‘வாட்ஸ் அப்’ல அனுப்புங்க
- Editor
- Category: சிறுகதைகள்
- Hits: 252
‘‘என்ன அக்கா – புது பொண்ணு கவுசல்யா என்ன செய்றா? ’’என்று கேட்டபடி லலிதாவின் வீட்டுக்குள் வந்தாள் கவிதா.
லலிதாவும் கவிதாவும் பக்கத்து பக்கத்து வீட்டில் வசித்து வருகின்றனர்.
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்கள்.
நடுத்தர குடும்பத்தை சேர்ந்த கருப்பசாமியின் மனைவி லலிதா. அவர்களது மகள் கவுசல்யா.
பி.காம் படித்துள்ள கவுசல்யா அமைதியானவள். யாரிடமும் ஒரு வார்த்தைக்கு மேல் பேசமாட்டாள். கொஞ்சம் சத்தம் போட்டுக் கூட பேச மாட்டாள். அந்த அளவிற்கு அமைதியும் அடக்கமும் நிறைந்தவள்.
படித்து முடித்து 2 வருடங்களுக்கு மேலாக வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்த கவுசல்யாவிற்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர்.
நீண்ட தேடலுக்குப் பின் திருமணம் கை கூடியது. மணமகன் கோபி பெரிய நிறுவனம் ஒன்றில் உயர் அதிகாரியாக பணிபுரிபவர்.
கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்த மணமகன் கோபி ஆடம்பரமாக வாழ்ந்து வருபவர்.
கவுசல்யாவுக்கும் கோபிக்கும் திருமணம் நிச்சயதார்த்திற்கான ஏற்பாடுகள் தொடங்கியது.
கவுசல்யாவின் தந்தை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவரானதால் எளிமையான முறையில் திருமண நிச்சயதார்த்தை நடத்த முடிவு செய்தார்.
மணமகள் வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கவுசல்யா – கோபி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
நிச்சயதார்த்தத்தின் போது மணமகள் கவுசல்யாவுக்கு மணமகன் கோபி செல்போன் ஒன்றை பரிசாக கொடுத்தார்.
திருமணம் 6 மாதங்களுக்கு பின் நடத்த இருவீட்டாரும் முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடபடத் தொடங்கினர்.
நிச்சயதார்ததம் முடிந்து ஒரு மாதம் ஓடியது.
இந்த கால கட்டத்தில் கோபியும் – கவுசல்யாவும் தங்களுடைய கடந்த கால நிகழ்வுகளையும் அனுபவங்களையும் எதிர்கால திட்டங்களையும் செல்போனில் பேசிக்கொண்டிருந்தனர்.
இந்த நேரத்தில் தான் பக்கத்து வீட்டு கவிதா லலிதாவின் வீட்டுக்கு வந்தார்.
என்ன லலிதா அக்கா கல்யாண வேலை எப்படி நடக்குது. மண்டபம் பார்த்தாச்சா? பொண்ணுக்கு சேலை எடுத்தாச்சா என்று கவிதா கேட்டார்.
அப்போது அங்கு வந்த கவுசல்யாவை பார்த்த கவிதா, என்ன புது பொண்ணு எப்படி இருக்கே? மாப்பிள்ளை என்ன சொல்றாரு என்று கேட்டார்.
உடனே கவுசல்யா நல்லா இருக்கேன் அக்கா என்று கூறியபடி தனது அறைக்குள் சென்றார்.
கவுசல்யாவின் முகத்தில் சிரிப்பு இல்லாமல் ஒருவித கவலை இருப்பதைப் பார்த்த கவிதா, கவுசல்யாவின் அறைக்குள் சென்றார்.
என்ன கவுசல்யா ஏன் ஒரு மாதிரி இருக்கே? என்ன பிரச்சனை? எனக் கேட்டார் கவிதா.
இல்ல அக்கா ஒண்ணும் இல்லை.
அட உன் முகத்தை பார்த்தா அப்படித் தெரியலையே!
எனக்கும் கல்யாணம் ஆகி 2 வருஷம் தான் ஆகுது. உன் வயசை தாண்டித் தான் நான் வந்திருக்கேன். அதனால உண்மையை சொல்லு என்று கேட்டார்.
உடனே கவுசல்யா, அக்கா அது வந்து, கோபி என்கிட்ட பேசறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.
ஏன்? என்ன சொல்றாரு கவுசல்யா.
