காட்டி நல்லொழுக்கத்தில் வாழ்ந்து, உலக வாழ்க்கையை இனிது நடாத்தி நாமும் பயன் பெற்றுப் பிறஉயிர்களையும் பயன்பெறச் செய்து வருதலே நாம் பெற்ற கல்வியைப் பயன்படுத்தும் முறையாகும்.

        கல்வியினாலேயே மனிதன் அறிவினால் மட்டும்மன்றி உள்ளத்தாலும் உயருகிறான். வாழ்வினையும் வாழ்வின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியங்கள், கட்டுரைகள், கவிதைகள் முதலானவற்றைப் படிப்பதால் வாழ்வில் தான் கண்டறியாத புதிய புதிய மாந்தரோடு பழகுகிறான்; அவர்களின் குணாதியங்களை உணருகிறான்; வாழ்வின் பல கோணங்களையும் காணுகிறான்; பல பல புதிய அனுபவங்களைப் பெறுகிறான்; நல்லன எவை, தீயவை எவை எனப் பகுத்துணரும் பண்பை பெறுகிறான். இதனால் அவனது உள்ளம் விரிவடைகிறது, பண்படுகிறது. ஏதிர்கால வாழ்வுக்குத் தம்மை ஆயத்தஞ் செய்து கொள்ளும் உன்னத நிலையை அடையப் பெறுகிறான்.