தினமும் குளிக்காவிட்டால் எந்த மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க நேரிடும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 97
நம் உடல் சுகாதாரம் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆனால் நம்மில் நிறைய பேர் அதை பேணிக் காப்பதே இல்லை. நம் உடல் சுகாதாரத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பது தினசரி குளிக்கும் முறையாகும். தினசரி குளிப்பது நம் உடலுக்கு மட்டுமல்ல நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லது. ஆமாங்க சிலருக்கு தினசரி குளிப்பதே ஒரு சோம்பேறித்தனமாக இருக்கும்.
நீங்கள் தினசரி குளிக்காவிட்டால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் என்பது தெரியுமா? உடல் துர்நாற்றம் முதல் பூஞ்சை தொற்று வரை இலவசமாக உங்கள் உடம்பில் குடிகொள்ள ஆரம்பித்து விடும். எனவே தினசரி குளிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இக்கட்டுரையின் மூலம் உணர்ந்து கொள்ளுங்கள்.
உடல் துர்நாற்றம்
நீங்கள் தினசரி குளிக்கா விட்டால் உங்கள் உடல் பாக்டீரியாக்களின் இருப்பிடமாகவே ஆகி விடும். இதனால் உடல் துர்நாற்றம் ஏற்படும். உங்கள் அருகில் கூட யாரும் வர முடியாத அளவிற்கு உடல் துர்நாற்றம் ஏற்படும். நம் உடலானது இயற்கையாகவே வியர்வை மற்றும் எண்ணெய்களை உற்பத்தி செய்கிறது.
எனவே அவற்றை அவ்வப்போது நம் தோலில் இருந்து நீக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த வியர்வை மற்றும் எண்ணெய் பிசுக்கை நீங்கள் சரிவர நீக்காவிட்டால் உடல் துர்நாற்றம் உண்டாக வாய்ப்புள்ளது. உங்கள் உடம்பில் இருந்து விரும்பத்தகாத வாசனை ஏற்படும். இதனால் ஒரு பொது இடங்களுக்கோ அல்லது நிகழ்ச்சிகளுக்கோ நீங்கள் செல்ல முடியாது.
சரும பிரச்சனைகள்
நீங்கள் தினமும் உங்கள் சருமத்தை சுத்தம் செய்யாவிட்டால் தோலின் மீதுள்ள வியர்வை, எண்ணெய் போன்றவை தேங்கி சரும துளைகளை அடைக்க ஆரம்பித்து விடும். இதனால் நீங்கள் முகப்பருக்கள், தோல் நோய்கள் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். எனவே உங்கள் சருமத்தை தினசரி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள்
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய தொற்றுகள் ஆகும். உங்கள் தோலில் உள்ள அழுக்குகளை நீங்கள் சரி வர சுத்தம் செய்யாவிட்டால் பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுக்களை சந்திப்பீர்கள்.
நம் தோலில் உள்ள அழுக்குகள் பாக்டீரியாக்களுக்கு உணவாக அமைகிறது. இதனால் அத்ளட் புட், அரிப்பு, சொறி, சிரங்கு போன்ற பல தோல் பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.
அசெளகரியம் ஏற்படும்
நீங்கள் தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிக்காவிட்டால் உங்களுக்கு அசெளகரியம் உண்டாக அதிக வாய்ப்பு உள்ளது. சொறி, சிரங்கு, அரிப்பு மற்றும் உடல் துர்நாற்றம் இவற்றால் நீங்கள் அசெளகரியத்தை உணர்வீர்கள். இதனால் உங்கள் வேலையில் உங்களால் கவனம் செலுத்த முடியாது.
சமூக கிண்டலுக்கு ஆளாகுவீர்கள்
உங்கள் உடல் துர்நாற்றம் அதிகமாக இருந்தால் பக்கத்தில் யாரும் வர மாட்டார்கள். இதனால் உங்கள் சமூக தொடர்பு பாதிக்கப்படும். மற்றவரின் கேளிக்கைகளுக்கு உள்ளாவீர்கள். இதனால் பொது இடங்களில் உங்களால் கலந்து கொள்ள முடியாது.
மனநல பாதிப்புகள்
உங்கள் மோசமான சுகாதாரம் உங்கள் மன நலத்தையும் பாதிக்க வாய்ப்புள்ளது. உங்கள் தோற்றத்தை பற்றி நீங்கள் தவறாக உணரும் போது சுயமரியாதை குறைந்து போதல், மன அழுத்தம் மற்றும் பதட்டம் போன்ற பிரச்சினைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம்.
சரும நிறத்திட்டுகள் வர வாய்ப்பு உள்ளது
நீங்கள் தினசரி குளிக்காமல் இருக்கும் போது உங்கள் உடம்பில் சரும நிறத்திட்டுகள் வர வாய்ப்பு உள்ளது. நீங்கள் குளிக்கும் போது தான் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். நீங்கள் குளிக்காமல் இருந்தால் இந்த இறந்த செல்கள் உங்கள் தோலில் ஒட்டிக்கொண்டு சரும நிறத்திட்டுகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
தினசரி எப்படி குளிக்க வேண்டும்?
> ஒரு நாளைக்கு ஒரு முறை குளித்தால் போதுமானது. ஆனால் தினசரி தவறாமல் குளிக்க வேண்டும். ஒரு வேளை உங்கள் உடல் நிலை சரியில்லாமல் உங்களால் குளிக்க முடியாவிட்டால் ஸ்பான்ஞ் குளியலை நீங்கள் மேற்கொள்ளலாம். உங்கள் முகம், அக்குள் மற்றும் இடுப்பு பகுதியில் ஈரத்துணியை வைத்து துடைத்து எடுங்கள்.
> சூடான நீரில் எப்பொழுதும் குளிக்க வேண்டாம். வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள்.
> 5-10 நிமிடங்கள் மட்டும் குளித்தால் போதுமானது.
> மைல்டு சோப்பு அல்லது க்ளீன்சரை பயன்படுத்தி உங்கள் உடலை சுத்தம் செய்யுங்கள்.
> உங்கள் உடலை உலர்த்தும் போது துண்டைக் கொண்டு அழுத்தமாக தேய்க்காதீர்கள். மாறாக லேசாக துடைத்து எடுங்கள்.
> நறுமணம் மிகுந்த சோப்புகள் மற்றும் க்ளீன்சர்கள் வேண்டாம். ஏனெனில் அவை உங்கள் சருமத்தை எரிச்சலூட்ட வாய்ப்பு உள்ளது.
> குளித்து வந்த பிறகு கட்டாயம் உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் அப்ளை செய்யுங்கள்.