Switch Language:   English | தமிழ்

    "சிக்ஸ் பேக்” உடலுக்கு நல்லதா? (Must Read)

    சிக்ஸ் பேக் ஒரு நல்ல விஷயம் இல்லை. ஒரு மூட்டை தூக்கும் தொழிலாளிக்கோ, மீனவருக்கோ, விவசாயிக்கோ இயற்கையாக வரும் சிக்ஸ் பேக்கும் நாம் செயற்கையா உருவாக்கிக்குற சிக்ஸ் பேக்குக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு.

     உடம்புல உள்ள எல்லாச் சக்தியையும் பணயம் வைக்குற ஒருத்தர்தான் சிக்ஸ் பேக்குக்கு ஆசைப்படலாம்.

    ஓர் ஆண் மகனை அழகாய்க் காட்டுகிறது என்பதற்காக, உடலை வருத்தி செய்யும் சிக்ஸ் பேக்கின் பின்னணி என்ன? அதற்கு இளைஞர்கள் கொடுக்கும் விலை என்ன?

    ''ஆண்டாண்டு காலமாக உடற்பயிற்சியில் உள்ள ஓர் அங்கம்தான் சிக்ஸ் பேக். ராணுவத்தில் பணிபுரிபவர்களில் பெரும்பாலானோர்கள், மற்றும் சினிமா நட்சத்திரங்களும் 'சிக்ஸ் பேக்’ வைத்திருப்பார்கள்'' ஆனால், அதற்கெனச் சில வரையறைகள் இருக்கின்றன.

    ''காலை ஆறு மணிக்கு இரண்டு டீ, ஒன்பது மணிக்கு ஓட்ஸ் மற்றும் எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு. காலை 11 மணிக்கு பப்பாளிப் பழம். சர்க்கரை இல்லாத புரதச் சத்து நிறைந்த பானம். மதியம் ஒரு மணிக்கு அரை கிலோ சிக்கன். எண்ணெய் சேர்க்காத கோதுமை ரொட்டி, மாலை ஐந்து மணிக்கு மீண்டும் புரதச்சத்து பானம், 7.30 மணிக்கு திரும்பவும் புரதச்சத்து பானம், இரவு ஒன்பது மணிக்கு எட்டு முட்டைகளின் வெள்ளைக்கரு, ஒரு ஆப்பிள். இவைதான் உணவு. மாவுச்சத்து, நார் சத்து, கொழுப்புச் சத்து, அடங்கிய உணவுப் பொருட்களை அறவே சாப்பிடக் கூடாது''

    ''தண்ணீரின் அளவைப் படிப்படியாகக் குறைக்க வேண்டி இருக்கும். மேலும், சர்க்கரை, உப்பு, தண்ணீர் மூன்றையும் உடலை விட்டு சுத்தமாக நீக்க வேண்டும். ஆகையால், 16 வயதினருக்கு மேற்பட்ட ஆண்கள் மட்டும்தான் சிக்ஸ் பேக் பயிற்சியில் ஈடுபட வேண்டும். அதைவிடக் குறைவான வயதுடையவர்கள் கண்டிப்பாகச் செய்யக் கூடாது. ஏனெனில் முதுகுத் தண்டு வளர்ச்சி முழுமையாகப் பாதிக்கப்படும். முதுகு வலி இருப்பவர்கள், ரத்த சோகை உள்ளவர்கள் நிச்சயம் செய்யவே கூடாது''  என்கின்றனர் மருத்துவர்கள்

    இந்த உணவு முறைகள் எந்த அளவுக்குச் சரியானவை என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கையில்,

    ''சிக்ஸ் பேக் செய்பவர்கள், உடலில் உள்ள கொழுப்பை ஒன்பது சதவிகிதம் ஆகவும் நீரின் அளவினை 40 சதவிகிதம் அளவுக்குக் குறைத்தே ஆக வேண்டும். மேலும், புரதச் சத்தை மட்டும் அதிகம் எடுத்துக்கொள்வதால், கல்லீரல், சிறுநீரகம் இரண்டும் கடும் பாதிப்புக்கு உள்ளாகும். ஒருகட்டத்தில் சிறுநீரகம் முற்றிலும் செயலிழந்துவிடக் கூடிய அபாயமும் இருக்கிறது. அதிக அளவு உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் வெப்பம் அதிகரிக்கும். மாவுச்சத்து, பால் பொருட்களைத் தவிர்ப்பதால், உணவின் விகிதாச்சாரம் மாறுபட்டு, மயக்க நிலைக்குத் தள்ளப்படலாம்.

    மேலும், தலை முடி உதிர்த்தல், மலச்சிக்கல் பிரச்னைகளும் ஏற்படலாம். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சிக்ஸ் பேக் என்பதை போட்டிகளில் கலந்துகொள்பவர்களோ, ராணுவத்தினரோ மேற்கொள்வது உண்டு. ஆனால் அழகுக்காகச் செய்பவர்கள், பாதியிலேயே நிறுத்துபவர்கள், நிச்சயம் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்'' 

    இதுபற்றி எலும்புசிகிச்சை நிபுணர் தெரிவிக்கையில்...

    ''பொதுவாக நம் உடலின் வயிற்றின் அடிப்பகுதி, தோள்பட்டை, கை, தொடை, இடுப்பு பகுதிகளில் கொழுப்பு அதிக அளவு தேங்கியிருக்கும். அடிவயிற்றில் ட்ரான்ஸ்வெர்ஸ் தசை மற்றும் ரெக்டஸ் தசை இருக்கும். இவை, கொழுப்பு முற்றிலும் நீக்கப்பட்ட பிறகு, ஆறு அடுக்குகளாகத் தாமே பிரியும். இதுதான் சிக்ஸ் பேக் என்று சொல்லப்படுகிறது.

    சர்க்கரை, தண்ணீர், உப்பு ஆகிய மூன்றையும் நீக்கிவிட்டால் உயிர் வாழ்வது கடினம்தான். அதிலும் புரதம், மாவுச்சத்து இல்லாமல், கடும் உடற்பயிற்சி செய்யும்போது, உடலின் தசை நார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும்.

    மனிதனுக்கு வலிமையான தசைநார்களே தேவை. உடல் வலி, காயம் ஏற்படுவதைத் தடுக்கவும் முதுகுவலி வராமல் காக்கவும் தசை நார்கள் பயன்படுகின்றன. ஆனால், சிக்ஸ் பேக் வைப்பதால் தேவை இல்லாத வலிகள், பிரச்னைகள்தான் அதிகம்.

    நம் உடலுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், அதிக அளவு எடை தூக்குவதால் கால்கள், இடுப்புகளில் உள்ள தசைகளில் வலி ஏற்படும். தொடர்ந்து இதுபோன்று செய்பவர்களுக்கு இந்த வலி நிரந்தரமாகிவிடும். அதேபோல் தசைநார் வழியாக ரத்தம் செல்லாவிடில், இதயத்துடிப்பு குறைந்து மயக்க நிலை ஏற்படலாம்.

    அழகுக்கு ஆசைப்பட்டுத்தான் சிக்ஸ் பேக் மாயையில் இளைஞர்கள் விழுகிறார்கள். ஆனால், நிரந்தர அழகுக்கு ஒருவர் முறையாக உடற்பயிற்சி செய்து உடலைக் கட்டுக்குள் வைத்திருத்தலே முக்கியம். சிக்ஸ் பேக் அழகு என்பது தற்காலிகமானதே. நீடித்தது அல்ல. தவிர, அழகைவிட ஆரோக்கியமே முக்கியம் என்பதையும் இளைஞர்கள் உணர வேண்டும்'' என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.