மயக்க மருந்து மர்மங்கள்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 327
ரஷ்யாவுக்கு படிக்கச் சென்ற இந்தியப் பெண் ஒருவர் கடும் வயிற்று வலியின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் பிரச்னையைக் கண்டறிந்து, அதற்குத் தீர்வு காண ஒட்டுக்குடல் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். அப்போது மயக்க மருந்து அளவுக்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டதன் காரணமாக, அப்பெண்ணுக்கு சுய நினைவு திரும்பவில்லை. அதன் பிறகு பல சிகிச்சைகள் மேற்கொண்டும் பயனில்லாமல் போகவே, இன்றைக்கும் அவரது பெற்றோர்கள் சிகிச்சைக்காக அலைந்து கொண்டிருக்கின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 9 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது மயக்க மருந்தின் அளவு அதிகமாக செலுத்தப்பட்டதன் காரணமாக சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளான். உலகெங்கிலும் இது போன்று பல சம்பவங்களை சுட்டிக்காட்ட முடியும். அப்படியென்றால் மயக்க மருந்து உயிரையும் பறிக்குமா?
மயக்க மருந்து நிபுணர் (Anesthesiologist) என்றால் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து கொடுத்து மயங்க வைப்பவர் என்றுதான் பலருக்கும் தெரியும். ஒரு அறுவை சிகிச்சையில் மூளையாக இருந்து செயல்படுவதும், சிகிச்சையை வழி நடத்துவதும் மயக்க மருந்து நிபுணர்தான். அறுவை சிகிச்சையைப் பொறுத்தமட்டிலும், மற்ற துறை மருத்துவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு அதிக பொறுப்பு இருக்கிறது. கொஞ்சம் தவறினாலும் உயிரிழப்பு மற்றும் நினைவிழந்து போதல் போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.
இந்த உயிரிழப்புகளுக்கு அடிப்படை காரணம் என்ன? விரிவாகப் பேசுகிறார் மயக்க மருந்து நிபுணர் தணிகைவேந்தன்…
மயக்கத்துக்கான வகைகள்‘‘மயக்கவியல் துறையை உணர்ச்சி நீக்கியல் துறை என்றும் சொல்லலாம். இரு வகையான மயங்க வைத்தல்கள் இருக்கின்றன. முதலாவது நோயாளியை முழுமையாக மயக்கமடையச் செய்கிற ‘பொது மயக்க மருந்து’ (General anesthesia). எந்த பாகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்கிறோமே, அந்த பாகத்தை மட்டும் மரத்துப் போக வைக்கிற ‘மண்டல மயக்க மருந்து’ (Regional anesthesia) இரண்டாவது வகை.
வயிற்றுக்கு மேற்பகுதிகளான இதயம், மூளை, நுரையீரல், கல்லீரல் தொடர்பான அறுவை சிகிச்சைகளுக்கும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கும் பொது மயக்க மருந்து கொடுக்கப்படும். வயிற்றுக்குக் கீழ் உள்ள பகுதிகளில் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை, மகப்பேறு ஆகியவற்றுக்கு மண்டல மயக்க மருந்து கொடுக்கப்படும்.
மண்டல மயக்க மருந்தை ‘Spinal’, ‘Epidural’ என இரண்டாகப் பிரிக்கலாம். ஸ்பைனல் என்பது Cerebrospinal fluid எனும் பகுதியில் மயக்க மருந்தைச் செலுத்துவது. எபிடியூரல் என்பது தண்டு வடத்துக்கு முன்புள்ள பகுதியில் மருந்தைச் செலுத்தி மரத்துப்போகச் செய்வது. பரவலான மக்கள் அறுவை சிகிச்சையின் போது தண்டுவடத்தில் ஊசி போடுவதாக நினைக்கிறார்கள். உண்மையில், தண்டுவடத்துக்கு வெளியே உள்ள subarachnoid space எனும் பகுதியில்தான் ஊசியைச் செலுத்துகிறோம். கை மற்றும் கால் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யும்போது nerve blocks எனும் பகுதியில் மயக்க மருந்தைச் செலுத்துவோம்.
முன்னெச்சரிக்கை?
அறுவை சிகிச்சைக்கு ஒரு நாள் முன்பாக மயக்க மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும். மயக்கத்துக்கான உடற் தகுதி உங்களுக்கு இருக்கிறதா என அவர் சோதித்து அதற்கேற்றபடி முடிவெடுப்பார். மயக்க மருந்து நிபுணர் கூறும் ரத்தப் பரிசோதனைகள், இ.சி.ஜி., ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகிய பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். ஆஸ்துமா, நெஞ்சுவலி, இதயநோய்கள், ரத்தசோகை, இருமல், சளி, காய்ச்சல் ஆகிய பிரச்னைகள் இருந்தால் மயக்க மருந்து நிபுணரிடம் அவசியம் தெரியப்படுத்த வேண்டும்.
நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்தே அவருக்கு பொது மயக்க மருந்து அளிப்பதா, மண்டல மயக்க மருந்து அளிப்பதா என்கிற முடிவுக்கு வர முடியும். ஆஸ்துமா, இளைப்பு, தொண்டை வலி, சளி, இருமல் ஆகியவை இருந்தால் அதை சரி செய்து கொண்ட பிறகுதான் பொது மயக்க மருந்து கொடுக்க முடியும்.முதியவர்கள் – பெரும்பாலும் தவறி விழுந்து கை கால் எலும்புகள் முறிந்த நிலையில் எலும்பு, மூட்டு அறுவைசிகிச்சைக்கு வருவார்கள். அந்த வயதில் ரத்தக்கொதிப்பு, நீரிழிவு, ஆஸ்துமா, சிறுநீரகச் செயலிழப்பு என நிறைய உடற்பிரச்னைகள் இருக்கக்கூடும். இது போன்ற பல உடல் நலக்கோளாறுகளைக் கொண்ட நோயாளிகளின் நிலையை ‘ஹை ரிஸ்க்’ என்போம். இவர்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்வது மிகவும் சவாலானது.
