கோமாளிக் கழுதை.
- MSF.Nadhwa
- Category: கதைகள்
- Hits: 4195
எங்கிருந்தோ குரங்கொன்று வந்து ஒரு வீட்டுக்கூரையொன்றின் மீது ஏறி சேட்டைகள் பல செய்து கொண்டிருந்தது. இதனை அங்கிருந்த பெரியவர்கள், சிறியவர்கள் என அருகில் உள்ள அனைவரும் அந்த வீட்டின் முன் கூடிக் குரங்கின் வேடிக்கைகளைக் கண்டு கைதட்டி சிரித்து ரசித்துக்கொண்டிருந்தனர்.
இதனைக் கழுதை ஒன்று பார்த்துக்கொண்டிருந்தது. மக்கள் குரங்கை ரசிப்பது போல் தன்னையும் ரசிக்க வேண்டும் என நினைத்தது. தானும் குரங்கைப்போன்று கோமாளித்தனம் செய்தால், மக்கள் தன்னையும் கண்டு ரசிப்பார்கள் என்று எண்ணியது. உடனே அது கூரை ஒன்றின் மீது சிரமப்பட்டு ஏறிக்கொண்டது. அங்குமிங்குமாக நடந்து அமளி செய்தது. இதனால், வெளியே வந்து பார்த்த வீட்டின் சொந்தக்காரன் கோபமடைந்தான். பெரிய தடியொன்றை எடுத்துக் கழுதையை விரட்டினான். தடுமாறிய கழுதை கீழே விழுந்ததால் அதன் காலொன்று முறிந்து விட்டது. கழுதை நொண்டி நொண்டிச் சென்ற காட்சியைப் பார்த்து அனைவரும் ஏளனமாகக் கைகொட்டிச் சிரித்தனர். தன் நிலை மறந்து நடந்து கொண்டதால் தன் காலை உடைத்துக்கொண்ட கழுதை மனவேதனையுடன் அங்கிருந்து சென்றது.