கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டியவையும், சாப்பிடக்கூடாதவையும்!
- admin
- Category: உடல் நலம்
- Hits: 198
கோடைக்காலம் ஆரம்பித்துவிட்டாலே, நமக்கு எரிச்சலாக இருக்கும். ஏனெனில் இக்காலத்தில் வெயில் அதிகம் கொளுத்துவதால், உடலானது நீர்ச்சத்தை இழந்து, சுறுசுறுப்பின்றி இருக்கும். ஆகவே இக்காலத்தில் புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டு வர வேண்டும்.
வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்க பொதுமக்களும் பலவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோடைக்காலம் தொடங்கியதும் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும். அப்போது பொதுமக்களுக்கு பல்வேறு நோய் பாதிப்புகளும் ஏற்படும். கோடைகாலத்தில் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பார்க்கலாம்.
நீர் ஆகாரம் :
கோடைகாலத்தில் அம்மை நோய், மஞ்சள் காமாலை, வயிற்றுப்போக்கு மற்றும் தோல் பிரச்சனைகளே அதிக அளவில் ஏற்பட வாய்ப்புள்ளது. இவற்றை தடுக்க வேண்டும் என்றால் சுத்தமான தண்ணீர், இளநீரை அதிக அளவில் குடிக்க வேண்டும். மேலும் நீர்சத்து உள்ள பழங்களையும் சாப்பிடலாம்.
தயிர் மற்றும் மோர் போன்றவை உடலை கோடையில் குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள உதவும் உணவுப் பொருட்கள். எனவே இவற்றையும் அவ்வப்போது சாப்பிட்டு வாருங்கள்.
சோடா :
அனைவரும் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்கிறேன் என்ற பெயரில் கடைகளில் விற்கப்படும் சோடாக்களை வாங்கி குடிக்கின்றனர். ஆனால் உண்மையிலேயே அதுதான் உடலுக்கு மிகவும் தீமையை விளைவிக்கும். அதனால் இயற்கையான நீர் ஆகாரங்களை குடிக்கலாம்.
உலர் பழங்கள் :
உலர் பழங்களை சாப்பிட்டால் இதயத்திற்கு நல்லது தான். ஆனால் அதை கோடையில் சாப்பிட்டால், உடல் வெப்பம் அதிகரிக்கும். எனவே கோடையில் இதனை அதிகம் சாப்பிட வேண்டாம்.
சர்க்கரை :
கோடையில் ஆரோக்கியமாக இருப்பதற்கு செய்ய வேண்டியவைகளில் முதன்மையானவை செயற்கை இனிப்புக்களை தவிர்ப்பது தான்.
கொழுப்புச்சத்துள்ள உணவுகள் :
கொழுப்புச்சத்துள்ள உணவுகளை கோடையில் சாப்பிட்டால், உடலின் வெப்பம் அதிகரிக்கும். எண்ணெயில் பொரித்த சமோசா, சிப்ஸ், பஜ்ஜி, போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
பழங்கள் :
கோடையில் பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். அதிலும் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். அதுவும் தர்பூசணி, திராட்சை மற்றும் ஆரஞ்சு போன்றவற்றை உட்கொண்டு வந்தால், உடலுக்கு தேவையான நீர்ச்சத்து கிடைப்பதுடன், கலோரிகள் குறைவாகவும் இருக்கும்.
நீர்ச்சத்து நிறைந்த சாலட் கோடையில் சீரான இடைவெளியில் சாப்பிட்டால், உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். எனவே நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் பசலைக்கீரை போன்றவற்றைப் பயன்படுத்தி சாலட் செய்து சாப்பிடுங்கள்.
காய்கறிகள் :
கோடையில் உடல் வெப்பத்தை தணிக்கும் உணவுப் பொருட்களான வெள்ளரிக்காய், புதினா, முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.