பல்லை பராமரித்தாலே பாதி நலம்!
- Editor
- Category: பற்கள் நலம்
- Hits: 1833
ஒரு குதிரையை பார்த்து அது நல்ல, உயர்ந்த சாதி குதிரையா என்பதை பரிசோதிக்க வேண்டுமாயின் மிருக வைத்தியர்கள் அதன் பல்லை பிடித்து தட்டிப் பார்ப்பார்கள். பல் வளமாக இருந்தால் அது ஒரு
ஆரோக்கியமான குதிரை என்ற முடிவிற்கு அவர்கள் வருவார்கள். அது போன்றே மனிதர்களும் ஆரோக்கியமாக இருக்கின்றார்களா என்பதை பரிசோதிக்கும் போது முதலில் அவனது பற்களை பரிசோதித்து பார்க்க வேண்டும். பற்கள் சொத்தை பிடித்திருந்தால் அல்லது பற்களில் ஓட்டை விழுந்திருந்தால் அல்லது பல் முரசுகள் தேய்ந்திருந்தால் அந்த மனிதன் ஆரோக்கியமான மனிதனாக மட்டுமன்றி சுத்தமான மனிதனாகவும் இருக்க முடியாது.
மேலும் நோயுள்ள பற்களை உடைய மனிதனுக்கு வயிற்று நோய், தலைவலி, உடல் அசதி, உணவு ஜீரணிக்காத தன்மை போன்ற பல நோய்கள் இருக்கும். இதனால் தான் மேற்கத்திய நாடுகளில் பிள்ளைகளுக்கும், பெரியவர்களுக்கும் அவர்கள் உடல் நலத்தை பரிசோதிக்கும் போது பற்களையும் மிகக் கவனமாக பரிசோதித்து பார்ப்பார்கள். அத்துடன் பற்களில் நோய் ஏற்பட்டு, அவைகளை பிடுங்கி எடுத்து மாற்றும்போது, பற்கள் மட்டுமல்ல முக அழகும் சேர்ந்து பாதிக்கப்படுகிறது. அதனால் பற்களை பாதுகாத்து பராமரிப்பதில் இப்போது அதிக விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில்பற்களைப்பற்றியகொஞ்சம்அறிந்துகொள்ள வேண்டியதகவல்கள் இதோ:.
* ஒரு குழந்தை பிறந்து ஆறுமாதம் ஆனதும் பல் மருத்துவரிடம் குழந்தையைக் கொண்டு காண்பிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை பெற்றோர்களிடம் பிரசவம் பார்க்கும் டாக்டர் ஏற்படுத்த வேண்டும். காரணம் குழந்தைகளுக்கு ஆறு மாதத்திற்கு பிறகுதான் பற்கள் முளைக்கும். அந்த பருவத்தில் குழந்தைகள் பாலைக் குடிப்பதும், உறங்குவதுமாகத்தான் இருப்பார்கள். சில குழந்தைகள் பாலை முழுவதும் விழுங்காமல் வாயில் வைத்துக் கொண்டே உறங்கி விடும். இதனால் அந்த குழந்தையின் பற்கள் முளைக்கும் போதே சொத்தைப் பல்லாக முளைக்கும். மேலும் ஈறுகளும் பலம் இழந்துவிடும் அபாயம் உண்டு. அதனால் பல் முளைக்கின்ற பருவத்திலேயே அருகில் இருக்கும் பல் மருத்துவரை அணுகி குழந்தையின் பற்களும், ஈறுகளும் எப்படி இருக்கிறது என்பதனை ஆராய்ந்து கொள்ள வேண்டும்.
இப்படிச் செய்வதால் ஆரம்பத்திலிருந்தே பற்கள் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல 6 மாதத்திற்கு ஒருமுறை பற்களைச் சோதித்துக் கொள்ள வேண்டும். அப்போது மருத்துவர்கள். குழந்தைக்கு எப்படி பிரஷ் செய்ய வேண்டும், எப்படி பாதுகாப்பாக பற்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் கற்றுத் தருவார்கள். காரணம் பெரும்பாலான தாய்மார்கள், குழந்தைகளுக்கு ஓரிரண்டு பற்கள்தானே இருக்கிறது என்று கைகளாலேயே தேய்த்துவிடுவார்கள். அது மிகவும் தவறான முறையாகும். ஓரிரண்டு பற்களுக்கும் ஏற்ற வகையில் பிரஷ்கள் இருக்கின்றன. அதனைக் கொண்டு பற்களை சுத்தம் செய்யும் போது. பல்லும், ஈறும் பாதுகாப்பாக இருக்கும். மேலும் அடுத்து அடுத்து வரும் பற்களும் பாதுகாப்பாகவே வரும். இதனால் சொத்தை பற்கள் வரும் பயமும் இல்லை.
* உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களின் அறிகுறிகளை காட்டும் தன்மை பற்களுக்கு உண்டு. ஈறுகளில் ஏற்படும் மாற்றங்கள், பற்களில் ஏற்படும் தேய்மானம், பல் முரசு நோய் போன்றவைகளை வைத்து அவருக்கு உடலில் சர்க்கரையின் அளவு அதிகரித்திருப்பதை உணர முடியும். பற்கள் மற்றும் ஈறுகளை பார்த்து வலிப்பு நோயின் பாதிப்புகளை கண்டறியலாம். இரைப்பை தொடர்புடைய நோய் இருப்பவர்களுக்கு வாய்ப்புண் மற்றும் வாய் நாற்றம் தோன்றும்.
