கற்பூரவள்ளி இலையை தினமும் மென்று சாப்பிடுவதால் உடலினுள் நிகழும் அற்புதங்கள் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 126
நாம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் வகையில் இயற்கை நமக்கு பல்வேறு மூலிகைகளை நமக்கு வழங்கியுள்ளது. அதில் துளசி, கற்பூரவள்ளி போன்றவை பொதுவாக பெரும்பாலான இடங்களில் காணப்படும் செடிகளாகும்.
அதோடு இவை அனைத்தும் பழங்காலம் முதலாக உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டும் வருகின்றன. இதில் துளசி இலைகளின் நன்மைகளைப் பற்றி பலரும் அறிவோம். ஆனால் கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகளைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், நிறைய பேருக்கு இதன் மகத்துவம் குறித்து முழுமையாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
கற்பூரவள்ளி இலையானது நல்ல மணத்தைக் கொண்டதோடு, காரத்தன்மையைக் கொண்டது. உங்கள் பாட்டிமார்கள் மற்றும் தாய்மார்கள் உங்களுக்கு சளி, இருமல் பிடித்திருக்கும் போது இந்த கற்பூரவள்ளி இலைகளை கசக்கி சாறு எடுத்து கொடுத்திருப்பார்கள்.
அதே சமயம் இந்த இலைகள் உடலில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பெரிதும் உதவி புரியும் என்பது தெரியுமா? அதுவும் இந்த இலைகளை தினமும் மென்று சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள மருத்துவ பண்புகள் உடலில் பல மாயங்களை நிகழ்த்தும். இப்போது கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலையின் பயன்கள் என்னவென்பதைக் காண்போம்.
1. வாய் துர்நாற்றம் இருக்காது
நீங்கும் உங்கள் வாயில் இருந்து எப்போதும் கடுமையான துர்நாற்றம் வீசுமா? அப்படியானால் கற்பூரவள்ளி இலைகளை தினமும் வாயில் போட்டு மென்று சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாயில் துர்நாற்றத்தை வீசும் கிருமிகளை அழித்து, வாய் துர்நாற்றத்தை தடுப்பதோடு, ஈறுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வாயும் சுத்தமாக புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
2. நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுவீர்களா? உடலில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருந்தால் தான், உடல்நலம் இம்மாதிரி பாதிக்கப்படும். ஆனால் கற்பூரவள்ளி இலைகளை தினமும் மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி, உடலை நோய்கள் மற்றும் நோய்க்கிருமிகளிடம் இருந்து பாதுகாக்கும். முக்கியமாக இந்த இலைகளை குழந்தைகளும் சாப்பிடலாம்.
3. எடை இழப்புக்கு உதவும்
நீங்கள் உடல் பருமனால் அவதிப்பட்டு வருபவரானால், கற்பூரவள்ளி இலைகளை தினமும் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் கற்பூரவள்ளி இலைகளில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது வயிற்றை நிரப்புவதோடு, கண்ட உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைக்கும். இதன் விளைவாக உடல் எடையை ஆரோக்கியமாக குறைக்க உதவி புரியும்.
அதற்கு கற்பூரவள்ளி இலைகளை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இல்லாவிட்டால் உணவு உண்ட பின்னரும் சாப்பிடலாம். அதே சமயம் இந்த இலையைக் கொண்டு சட்னி தயாரித்து காலை உணவின் போது சேர்த்து வந்தால் இன்னும் சிறப்பான பலனைப் பெறலாம்.
4. செரிமானம் சீராகும்
அடிக்கடி செரிமான பிரச்சனைகளை சந்திப்பவர்கள், கற்பூரவள்ளி இலைகளை சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள பல்வேறு வைட்டமின்கள் செரிமானத்தை மேம்படுத்துவதோடு, உடலின் மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது. மேலும் இந்த இலைகள் வயிற்று தசைகளை தளர்த்துகிறது, வாய்வு தொல்லை, வயிற்று உப்புசம், மலச்சிக்கல் போன்ற அறிகுறிகளையும் தடுக்கிறது.
5. சரும பிரச்சனைகளைத் தடுக்கும்
கற்பூரவள்ளி இலைகளில் வைட்டமின் ஏ, சி, செலினியம், ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலை சமநிலையில் பராமரிக்க உதவுவதோடு, ஹார்மோன்களை சீராக்கவும் உதவுகின்றன. அதுவும் இதில் உள்ள குளிர்ச்சிப் பண்புகள் உடலை நீரேற்றத்துடன் வைத்துக் கொள்கிறது மற்றும் முகப்பரு மற்றும் பிற சரும பிரச்சனைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது .
6. சளி, இருமல் சரியாகும்
காலநிலை மாற்றத்தின் போது பலரும் சளி, இருமலால் அதிகம் அவதிப்படுவார்கள். அப்போது கற்பூரவள்ளி இலைகளை எடுத்து கசக்கி சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்தால், அந்த இலைகளில் உள்ள பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, இப்பிரச்சனையில் இருந்து விரைவில் விடுவிக்கும்.