நிச்சயதார்த்தம் முடிந்து தினமும் காலையிலும் மாலையிலும் பேசுறாரு. ஆரம்பத்துல 20 நாள் நல்லா தான் பேசினார். ரொம்ப ஜாலியா இருந்துச்சு.
இப்ப எல்லாம் தினமும் பேசும் போது எங்க அப்பாவையும் எங்க குடும்பத்தப் பத்தியும் குறையா சொல்றாரு.
என்னமா சொல்றாரு என்று கேட்டார் கவிதா.
உங்க அப்பா நிச்சயதார்த்தத்துலயே சாப்பாட சொதப்பிட்டாரு. கல்யாணத்துலயாவது நல்லா பண்ணுவாரா என்று கேட்கிறாராரு.
கல்யாணத்துக்கு சாப்பாடு செய்ய நல்ல சமையல்காரரை பார்க்க சொல்லு. செலவைக் குறைக்கணும்னு சாப்பாட்டை சொதப்பிடப் போராரு. அப்புறம்… ஒரு நாள் அவர் வீட்டுக்கு வந்தப்ப வீடு ஒதுங்க வைக்காமல் அப்படியே பொருட்களால் எல்லாம் கிடந்ததைப் பார்த்துட்டு, உங்க வீட்டை கூட உங்க அம்மாவுக்கு சரியா பராமரிக்கத் தெரியலையே! நீ இங்க வந்து என்ன பண்ணப் போறீயோ? என்று கேட்கிறாரு.
நிச்சயதார்த்தப்ப நான் கட்டியிருந்த சேலை அவருக்குப் பிடிக்கலையாம்.
அதுக்கு என்னை பார்த்து உனக்கு ஒரு ரசனையே இல்லையா? என்ன கலர் செலக்ட் பண்ணிருக்க என்று கேட்கிறாரு.
அப்புறம் கல்யாணத்துக்கு அவர் சொல்ற இடத்துல தான் மேக்கப் போடணும்னு சொல்றாரு. ஹேர் ஸ்டைல் எல்லாம் அவர் சொல்ற மாதிரி இருக்கணும்னு சொல்றாரு.
இப்படி ஒவ்வொரு நாளும் பேசும் போதும் எங்கிட்ட என்ன குறை இருக்கு. எங்க அப்பா கிட்ட என்ன குறை இருக்கு, எங்க அம்மா கிட்ட என்ன குறை இருக்குனு சொல்லிக்கிட்டே இருக்காரு.
தினந்தோறும் 3 மணி நேரம் பேசுறாரு. அதுல ஒரு மணி நேரம் எங்க வீட்ட பத்தி குறை சொல்லாம இருக்க மாட்டேங்கிறாரு.
நானும் எவ்வளவோ சொல்லிட்டேன். என்னபத்தி எதவேணும்னாலும் சொல்லுங்க. எங்க வீட்டில் உள்ளவர்களை பத்தி பேசாதீங்கண்ணு சொல்லிட்டேன். ஆனா அவரு அத கண்டுக்கிறதே இல்ல.
இப்பவே இப்படி இருக்காரு. கல்யாணத்துக்கு அப்புறம் இன்னும் என்ன என்ன சொல்வாரோ.
வரவர அவரிடம் பேசவே எனக்கு பிடிக்கலை அக்கா என்றார் கவுசல்யா.
கவுசல்யா இதுக்கு போயி கவலைபடலாமா? இதுலாம் வாழ்க்கையில் சகஜம் தான்.
இந்தக் காலத்துல நிச்சயதார்த்தத்துக்கு அப்புறம் கல்யாணம் வரைக்கும் புது ஜோடிகள் செல் போன்ல பேசுறது சகஜம் தான்.
இதனால அவங்க இரண்டு பேரும் ஒருத்தர பத்தி ஒருத்தரு புரிஞ்சிக்க முடியும். ஆனாலும் சில நேரங்களில் சில சிக்கல் ஏற்பட்டு விடுது.
ஒரு சில இடத்துல இந்த மாதிரி பேசும் போது இரண்டு பேருக்கும் இடையில் சண்டை ஏற்பட்டு கல்யாணமே நின்னதா பேப்பர்ல படிச்சிருக்கேன். அதுலாம் எங்காயாவது ஒரு இடத்துல தான் நடக்கும். அதபத்தி நீ கவலைப்படாதே.
இந்த பசங்களுக்கும் என்ன பேசணும்னு சில நேரங்களில் தெரியாமே அவங்க தான் புத்திசாலினு காட்டிக்கிடுறதுக்காக இப்படியெல்லாம் பேசிடுறாங்க. இதனால நம்ம மனசு கஷ்டப்படும்னு அவங்களுக்கு தெரியாது.
