பறவையால் கிடைத்த பாடம்..
- MSF.Nadhwa
- Category: கதைகள்
- Hits: 1041
பறவை ஒன்று தாழப்பபறந்து கொண்டிருந்தது. அதீதமான குளிர்காலம். குளிரைத் தாக்குப்பிடிக்காத பறவை, ஒரு பெரிய சமவெளியில், தரையில் விழுந்துவிட்டது.
அதே சமயம் அந்தப் பக்கமாக வந்த பசுமாடு ஒன்று சாணமிட அது பறவையை மூழ்கடிக்கும் அளவிற்கு இருந்தது. ஆனாலும் பறவை தலையைத் தூக்கி வெளியே எட்டிப் பார்த்து, தனது உயிரைத் தக்க வைத்துக்கொண்டது.
மாட்டுச் சாணம் சற்று சூடாக இருந்ததால், பறவைக்கு அது இதமாக இருந்தது. குளிர் போன இடம் தெரியவில்லை.
மிக்க மகிழ்ச்சியடைந்த பறவை, குரல் கொடுத்து..லல..லல்லல்லா....என்று பாடத்துவங்கியது.
அதுதான் போதாத நேரம் என்பது!
அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த பூனை ஒன்று, பறவையின் குரல் கேட்டுத் தேடத்துவங்கி, பறவை இருக்கும் இடத்தைக் கண்டு பிடித்துவிட்டது.
அப்புறம்?
அப்புறம் என்ன, சாணத்தைக் கிளறி, பறவையை ஒரே அமுக்காக அமுக்கித் தின்று தன் பசியைப் போக்கிக் கொண்டுவிட்டது.
கதையில் இரண்டு திருப்பங்கள் பாருங்கள்.
வாழ்க்கையும் அப்படித்தான். கொஞ்சம் கவனமாகவே இருங்கள்..
1. உங்கள் மீது சாணமிடுபவர்கள் எல்லாம் உங்கள் எதிரிகள் அல்ல
2. சாணத்தில் இருந்து உங்களை விடுவிப்பவர்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் அல்ல!
3. சாணத்தில் (சிக்கலில்) மாட்டிக்கொண்டிருக்கும் போது வாயை மூடிக்கொண்டிருங்கள்!