உயிரிழப்பு ஏன்?
நோயாளியின் வயது மற்றும் எடையை வைத்துதான் மயக்க மருந்தின் அளவைத் தீர்மானிக்க முடியும். முன்பைக் காட்டிலும் இன்றைக்குள்ள மயக்க மருந்துகள் மிகவும் பாதுகாப்பானவை. 99 சதவிகிதம் இந்த மருந்துகள் காரணமாக உயிரிழப்பு நேரிடுவதில்லை. லட்சத்தில் ஒருவர் உயிரிழக்கலாம். அதற்கான காரணம் அவரது உடலின் தன்மையும் கூட.
பொது மயக்கத்தின்போது நோயாளியால் சுவாசிக்க முடியாது என்பதால் Endotracheal tubeஐ சுவாசக்குழாய் வழியே செலுத்தி செயற்கை சுவாசம் கொடுக்க வேண்டும். மிகவும் அரிதாக சில நேரங்களில் நோயாளிகளின் தொண்டை மற்றும் பல் அமைப்பு காரணமாக சுவாசக்குழாயில் ட்யூப் செலுத்துவது கடினமானதாக மாறி விடும்.
இந்நிலையை Difficult Intubation என்போம். முழு மயக்கத்துக்கு ஆளான நோயாளிக்கு 2-3 நிமிடங்களுக்குள் ஆக்சிஜன் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால் மூளை செயலிழந்து, நாடித்துடிப்பு மற்றும் இதயத்துடிப்பு நின்று உயிரிழந்து விடுவர். தாமதமாக ஆக்சிஜன் கொடுக்கப்படும்போது ரத்தம் இதயத்தில் பம்ப் ஆகி மூளைக்குச் செல்லாமல் போவதால் Hypoxic encephalopathy என்கிற கோமா நிலைக்கு ஆளாகி விடுகின்றனர்.
உயிரிழப்பைத் தவிர்க்க?
ஹைரிஸ்க் நோயாளிகள் அனைத்து வசதிகளுமுள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்தான் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அறுவைசிகிச்சையின்போது வேறு ஏதேனும் உடற்பிரச்னை வந்து விட்டால் அதை சரி செய்து அறுவை சிகிச்சையை மேற்கொள்ள மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்தான் முடியும். அறுவைசிகிச்சை வெற்றி கரமாக முடிந்தாலும், ஒரு நாள் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டும்.
அங்கு 24 மணி நேரமும் ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு மற்றும் சிறுநீர் வெளியேறும் அளவு தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்படும். இவையெல்லாம் நார்மலாக இருந்து இனி ஒன்றும் பிரச்னை இருக்காது என்று மருத்துவர் உறுதி செய்த பிறகே டிஸ்சார்ஜ் ஆக வேண்டும்.பொது மயக்க மருந்தை விட மண்டல மயக்க மருந்துதான் மிகவும் பாதுகாப்பானது. மண்டல மயக்க மருந்திலேயே ஸ்பைனல் மிகவும் பாதுகாப்பானது. ஸ்பைனல் கொடுப்பதால் முதுகு வலி ஏற்படுகிறது என்று பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
உண்மை என்னவெனில், 20 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பைனல் ஊசி பெரியதாக இருந்தது… அதன் காரணமாக முதுகு வலி ஏற்பட்டிருக்கலாம். இன்றைக்கு நூலிழை அளவில்தான் ஸ்பைனல் ஊசி இருக்கிறது. அதனால் முதுகுவலி வரவே வராது. விபத்துக்கு ஆளானவர்கள் polytrauma என்னும் உடலின் பல பகுதிகள் சிதைந்த நிலையில் அனுமதிக்கப் படுவர். அவர்களுக்கு ரத்தம் நிறைய வெளியேறியிருக்கும் என்பதால், அவசர சிகிச்சைக்கு பொது மயக்க மருந்துதான் சிறந்தது. nerve blocks பகுதியில் nerve locator எனும் கருவி மூலம் தசைத்துடிப்பை கண்டறிந்து சரியான நரம்பில் மயக்க மருந்தைச் செலுத்துவதும் பாதுகாப்பானதுதான். மிகவும் அரிதாக சிலருக்கு ஜன்னி வரலாம்.
மயக்க மருந்து நிபுணர் என்ன செய்கிறார்?
மயக்க மருந்து நிபுணருக்கு நோயாளியை மயங்க வைத்தவுடன் வேலை முடிவடைவதில்லை. அந்தந்த துறை சார்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் அவர்களின் பணியை மட்டும்தான் செய்வார்கள். அறுவை சிகிச்சையின்போது நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல், ரத்த அழுத்தம் ஆகியவற்றை கண்காணிப்பதும், வேறு பிரச்னைகள் ஏதாவது வரும்போது, அதை கட்டுக்குள் கொண்டு வருவதும் மயக்க மருந்து நிபுணர்கள்தான்.
அதனால், மயக்க மருந்து நிபுணருக்கு மருத்துவத்தில் அனைத்துத் துறைகள் சார்ந்த அறிவும் இருப்பது அவசியம். சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தீவிர கண்காணிப்புடன் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும்போது 99 சதவிகிதம் உயிரிழப்பு மற்றும் நினைவிழப்பைத் தவிர்க்க முடியும்’’ என்கிறார் தணிகைவேந்தன்.