பார்வை பத்திரம்
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 557
கண்ணில் ஒளி இல்லை என்றால் வாழ்வில் ஒளி இல்லை என்று சொல்வார்கள். இது முற்றிலும் உண்மை. கண்களை மூடிக்கொண்டு அலமாரிச் சாவியைத் தேடி எடுங்கள். அப்போது தெரியும் கண்களின் அருமை.கண் ஒரு உயிருள்ள கேமரா போன்றது. நாம் பார்க்கின்ற பொருளிலிருந்து வரும் ஒளிக்கீற்று கார்னியாவைத் துளைத்து, கண்பாவை வழியாக லென்ஸ் மீது விழுகிறது. இந்த லென்ஸ் ஒரு குவிலென்ஸ். ஆகவே ஒளிக்கீற்றைக் குவித்து விழித்திரையில் விழச்செய்கிறது.
அப்போது அங்கு தலைகீழாக ஒரு பிம்பம் உண்டாகின்றது. அந்த பிம்பத்தைப் பற்றிய செய்திகளை கண் நரம்பு மூளைக்கு எடுத்துச் செல்கிறது. மூளை நாம் பார்க்கின்ற பொருளின் தன்மையை உணர வைக்கிறது. இதை நாம் ‘பார்வை’ என்கிறோம். இ்ந்தப் பாதையில் உள்ள உறுப்புகளில் ஏதேனும் கோளாறு ஏற்படுமானால் அது பார்வையைப் பாதிக்கும். அப்போது கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கோணல் பார்வை, வெள்ளெழுத்து ஆகிய பார்வைக் கோளாறுகள் (Refractory Errors) ஏற்படும்.
கிட்டப்பார்வை
கிட்டப்பார்வை (Myopia) ஏற்பட்டோருக்கு அருகில் உள்ள பொருட்கள் நன்கு தெரியும். தூரத்தில் உள்ள பொருட்கள் சரியாகத் தெரியாது. உதாரணமாக, ஆசிரியர் கரும்பலகையில் எழுதுவது பள்ளிக் குழந்தைக்குத் தெரியாது. இது கிட்டப்பார்வைக் குறைபாடுதான். காரணம், நாம் பார்க்கின்ற பொருள் அருகில் இருந்தால், அதன் பிம்பம் விழித்திரையில் சரியாக விழும். தூரத்தில் இருந்தால், விழித்திரைக்கு முன்பாகவே விழுந்துவிடும்.
இதனால் கிட்டப்பார்வைக் கோளாறு தோன்றுகிறது. லென்ஸிலோ விழிக்கோளத் திசுக்களிலோ ஏற்படுகின்ற குறைபாடு கிட்டப்பார்வைக்கான அடிப்படை காரணம். இதனை சரிசெய்ய (மைனஸ் பவர் உடைய) குழிலென்ஸ் (Concave lens) உள்ள கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கண்ணுக்குள் புகும் ஒளிக்கதிர்களை விரித்து விழித்திரையில் சரியாக விழச்செய்ய முடியும். கண் தெளிவாகத் தெரியும்.
