சூரியனை கடக்கும் புதன்!
- Editor
- Category: விஞ்ஞானம்
- Hits: 322
சூரிய மண்டலத்தில் உள்ள மிகச் சிறிய கோளான புதன், சூரியனுக்கு முன்னால் கடக்கவிருக்கிறது. இது வரும் திங்கள், 9ம் தேதியன்று நடக்கும். இந்த நிகழ்வு மீண்டும், 2019 நவம்பரில்தான் நிகழும். ஆனால் அதை இலங்கையில் உள்ளவர்கள், 2032 வரை பார்க்க முடியாது.
மே 9 அன்று, சூரியனை புதன் கடக்கும் நிகழ்வு இலங்கையில் இருப்பவர்களுக்கு அபூர்வமானது என்றே சொல்லவேண்டும்.
மே 9 அன்று மாலை, 4:15 முதல் சூரியனை புதன் கடக்கும் காட்சியை இலங்கையில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் பார்க்க முடியும் என்று இந்திய வானவியல் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையிலிருந்து பார்ப்பவர்களுக்கு, சூரியனின் பெரிய வட்டத்தில், கிழக்கிலிருந்து மேற்காக புதன் சிறு புள்ளி போல நகர்வது தெரியும்.
சூரியன் மேற்கே மறையும்போது புதன், சூரியனின் மேல்புறமிருந்து கீழ்நோக்கி நகர்வது தெரியும்.
மாலை, 6:20 மணியளவில் சூரியனின் கால்வாசி பகுதியை புதன் தாண்டியிருக்கும். இரவு, 8:27 மணியளவில் சூரியனின் மையப் பகுதிக்கு வந்திருக்கும். ஆனால், அதற்குள் இலங்கையில் இரவு வந்து வெகுநேரமாகியிருக்கும்.
இந்த காட்சியை காண்பதற்காக யாரும் நேரடியாக சூரியனை பார்க்கக்கூடாது. அதேபோல வழக்கமான பைனாகுலர்கள், தொலைநோக்கிகள் மூலமும் பார்க்கக்கூடாது. சூரியனின் பிரகாசம் கண்களை பாதிக்கும். கிரகணத்தை பார்ப்பது போல கறுப்பு கண்ணாடி மூலமோ, அல்லது ஊசித் துளை கேமரா மூலமோ தான் பார்க்க வேண்டும்.