Switch Language:   English | தமிழ்

    வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்

    வாழ்க்கை முழுவதும் ஒரு மனிதன் கற்றுக்கொண்டே இருக்கிறான்.தினம் தினம் புது புது விடயங்களை ஒவ்வொரு மனிதனும் அறிய வேண்டியுள்ளது. 'நாம் கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு’ என்ற யதார்த்தத்தை நாம் எல்லோரும் புரிந்து கொண்டிருக்கிறோம். இதன் படி நாம் கற்க வேண்டியது ஏராளம்.ஆகவே வாழ் நாள் முழுவதும் நாம் கற்பதற்கு வாசிப்புப் பழக்கம் மிக மிக அவசியமாகின்றது.

    இதனால் நாம் எல்லோரும் வாசிப்பின் அடிப்படைகளை விளங்கிக் கொண்டவர்களாக வாசிப்புப் பண்பாட்டைக் கொண்டவர்களாக இருப்பதால் எமது அறிவையும் ஆற்றலையும் விருத்தி செய்து கொள்ள முடியும். இதன் மூலமே நாம் சமூக இயங்கு நிலையில் தப்பித்து வாழ முடியும். வாசிப்பதன் ஊடாக நாம் யார் என்பதை அடையாளப்படுத்திக் கொள்ளவும் எமது பண்பாட்டையும் பண்பாட்டு அடையாளங்களையும் இனங்காணவும் முடியும். வாசிப்பு மனிதனை வலுவுள்ளவனாக்குவதோடு அவன் பற்றிய வரலாற்று அசைவியக்கத்தையும் புலப்படுத்துகிறது.

    குறிப்பாக மாணவப்பருவத்தில் வாசிப்புப்பழக்கத்தை கொணடிருப்பது அவர்களின் அறிவு மற்றும் ஆற்றல் மேம்பாட்டுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும். இன்று நாம் போற்றும் உலகத் தலைவர்கள் அனைவரும் சிறந்த வாசிப்புப்பழக்கமுடையவர்கள். தாம் சார்ந்த துறையோடு மட்டுமல்லாது பலதுறைகளையும் வாசித்து தம்மறிவை வளர்த்துக் கொண்டவர்கள்.அதனாலேயே அவர்களால் உலகத் தலைவர்களாக முடிந்தது.மகாத்மா காந்தி,நேரு,பேரறிஞர்அண்ணா,ஆபிரகாம்லிங்கன்,லெனின்,மார்க்ஸ் என்று பல தலைவர்களை நாம் இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

    ஆகவே பாடசாலைகளில் வாசிப்பு பழக்கத்தை ஊக்கிவித்தல் வேண்டும்.பத்திரிகைகளை தினமும் வாசிக்கின்ற பழக்கத்தை பெற்றோரும் ,ஆசிரியர்களும் ஊக்கிவிக்க வேண்டும்.பாடசாலை நூலகத்தை நன்கு திட்டமிட்டு அழகாக வைத்திருக்க வேண்டும்.மாணவர்கள் நூலகம் சென்று தேடி வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.வாசிப்பு ஒருவருக்கு விலை மதிப்பில்லாத சாதனமாக எப்போதும் இருக்கும்.நூலகங்கள் வாசிப்பு பழக்கத்துக்கு மாணவர்களை இழுத்துச் செல்கின்ற ஒரு களமாகவும் ,வாசிப்பு கலாச்சாரத்தை ஊக்கப்படுத்துகின்ற மையமாகவும் அமைதல் வேண்டும்.

    புதிய தொழில் நுட்ப வளர்ச்சி வாசிப்பு பழக்கத்தை மாற்றியமைத்துள்ளது.புதிய ஊடக வளர்ச்சி இதற்கான முக்கிய காரணமாக அமைந்துள்ளது.இந்த நவீன வளர்ச்சி ஒருவருடைய வாழ்க்கையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது எனலாம்.இதனால் புத்தகங்களை வாசிக்கின்ற பழக்கம் வேகமாக குறைவடைந்து வருகின்றது.இப்போதுள்ள மாணவர் சமூகம் வாசிக்கின்ற ஆற்றல் அல்லது திறன் குறைந்தவர்களாக மாறிவருகின்றார்கள்.இதற்கான காரணமாக தற்போது மாணவர்கள் அதிகமான நேரத்தை இலத்திரனியல் ஊடகங்களில் செலவிடுவது சுட்டிக்காட்டப்படுகிறது.