* உணவு உண்பதற்கு, பேசுவதற்கு, சிரிப்பதற்கு, எடுப்பான அழகுக்கு அடிப்படையாக இருக்கும் பற்களை நாம் இழந்தால் பேசும்போது உச்சரிப்புகள் மாறும். உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து மென்று சாப்பிட முடியாது. எந்த பல்லை இழக்கிறோமோ அதற்கு அருகில் இருக்கும் பற்களும் நகர்ந்து தொந்தரவு தர தொடங்கிவிடும்.
* பல் சொத்தை, தேய்மானம், பல் கூச்சம், பல் காரை, உடைபட்டு வலி ஏற்படுதல், பல் ரத்தப்போக்கு, பல் இடப்பிறழ்ச்சி போன்றவை பற்களில் பொதுவாக ஏற்படும் பாதிப்புகளாகும். ஈறுகளால் ஏற்படும் எல்லா பாதிப்புகளும் பற் களையும் பாதிக்கும்.
* பல் சொத்தை ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பற்களில் ஒட்டும் வகையிலான இனிப்பு, சாக்லேட் வகைகளை அதிகம் உண்பது– சர்க்கரை கலந்த உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவது– மாவுப் பொருள் உணவுகளை அதிகம் உட்கொள்வது போன்றவைகளால் பற்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த பாதிப்புகளே பல் சொத்தைக்கு காரணமாகின்றன.
முறையாக பற்களை சுத்தப்படுத்தாமல் இருந்தாலும், வாய் சுகாதாரத்தை பேணாமல் இருந்தாலும் பல் சொத்தை தோன்றும். வாயில் ஏற்படும் வறட்சி மற்றும் புகைப்பிடித்தலும் பல்சொத்தைக்கு காரணமாகும்.
* இன்றையக் காலக்கட்டத்தில் பல பெரியவர்களும் சொத்தைப் பல் இருக்கிறது என்று தெரிந்தாலும் அதனை ஆரம்பத்திலேயே கவனித்து கொள்வதில்லை. இதனால் சிறிய அளவில் இருக்கும் பாக்டீரியாக்கள் பற்களுக்குள் இருக்கும் சொத்தையையே ஆகாரமாக உண்டு நாளடைவில் பற்களின் நரம்புகள் வரை சென்று பல்லை அழித்து விடுகிறது. சொத்தை பல் வந்துவிட்டால் ஆரம்பத்திலேயே மருத்துவரை அணுகினால். அவர்கள் பற்களைச் சுத்தம் செய்து அது மேலும் பரவாதபடி அடைத்துவிடுவார்கள்.
* அதுபோன்று சிலர் ஒரு முறை பல்லை சுத்தம் செய்து சொத்தையை அகற்றிவிட்டால் மீண்டும் வராது என்று நினைக்கிறார்கள், அப்படியில்லை. சொத்தையை அகற்றிய பிறகு அதனை 6 மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ சோதித்துக் கொள்ள வேண்டும். ஆனால் சிலர் சொத்தை பற்கள் சீழ் பிடித்து புரையோடிய பிறகுதான் வலி பொறுக்க முடியாமல் மருத்துவரிடம் செல்வார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பற்களை நீக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதுவே பற்கள் பலம் இழப்பதற்குள் வந்திருந்தால் பற்களைச் சுத்தம் செய்து இழக்காதபடி செய்துவிடலாம்.
* தற்போது குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் அதிகமான அளவு சர்க்கரை கலந்த உணவுகளையும், சாக்லேட், பிஸ்கெட், ரொட்டி போன்றவைகளை சாப்பிடுகிறார்கள். அதனால் அவர்களது பற்கள் பாதிக்கப்படுகின்றன. முறையான பல் பராமரிப்பு முறைகளை அவர்கள் மேற்கொள்ளாததாலும் பற்கள் பாதிக்கப்படுகின்றன. பற்களை காலை எழுந்த உடனும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் துலக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் பெரும்பாலும் பல் பாதிப்புகள் தோன்றாது.
* கர்ப்பகாலத்தில் பெண்கள் பல் மற்றும் ஈறுகளை பராமரிப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தவேண்டும். பல்லில் தொற்று ஏற்பட்டு அதை கவனிக்காமல் விட்டு விட்டால், தொப்புள்கொடி வழியாக குழந்தையையும் அந்த தொற்று தாக்கும். அதனால் குழந்தை பாதிக்கப்படும்.
* சர்க்கரை நோயாளிகளின் பற்கள் அதிகமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. அதனால் அவர்கள் பற்களை முறையாக பராமரிப்பதில் அதிக அக்கறைகாட்டவேண்டும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும்போது, உமிழ் நீரிலும் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இது வாயில் நுண்ணுயிர் கிருமிகளை அதிகரிக்கச் செய்யும். அப்போது பற்களையும், வாயையும் சரியாக பராமரிக்காவிட்டால் ஈறு வீக்கம், வாய் தொற்று போன்றவை ஏற்படக்கூடும். உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால், பாதிப்புகள் அச்சம் தரும் விதத்தில் அதிகரித்துவிடும். அதனால் எப்போதும் சர்க்கரையின் அளவை இயல்பாக வைத்திருப்பது நல்லது.