கரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்
- Editor
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 357
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என, கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் போன்ற இணைய நிறுவனங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலரான சாபு மேத்யூ ஜார்ஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது என, சுப்ரீம் கோர்ட், கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவை நிறைவேற்றாத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சாபு மேத்யூ ஜார்ஜ், கோர்ட் அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள், தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது.
ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அடிப்படையாக வைத்து நீக்கினால், அது தொடர்பான பல்வேறு செய்திகளும் நீக்கப்பட்டு விடும். தொழில்நுட்ப காரணங்களால், இதுபோன்ற விளம்பரங்களை நீக்குவது மிக கடினம் என, கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், தங்களுடைய உத்தரவில் கூறியுள்ளதாவது: கோர்ட் உத்தரவை நிறைவேற்ற நீங்கள் தயாராக இல்லை என்று தெரிகிறது. அதனால் தான், தொழில்நுட்ப காரணங்களை கூறுகிறீர்கள்; இதை ஏற்க முடியாது. கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரியப்படுத்துவதாக கூறும் விளம்பரங்களை உடனடியாக நீக்க வேண்டும். இதற்கான வழிமுறைகளை, மத்திய அரசு வகுத்து தர வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறினர். அதைத் தொடர்ந்து, வழக்கின் விசாரணை, வரும், 25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.