    இணைத்தளங்களைப்பார்வையிடுதல்,கைபேசிகளை அதிகளவு பயன்படுத்துதல்.குறுந்தகவல்கள் அனுப்பதல்,சமூக வலைத்தளங்களான முகப்புத்தகங்கள் மற்றும் ருவிட்டர்,புளக்ஸ் போன்றவற்றை பயன்படுத்துவதற்கும் பாடல்கள் கேட்டல்,சினிமா பார்த்தல் போன்றவற்றுக்கு அதிக நேரத்தை மாணவர்கள் செலவிடுகிறார்கள். வீடியோ பார்த்தல் குறிப்பாக கார்ட்டுன் பார்த்தல்,வீடியோ கேம்ஸ் விளையாடுதல் போன்றவற்றை இன்று நாகரிகமான செயலாகவும்,; அமைதியாக இருந்து புத்தகம் வாசித்தல்,நூலகத்துக்கு செல்லுதல் போன்றன பழைய நாகரிகம் குறைந்த செயலாக நோக்கப்படுவதையும் இன்று அவதானிக்கலாம். சிறுவர்கள் தொலைக்காட்சிப்பெட்டியை மூடிவைக்கும் வரைக்கும் தமது இலட்சியங்களை அடைய முடியாது என்று சொல்லப்படுகின்றது.

    அமைதியாக இருந்து வாசித்தல் தொலைக்காட்சி பார்த்தலை விட அதிக செயல் திறன் உள்ளதாக அமையுமென்று ஆய்வுகள் கூறுகின்றன. சிறுவர்கள் பாடத்திட்டம் சம்பந்தமான புத்தகங்களையும் கேள்விகளையும் வாசிப்பதை விட புதிய விடயங்களை வாசிப்பதில் ஆர்வமும் மகிழ்வும் கொண்டவர்களாக காணப்படுகிறார்கள். ஒரு வகையில் பாடத்திட்டம் சம்பந்தமான விடயங்களை மட்டுமே வாசிக்க வற்புறுத்துவதால் அல்லது மட்டுப்படுத்துவதால் வாசிப்பில் மீது மாணவர்களுக்கு வெறுப்பேற்படுகின்றது என்பதையும் மறுப்பதற்கில்லை. ஆகவே வாசிப்பப்பழக்கத்தை அதிகரிப்பதற்கு நாம் முயற்சிகளை கண்டறிய வேண்டியவர்களாக உள்ளோம்.

    இங்கு கவலைக்குரிய விடயமென்னவென்றால் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதற்கான எந்த முயற்சியும் எமது பாடசாலை பாடத்திட்டத்தில் உள்ளடக்கப்படவில்லை என்பதாகும். போட்டி மனப்பாங்கு மிக்கதான கல்விச் சூழலில் பெற்றோர்கள் பரீட்சைக்கான ஆயத்தப்படுத்தலில் தான் அதிகம் கவனம் செலுத்துகிறார்களே தவிர சிறுவர்களின் அறிவு வளர்ச்சிக்கான வாசிப்பு பழக்கத்தை அதிகரிப்பதற்கு முயற்சிகளை எடுப்பதில்லையென்றே சொல்லலாம்.

    பெற்றோர்களிடம் வாசிப்புப்பழக்கம் இல்லாததால் பிள்ளைகளிடம் அதனை வலியுறுத்த முடியாமல் உள்ளது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகின்றது. இதேவேளை இளைஞர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகள் போன்றோரிடமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் இருப்பது வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளதையும் இனங்காண முடியும். ஆகவே பாடசாலைகள் வருடாந்தம் வாசிப்பை ஊக்குவிப்பதற்கான செயற்திட்டங்களை அதிகரிப்பதோடு பாடசாலை நூலகத்தை மாணவர்களைக் கவரக் கூடியதாக ஒழுங்கு செய்தல் அவசியமாகின்றது. இதன் மூலம் பூரண மனிதனை உருவாக்கும் உன்னத பணியை செய்ய முடியும்.