அதுக்காக நீ அவர எதிர்த்து எதுவும் பேசிடாதே. அவர் சொல்றதுக்கெல்லாம் சரி சரின்ணு சொல்லு. எங்க அம்மா, அப்பாகிட்ட சொல்றேன்ணு சமாளிச்சுக்கோ.
அவர் உங்கிட்ட, உங்க அப்பா, அம்மாவப் பத்தி குறை சொன்னா அதை உங்க வீட்டுல சொல்லாதே. அப்புறம் அவங்களும் கவலைப்பட ஆரம்பிச்சிடுவாங்க.
இனிமே கோபி திருமண ஏற்பாடுகள் சம்பந்தமாக ஏதாவது குறை சொன்னா, எதுனாலும் எங்க அப்பாகிட்ட நேரடியா சொல்லுங்க. அவர்பாடு உங்க பாடு. இதை பத்தி இனிமே எங்கிட்ட பேசக்கூடாதுண்ணு கண்டிப்பா சொல்லிடு.
அவர் ஏதாவது குறைசொன்னா, நீ திரும்ப அவரைப் பத்தி ஏதாவது குறை சொல்லு. கொஞ்சம் எதிர்த்து பேசு. அப்பத்தான் உனக்கு அவர் கட்டுப்படுவாரு. இல்லைன்னா உனக்கு ஒண்ணும் தெரியாதுனு அதிகாரம் பண்ண ஆரம்பிச்சிடுவாரு.
இந்த ஆம்பளைங்களே அப்படித் தான். கொஞ்சம் பணிந்து பேசினா நம்மள மெரட்டுவாங்க. கொஞ்சம் அதிகாரமா பேசினா அடங்கிடுவாங்க.
அதனால அவர்கிட்ட பேசும் போது, கொஞ்சம் அதிகாரமாவே பேசு. இப்ப அவங்கள பிடிச்சு வச்சிருக்கிறதுதான். இப்ப விட்டுட்டோம்னா அப்புறம் பிடிக்கவே முடியாது. நீ மத்தவங்ககிட்ட பேசுற மாதிரி அமைதியாப் பேசினா அவ்வளவு தான். தைரியமா பேசு.
அப்புறம் இடை இடையே அவங்க அம்மா, அப்பா, நண்பர்கள் பத்தி கேளு. அவங்கள பத்தி ஏதாவது குறை சொன்னா. உடனே அதை வச்சு நீயும் அவரைக் கிண்டல் செய்யு. அப்பதான் அவர் அடங்குவாரு.
இதுக்கு போயி கவலைப்பட்டுக்கிட்டு இருக்கியே. இது ஜாலியா இருக்க வேண்டிய நேரம். எல்லாம் நம்ம எடுத்துகிறதுல தான் இருக்கு.
நான் வரட்டுமா என்று கூறியபடி கவிதா தனது வீட்டுக்கு புறப்பட்டாள்.
மறுநாள் வழக்கம் போல் கவுசல்யாவுக்கு போன் செய்த கோபி எப்போதும் போல் கவுசல்யாவிடம் அதிகார தோரணையில் நீ கல்யாணத்துக்கு பண்ணப்போற ஹேர் ஸ்டைல மாடல கொஞ்சம் ‘‘வாட்ஸ் அப்’’ல அனுப்பி வை, நான் நல்லா இருக்கானு பார்க்கிறேன் என்றான்.
ஹலோ – புது மாப்பிள்ளை – எங்களுக்கும் தெரியும் எப்படி ஹேர் ஸ்டைல் வச்சா நல்லா இருக்கும்னு. அதுலாம் நாங்க பாத்துக்கிறோம்.
நீங்க கல்யாணத்துக்கு என்ன டிரஸ் வாங்கியிருக்கீங்க. என்ன கலர், நீங்க என்ன ஹேர் ஸ்டைல் பண்ணப் போறீங்கண்ணு எனக்கு ‘வாட்ஸ் அப்’ல அனுப்புங்க. அது நல்லா இருக்கான்னு நான் சொல்றேன் என்று கவுசல்யா அதிகாரத் தோரணையில் பேசினாள்.
அதைக் கேட்ட கோபி, கவுசல்யா சுதாரித்துக் கொண்டதை உணர்ந்து, சரி நான் அப்புறம் பேசுறேன் என்று தனது இணைப்பை துண்டித்துக் கொண்டான்.