Night Shift வேலை பார்ப்பவரா நீங்கள்.
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 338
இரவு பகல் என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் பணிபுரிபவர்களுக்கு மாரடைப்பு, உடல் பருமன், தீவிர பக்கவாத நோய் அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்காவின் டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அந்தப் பல்கலையின் ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இரவு-பகல் அடிப்படையிலான 24 மணி நேர சுழற்சியில் உடலுறுப்புகளின் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும் “உயிரியல் கடிகாரம்’ நம் உடலில் இயங்குகிறது.
இரவு மற்றும் பகலில் நமது உடல் செய்ய வேண்டிய வேலைகளை ஒருங்கிணைக்கும் பணிகளை அது மேற்கொண்டு வருகிறது.
எப்போது சாப்பிடுவது? எப்போது உறங்குவது? என்பது உள்ளிட்ட எண்ணற்ற செயல்பாடுகளுக்கு இந்த “கடிகாரம்’ மூலமாகத்தான் நமது உடலுக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.
இரவு பகல் என மாறி மாறி பணிபுரிபவரின் உணவு உட்கொள்ளும் நேரம் மற்றும் தூங்கியெழும் நேரம் ஒழுங்கில்லாமல் அடிக்கடி மாறுவதால் உடம்பின் இயக்கச் சுழற்சி சீராக இன்றித் தடுமாற்றம் அடைகிறது.
இதையடுத்து, 24 மணி நேர
இயற்கையான சுழற்சி தடைபடுவதுடன் உடலியக்க செயல்பாடுகளும் பாதிப்புக்குள்ளாகிறது.
இதனால், மூளையின் ஒரு பகுதியின் ரத்த ஓட்டம் துண்டிக்கப்பட்டு தீவிர ரத்த அடைப்புகள் உண்டாகி பக்கவாதம் ஏற்படுவதற்கு வழிவகுக்கிறது.
வழக்கமான முறையில் வேலை பார்ப்பவருடன் ஒப்பிடுகையில், பகல்-இரவு என மாறி மாறி ஷிப்ட் அடிப்படையில் வேலை பார்ப்பவரின் மூளை பாதிக்கப்படுவது மட்டுமின்றி, உணர்விழத்தல், மூட்டுகளின் இயக்கம் தடைபடுதல் போன்ற பிரச்னைகளும் ஏற்படுகின்றன. ஆண்களைக் காட்டிலும், இளவயதுப் பெண்களுக்குப் பக்கவாத பாதிப்புகள் அபாயம் குறைவாகவே உள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது. ஏனெனில், பெண்களின் உடலில் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் என்ற ஹார்மோன் அவர்களின் மூளைக்குப் பாதுகாப்பு அரணாக விளங்கி, நரம்பு மண்டலங்களுக்கு அதிக அளவில் பாதுகாப்பை அளிக்கிறது.
ஆனால், வயதான பெண்களுக்கு இத்தகைய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஃபரீதா சொராப்ஜி என்ற ஆராய்ச்சியாளரையும் உள்ளடக்கிய டெக்ஸாஸ் ஏ & எம் பல்கலையின் இந்த ஆய்வு முடிவுகள் “எண்டோகிரினாலஜி’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.