தூரப்பார்வை
தூரப்பார்வை (Hypermetropia) ஏற்பட்டோருக்கு தூரத்தில் உள்ள பொருட்கள் நன்கு தெரியும். அருகில் உள்ள பொருட்கள் சரியாகத் தெரியாது. நாம் பார்க்கின்ற பொருட்கள் தூரத்தில் இருந்தால் அவற்றின் பிம்பங்கள் விழித்திரையில் சரியாக விழும். அருகில் இருந்தால் விழித்திரைக்குப் பின்னால் விழுந்துவிடும். இதனால் தூரப்பார்வைக் கோளாறு தோன்றுகிறது. லென்ஸில் ஏற்படுகின்ற குறைபாடுதான் தூரப்பார்வைக்கான அடிப்படை காரணம். இதனை சரிசெய்ய (பிளஸ் பவர் உடைய) குவிலென்ஸ் (Convex lens) உள்ள கண்ணாடி அணிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் கண்ணுக்குள் புகும் ஒளிக்கதிர்களைக் குவித்து விழித்திரையில் சரியாக விழச்செய்ய முடியும். பார்வை சரியாகும்
கோணல் பார்வை
சில ஒளிக்கதிர்கள் விழித்திரையிலும் சில ஒளிக்கதிர்கள் விழித்திரைக்குப் பின்போ, முன்போ விழுமானால் காட்சி தெளிவாகத் தெரியாது. கண்ணை சிரமப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். சிலர் தலையைச் சாய்த்து ஓரக்கண்ணால் பார்ப்பார்கள். இதைக் கோணல் பார்வை அல்லது சிதறல் பார்வை (Astigmatism) என்கிறோம். கார்னியாவின் வடிவத்தில் உண்டாகின்ற கோளாறுதான் இதற்கு முக்கியக் காரணம். இதை சரி செய்ய “பைஃபோக்கல் லென்ஸ்” (Bifocal lens) உடைய கண்ணாடி உதவும்.
வெள்ளெழுத்து நாற்பது வயதில் தொடங்கும்
வெள்ளெழுத்து (Presbyopia) ஒரு நோயல்ல. இயற்கையில் நிகழ்கின்ற ஒரு பிழை. நாம் வானத்தின் நட்சத்திரத்தையும் பார்த்துவிட்டு உடனே கையில் இருக்கும் புத்தகத்தையும் படிக்க முடிகிறதென்றால், அதற்கு நம் லென்ஸின் மீள்திறன் (Elasticity) தான் காரணம். ஆனால், வயதாக ஆக லென்ஸ் கடினமாகிவிடுவதால், மீள்திறன் குறைந்து இந்த வேலையைச் செய்ய முடியாமல் போகிறது. இதனால் நாற்பது வயதில் செய்தித்தாள் படிப்பது சிரமமாகிறது. இதுதான் வெள்ளெழுத்து. இதை சரிசெய்ய ‘ரீடிங் கிளாஸ்’ எனும் குவிலென்ஸ் உடைய கண்ணாடியை அணிந்துகொள்ள வேண்டும். ஏற்கனவே கண்ணாடி அணிந்துள்ளவர்கள் தூரப்பார்வைக்கும் படிப்பதற்குமாக பைபோக்கல் கண்ணாடி அணிந்து கொள்ளலாம்.
மேற்சொன்ன நான்கு கோளாறுகளுக்கும் இப்போது கண்ணாடி அணிந்து கொள்வதற்குப் பதிலாக கான்டாக்ட் லென்ஸ் அணிந்துகொள்ளலாம். கண்ணில் லென்ஸ் போட்டுள்ளது வெளியில் தெரியாது. முக்கியமாக பெண்களின் கண் அழகைப் பாதுகாக்க கான்டாக்ட் லென்ஸ் உதவுகிறது. சமீபகாலமாக இதையும் தாண்டி, லேசர் சிகிச்சை மூலமும் இவற்றைக் குணப்படுத்த முடிகிறது.
கார்னியா சிதைவு
கண்ணின் வெளிப்பக்கத்தில் கருவிழி தெரிகிற இடத்தில் கார்னியா உள்ளது. இதில் நோய்த்தொற்று ஏற்பட்டால், கான்டாக்ட் லென்ஸ் அலர்ஜி ஆனால், கண்ணில் அலர்ஜி ஏற்பட்டால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை குறையும். இவற்றால் ஏற்படுகிற பாதிப்புகள் தேவையான மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சரியாகிவிடும். கார்னியாவில் அம்மைக் கொப்புளங்கள் ஏற்படுமானால், விபத்து காரணமாக அடிபட்டால், கடுமையான ரசாயனம் விழுந்தால் அப்போது அது நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டுவிடும். அதற்கு ‘கார்னியா மாற்று அறுவை சிகிச்சை’ தேவைப்படும். கண் தானம் செய்கிறவர்களிடமிருந்து பெறப்படும் கண்ணிலிருந்து கார்னியாவை அகற்றி தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துவதே கார்னியா மாற்று அறுவை சிகிச்சை.
