தூக்கம் இல்லாவிட்டால் முடி கொட்டும்!
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 350
காலையில எழுந்திருக்கும்போதே தலகாணியில முடி உதிர்ந்து கிடக்கு... குளிக்கும்போது கொத்துக் கொத்தா முடி வருது... தலை வாரும் போது சீப்பு முழுக்க முடி... என்ன பிரச்னைன்னே தெரியலை...’ என கவலைப்படுகிறவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம்.
முதல் நாள் இரவு நீங்கள் சரியாக தூங்கவில்லை என்றால் அடுத்த நாள் இப்படி முடி உதிர்வுப் பிரச்னையை எதிர்கொள்வீர்கள். நல்ல தூக்கம் என்பது கூந்தல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். அது மட்டுமல்ல... தூங்கும்போது கூந்தலை கன்னாபின்னாவென வைத்துக் கொண்டு படுக்கக்கூடாது. காலையில் எழுந்ததும் கூந்தல் சிக்கின்றியும் கையாள எளிதாகவும் இருக்க சில டிப்ஸ்...
தூங்கச் செல்வதற்கு முன் கூந்தலைப் பிரித்து நன்கு வாரி, சிக்கு எடுத்து விடுவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால் அதை நன்கு வாரி, தளர்வாகப் பின்னிக் கொண்டு தூங்கச் செல்லுங்கள். தூங்கும் போது தலையில் ஹேர் பேண்ட், கிளிப், ஹேர் பின் என எதுவும் இருக்க வேண்டாம்.
கூந்தலை எப்போதும் டைட்டாக கட்டிக் கொண்டோ, பின்னிக் கொண்டோ தூங்கச் செல்லாதீர்கள். கூந்தல் ஈரமாக இருந்தால் அத்துடன் தூங்காதீர்கள். கூந்தலில் ஹென்னா, ஹேர் பேக் என எதையும் தடவிக் கொண்டு தூங்கச் செல்லாதீர்கள். எப்போதும் தூங்கச் செல்வதற்கு முன் தலையில் எண்ணெய் தடவி, மிதமாக மசாஜ் செய்துவிட்டு, மறுநாள் காலையில் அலசிவிடுவதே சிறந்தது. அப்படி எண்ணெய் வைக்கிற போது அதிகமாக வைக்காமல் மிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.
கூந்தலை விரித்துப் போட்டுக் கொண்டு தூங்காதீர்கள். கூடிய வரையில் 2 நாட்களுக்கு ஒருமுறை உங்கள் தலையணை உறையை மாற்றுங்கள். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதையும், போதுமான அளவு தூங்குவதையும் வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.