Switch Language:   English | தமிழ்

    மாசடைந்த காற்று பலவீனமான இதயமுள்ளவர்களை கொல்கிறது

    மாசடைந்த காற்று பலவீனமான இதயம் உடையவர்களுக்கு மரணத்தைக் கூட விளைவிப்பதாக இது பற்றிய மிகப்பெரிய சர்வதேச ஆய்வு தெரிவித்துள்ளது.
    இதன் காரணமாக பிரிட்டனில் மட்டும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் இறப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

    ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரைத்துள்ள பாதுகாப்பு அளவை விட ஐக்கிய ராஜ்ஜியத்தின் பல நகரங்களின் காற்று மண்டலத்தில் மாசு அதிகமாக இருப்பதாக லான்செட் நடத்திய இந்த ஆய்வுக்கு பொருளுதவி செய்த பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷன் தெரிவித்துள்ளது.
    வாகனங்கள் வெளியிடும் புகையால் மாரடைப்பு ஏற்படுவதாக முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகள் தெரிவித்துள்ளன. இந்த ஆய்வு, காற்று மாசடைவதற்கும் இதயம் செயலிழப்பதற்குமான தொடர்பை கண்டறிந்துள்ளது.
    பொதுவாக மாரடைப்பு வந்த பிறகு இதயம் பலவீனமடைந்துவிடுகிறது. இந்த உடல்நிலையில் ஐக்கிய ராஜ்ஜியத்தில் ஏழரை லட்சம் பேர் உள்ளனர்.
    லான்செட் நடத்திய ஆய்வுக்காக அமெரிக்கா, ஐக்கிய ராஜ்ஜியம், சீனா உள்ளிட்ட 12 நாடுகளில் பல்லாயிரக் கணக்கானோரிடம் நடத்தப்பட்ட 35 ஆய்வுகளின் முடிவுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன.
    மரணங்கள்
    கார்பன் மோனாக்சைட், நைட்ரஜன் டை ஆக்சைட் போன்ற வாயுக்களும், பேருந்துகள், லாரிகள் போன்றவை வெளியிடும் புகையில் உள்ள மிகச் சிறு துகள்களும் நுரையீரல்களுக்கு அடியே ஆழமாக போய் விடுவதுடன், இரத்த நாளங்களில் அவை கலந்தும் விடுகின்றன.
    இதன் காரணமாக பலவீனமான இதயத்தை உடையவர்கள், போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளுக்கு அருகே வாழ்ந்தாலோ அல்லது சாலைகளில் அடிக்கடி பயணித்தாலோ அவர்களுக்கு உயிராபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
    காற்று மாசடைவதை தடுக்கும் பொறிமுறைகளை உபயோகப்படுத்துவதன் மூலம் அமெரிக்காவில் மட்டும் எட்டாயிரம் இதயங்கள் செயலிழப்பதை ஆண்டுதோறும் தடுக்கலாம் என்று இந்த ஆய்வுக்கு தலைமை தங்கிய டாக்டர் அனூப் ஷா கூறியுள்ளார்.
    காற்று மாசடைவதன் காரணமாக ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் உலகில் இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.