கண் புரை
நாற்பது வயதுக்கு மேல் கண்ணில் வருகின்ற முக்கியமான பிரச்னை, கண் புரை (Cataract). வயதாகும்போது முடி நரைப்பது மாதிரி பளிங்குபோல் இருக்கின்ற லென்ஸில் புரதம் படிந்து அழுக்கேறிப் போவதால், ஒளிக்கதிர்கள் சரியாக ஊடுருவ முடியாமல் போகிறது. இதனால் விழித்திரையில் பதியும் பிம்பம் தெளிவில்லாமல் போய்விடும். அப்போது நாம் பார்க்கின்ற பொருட்கள் மங்கலாகத் தெரியும். முதலில் தூரத்தில் உள்ள பொருட்கள் சரியாகத் தெரியாது.
கொஞ்சம் கொஞ்சமாக பார்வை மங்கத் தொடங்கி, சில வருடங்களில் பார்வை முற்றிலும் குறைந்துவிடும். இவர்களுக்கு வெளிச்சத்தைப் பார்த்தால் கண் கூசும். கண்ணுக்கு நடுவில் கருப்பு வளையங்கள் தெரியும். கண்ணாடியின் பவரை அடிக்கடி மாற்ற வேண்டியது வரும். லென்ஸின் நிறம் மாறும். இதுதான் கண்புரை. இதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி. புரை உடைய லென்ஸை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ஐஓஎல் (Intra Ocular Lens IOL) எனும் செயற்கை லென்ஸை வைத்துவிடுவதால் பார்வை மீண்டும் கிடைத்துவிடும். இன்னொன்று, தாய் கர்ப்பமாக இருக்கும்போது அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது நெருங்கிய உறவில் திருமணம் செய்திருந்தால் இது பிறவியிலேயே குழந்தைகளுக்கும் வரலாம்.
கிளக்கோமா
நமக்கு ரத்த அழுத்தம் இருப்பது போலவே, கண்ணிலும் ஒருவித அழுத்தம் உள்ளது. கண்ணின் முன்பகுதியில் கார்னியாவுக்கும் லென்ஸுக்கும் இடையில் ‘அக்குவஸ் ஹியூமர்’ (Aqueous humour) எனும் திரவம் சுரக்கிறது. இதில் இருக்கின்ற அழுத்தம் ‘கண் நீர் அழுத்தம்’ (Intra Ocular Pressure) என்று அழைக்கப்படுகிறது. இதன் இயல்பான அளவு 15 முதல் 20 மி.மீ. பாதரச அளவு. இது சில காரணங்களால் படிப்படியாக அதிகரிக்கும்போது, பார்வை நரம்பால் அதைத் தாங்கிக்கொள்ள முடியாது.
இதனால் ஏற்படுகின்ற கோளாறுக்கு ‘கிளக்கோமா’ (Glaucoma) என்று பெயர். இது இரண்டு வகைப்படும். 1. திறந்த கோண கண் அழுத்த நோய் 2. மூடிய கோண கண் அழுத்த நோய். திறந்த கோண கண் அழுத்த நோய் மெல்ல மெல்ல முன்னேறி பார்வையைப் பறிக்கும். மூடிய கோண கண் அழுத்த நோய் சட்டென்று உருவாகக் கூடியது. மிகுந்த கண் வலியையும் தலைவலியையும் உண்டாக்கி உடனடியாக பார்வை இழப்பை ஏற்படுத்தக்கூடியது.
