Switch Language:   English | தமிழ்

    --மஞ்சள் காமாலை நோயை தடுப்பதற்கான வழிகள்

    மஞ்சள் காமாலை ஆபத்தான நோய். சரியான நேரத்தில் கண்டு பிடித்து முறையான சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் ஆளையே கொன்று விடும்.

    கல்லீரலில் ஏற்படும் வைரஸ் தொற்றால் இந்நோய் ஏற்படுகிறது. ரத்தம் மற்றும் உடலுறவு மூலம் இந்த வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்கின்றனர் மருத்துவர்கள்.

     

    "கல்லீரல் அழற்சி வைரஸ் ஏ" என்ற வைரசே கல்லீரலை தாக்கி மஞ்சள் காமாலையை உருவாக்குகிறது.

    இது குழந்தைகள் மற்றும் சிறுவர்களை எளிதில் தாக்கும். சுகாதாரமற்ற குடிநீர், உணவின் வழியாக இந்த வைரஸ் உடலுக்குள் நுழைகிறது. ரத்தம் செலுத்தும் போது அல்லது உடலுறவின் போதுகூட இது பரவ வாய்ப்புள்ளது.

    இந்த வைரஸ் உடலுக்குள் நுழைந்த ஒன்று அல்லது இரண்டாவது வாரத்தில் மஞ்சள் காமாலை தோன்றுகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களுக்கு காய்ச்சல், உடல் அசதி, பசியின்மை, உடல் வலி, சோர்வு, மூட்டு வலி போன்ற அறிகுறிகள் தென்படும்.

    கண்களின் வெள்ளைப் பகுதி மஞ்சளாக காட்சியளிக்கும். சிறுநீரும் மஞ்சள் நிறத்தில் போகும். மேலும் சிறுநீர் வெளியேற்றுவதிலும் சிரமங்கள் ஏற்படும். கல்லீரல் அழற்சியின் அடுத்தகட்டமாக கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீங்கி பெரிதாகும். இத்துடன் நிணநீர்க்கட்டிகளிலும் வீக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

    ரத்தப் பரிசோதனையின் மூலம் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படுகிறது. இந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பாற்றல் புரதத்தின் அளவு ரத்தத்தில் அதிகரித்திருப்பதை வைத்து மஞ்சள் காமாலை நோயின் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

    மேலும் கல்லீரலில் முக்கிய என்சைமின் அளவும் அதிகரித்திருக்கும். ரத்தம், சிறுநீர் பரிசோதனைக்கு அடுத்தபடியாக வயிற்றுப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம் கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் பாதிப்புகளை அறிந்து கொள்ளலாம்.

    மஞ்சள் காமாலை என்று தெரிந்த உடன் முறையான சிகிச்சை மற்றும் பத்தியம் மேற்கொள்வது அவசியம். உணவுக் கட்டுப்பாட்டை நோய் முழுமையாக குணமடையும் வரை கடைபிடிக்க வேண்டும்.

    கல்லீரல் அழற்சி நீண்ட காலம் இருந்தால் அது கல்லீரல் புற்றுநோயாக மாற வாய்ப்பு உள்ளது. மேலும் கல்லீரல் செயல் இழப்பும் ஏற்படலாம். கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பி வைரசால் பாதிப்பு இருக்கும் பட்சத்தில் பிறக்கும் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டியது முக்கியம்.

    வைரசுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதமும் கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் மட்டுமே, பிறக்கும் குழந்தைக்கு மஞ்சள் காமாலை நோய் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

    பாதுகாப்பு முறை: மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்படுவதை தவிர்க்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சுகாதாரமற்ற இடங்களில் விற்கும் குளிர்பானம், உணவு வகைகளை உண்பதையும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

    குழந்தைப் பருவத்தில் மஞ்சள் காமாலை தடுப்பூசி போடுவதன் மூலம் நோய் ஏற்படுவதை தடுக்கலாம். மேலும் வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

    சுகாதாரமான கழிப்பிடத்தை பயன்படுத்த வேண்டும். ஈக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் தண்ணீர், பால் போன்றவற்றை நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி பிறகு குடிக்கலாம்.

    கல்லீரல் பாதிப்பு நோய் உள்ளவர்கள் மது அருந்தும் பழக்கத்தை கண்டிப்பாக விட்டுவிட வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை தவிர்க்க வேண்டியதும் அவசியம். நோய் முற்றிலும் குணமடையும் வரை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.