இன்று மே 1 உலக தொழிலாளர் தினம்
- MSF.Nadhwa
- Category: விசேட தினங்கள்
- Hits: 698
பார் முழுக்க பறந்துபட்ட தொழிலாளர்களின் வலிகளுக்கு மருந்து போட்ட நன்னாள். உழைக்கும் வர்க்கத்திற்கான உயரிய நாள்.
காலவரையற்ற உழைப்பு, மிருகத்தனமான, கொத்தடிமைத்தனமான இன்னல்களில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ள தொழிலாளர் அமைப்புகள் மேற்கொண்ட தொடர் போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் கணக்கற்றவை.
தொழிலாளர் கூட்டத்தின் முதல் உரிமைக்குரல் 1806ஆம் ஆண்டு அமெரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் ஒலித்தது. அதுவரை நடைமுறையில் இருந்த 12 முதல் 20 மணி நேர வரையிலான அசுரத்தனமான உடல் உழைப்பை எதிர்த்து 10மணி வேலை நேரம் கேட்டு ஒலித்தக் குரல்கள் முதலாளி வர்க்கத்தால் ஒழித்துக் கட்டப்பட்டன. 30 வருடங்கள் உறங்குவதாய்த் தெரிந்த உணர்வுகள் 1837-ல் மீண்டும் புது எழுச்சி கண்டது. இம்முறை சீற்றம் கொண்டது. சீறி எழுந்தது. முதலாளி வர்க்கத்தின் செவிட்டு செவிப்பறைகளை அடித்து கிழித்தது, ஆட வைத்தது விளைவு.
பாகுபாட்டோடு ஓர் சட்டம் அமெரிக்காவில் நடைமுறைபடுத்தப்பட்டது. அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு மட்டும் 10 மணிநேரம் வகுக்கப்பட்டது. மற்ற தொழிலாளர்கள் கைவிடப்பட்டவர்கள் ஆயினர். இதனால் புரட்சியின் வேகம் மீண்டும் புதுப்பொலிவு கண்டது. வேகம் கொண்டது. 1856-ல் தொழிலாளர் வர்க்கத்தின் தொடர் போராட்டம் மே 1 அன்று விடியல் கண்டது.
8 மணி நேர வேலை 8 மணி நேர மன மகிழ்வு… 8 மணி நேர உறக்கம்.. மே 1 தொழிலாளர்களின் வெற்றி நாளாய் விடியல் நாளாய் விடுமுறை நாளாய் ஆஸ்திரேலியாவில் அவதாரம் கண்டது. அந்த விடியல் உலகம் முழுக்க வியாபிக்க 33 ஆண்டுகள் பிடித்தது. 1889ஆம் ஆண்டு உலகம் முழுக்க ஒட்டுமொத்த தொழிலார்களின் புரட்சி விழா கொண்டாடப்பட்டது.
‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்பதே மே தினம் அளித்த உரிமை முழக்கமாகும்.
1889 மே 1 இலிருந்து இன்று வரை ஒவ்வொராண்டும் மே 1ம் தேதி சர்வதேச தொழிலாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகின்றது.