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மற்றும் ஸ்டீராய்டு மாத்திரைகளை அதிகம் பயன்படுத்துவோருக்கு கிளக்கோமா பாதிப்பு வருகின்ற வாய்ப்பு அதிகம். கண்ணில் அடிபடுவது, கண்ணில் சதை வளர்ச்சி போன்றவையும் இதற்குக் காரணமாகலாம். பொதுவாக கிளக்கோமா ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. விளக்கைச் சுற்றி பல வட்டங்கள் தெரிவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. ஆனால், இது எல்லோருக்கும் இருக்கும் என்று உறுதி கூற முடியாது.
வழக்கமான கண் பரிசோதனையில் டோனோமீட்டர், கோனியாஸ்கோப் (Gonioscope) கருவி மூலம் கண் நீர் அழுத்தத்தை அளவிடும்போது இந்த நோய் இருப்பது தெரியவரும். ‘ஆப்டிகல் கொஹிரண்ஸ் டோமோகிராபி’ (Optical coherence tomography - OCT) எனும் அதிநவீன கருவியை கொண்டும் இதை அறியலாம். கிளக்கோமா ஆரம்பநிலையில் இருந்தால் கண் சொட்டு மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். நோய் முற்றிவிட்டது என்றால் லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.
விழித்திரைநோய் - ரெட்டினோபதி
ரெட்டினோபதி (Retinopathy) என்பது சர்க்கரை நோயாளிகளுக்கும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் வருகின்ற முக்கியமான கண் பாதிப்பு. விழித்திரையில் உள்ள ரத்தக்குழாய்கள் பலவீனப்படுவதால் இது ஏற்படுகிறது. அப்போது விழித்திரையில் நீர்க்கசிவு அல்லது ரத்தக்கசிவு ஏற்படுகிறது. இதனால் பார்வை குறைகிறது அல்லது பறிபோகிறது. இது ஆரம்பநிலையில் இருந்தால் லேசர் சிகிச்சையில் குணப்படுத்திவிடலாம். முற்றிய நிலையில் இதை குணப்படுத்துவது சிரமம்.
இதுவரை சொன்ன நோய்கள் தவிர கண் அழற்சி நோய்கள், கண்கட்டி, மாறுகண், கண் வறட்சி, நிறக்குருடு, மாலைக்கண் நோய், புற்றுநோய், மேக்குலா சிதைவு போன்ற பல நோய்கள் கண்களைப் பாதிக்கும். இவற்றில் சில நோய்கள் பார்வையைப் பறிக்கும்.
ஊட்டச்சத்துக் குறைபாடு இருந்தால்?
இளம் வயதில் பார்வையை இழப்பது, விழிவெண்படலம் வறட்சி அடைவது, அதில் வெள்ளி நிறப் புள்ளிகள் தோன்றுவது, மாலைக்கண் நோய் ஏற்படுவது போன்றவற்றுக்கு வைட்டமின் ஏ குறைபாடுதான் முக்கியக் காரணம். வைட்டமின் ஏ மிகுந்த மீன் எண்ணெய் மாத்திரை, வைட்டமின் டானிக் போன்றவற்றால் இதைக் குணப்படுத்தி விடலாம். பச்சைக் காய்கறிகள், கீரைகள், பால், முட்டை, மீன், மீன் எண்ணெய், இறைச்சி, கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பீர்க்கங்காய், முருங்கைக்காய், அவரைக்காய், பப்பாளி, தக்காளி, மாம்பழம் முதலியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், பார்வை இழப்பைத் தடுத்துவிடலாம்.
கண்வலி வந்தால்?
பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகள் விழிவெண்படலத்தைத் தாக்கும்போது கண்வலி வரும். கண்கள் இரண்டும் ஆப்பிள் போல் சிவந்துவிடும். இமைகளை விலக்க முடியாதபடி பிசிறு வெளிப்படும். இமைகள் வீங்கும். உதாரணம், சென்னை கண் நோய் (Madras Eye). கண்களை அடிக்கடி சுத்தமாக கழுவி, மருத்துவர் யோசனைப்படி கண் சொட்டுமருந்து போட்டால் கண்வலி குணமாகும். இதனைத் தடுக்க, கண்வலி உள்ளவர்களுடன் நெருக்கமாக இருக்காதீர்கள். அவர்கள் பயன்படுத்திய சோப்பு, கைக்குட்டை, டவல் போன்றவற்றைப் பயன்படுத்தாதீர்கள்.
தூக்கம் முக்கியம்!
தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பது, கம்யூட்டர் முன்னால் மணிக்கணக்கில் அமர்ந் திருப்பது, ஸ்மார்ட் போன்களில் அதிக நேரத்தைச் செலவிடுவது போன்றவை கண்களைச் சோர்வடையச் செய்யும். இதனால் கண்கள் வறட்சி அடையும். பிறகு, விழித்தசைகளைப் பாதிக்கும்.இதனால் பார்வைக் கோளாறுகள் மற்றும் மாறுகண் வரக்கூடும்.
கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்
கண் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் கண்ணில் ஈரப்பசை இருக்க வேண்டும். இதற்குத்தான் இமைகள் அடிக்கடி மூடித் திறக்கின்றன. பொதுவாக ஒரு நிமிடத்தில் 12 முறை கண்களை சிமிட்டுவோம். தொடர்ந்து கம்ப்யூட்டரில் பணியாற்றுகிறவர்கள் 5 முறைதான் சிமிட்டுகிறார்கள். இதனால் கண்கள் வறண்டுவிடுகின்றன. சோர்வடைகின்றன. கண்ணில் எரிச்சல், உறுத்தல், தலைவலி போன்ற தொல்லைகள் வருகின்றன. இதற்கு ‘கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம்’ என்று பெயர். இதனைத் தவிர்க்க 20 நிமிடங்களுக்கு ஒருமுறை20 அடி தள்ளி இருக்கின்ற பொருளை 20 விநாடிகளுக்குப் பார்க்க வேண்டும். அல்லது அடிக்கடி இமைகளை இமைப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கண்களைக் காக்க பொதுவான வழிமுறைகள்
1. சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருந்தால் நல்ல கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளுங்கள்.
2. புத்தகம் படிக்கும்போது, புத்தகத்துக்கும் கண்களுக்கும் இடையில் உள்ள தூரம் 30 செ.மீ.இருக்க வேண்டும். புத்தகத்தை 45 டிகிரி கோணத்தில் வைத்துப் படிக்க வேண்டும். அரை மணிக்கொரு முறை புத்தகத்திலிருந்து பார்வையை விலக்கி, தொலைவில் உள்ள பொருளைப் பார்க்க வேண்டும். 40 நிமிடங்கள் தொடர்ந்து படித்தால், அடுத்த 5 நிமிடங்களுக்கு ஓய்வு தேவை.
3. புகை பிடிக்காதீர்கள். புகை கண்ணுக்கும் பகைதான்.
4. நெருங்கிய உறவில் திருமணம் செய்யாதீர்கள்.
5. அதிக வெயிலில் செல்லும்போது கண்ணுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்துகொள்ளுங்கள்.
6. இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும்போது, ‘வைசர்’ உடைய ஹெல்ெமட் அணிந்து கொள்ளுங்கள்.
7. போதிய பாதுகாப்பு இல்லாமல் பட்டாசு வெடிக்காதீர்கள்.
8. வீட்டில் சுண்ணாம்பு, அமிலம் போன்றவற்றை குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் வையுங்கள்.
9. மிகவும் குறைந்த வெளிச்சத்தில் அல்லது மிக அதிக வெளிச்சத்தில் படிப்பது கூடாது.
10. பொற்கொல்லர்கள், வெல்டிங் வேலை செய்பவர்கள், இரும்புப்பட்டறை, மர இழைப்பு இயந்திரங்களின் அருகில் வேலை செய்பவர்கள் கண்ணுக்குப் பாதுகாப்புக் கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டியது முக்கியம்.
11. ஆண்டுக்கு ஒருமுறை கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.