தொழில் உலகில் வெற்றி பெற கையாள வேண்டிய அணுகுமுறைகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 152
தொழில் உலகில் என்னதான் ஊக்கத்தோடு செயல்பட்டாலும், சுற்றமும் சூழலும் வளர்ச்சியை நிர்ணயிக்கும் உந்துசக்தியாக விளங்கினாலும், நம்முடைய மனநிலையும் அணுகுமுறையும் தான் நாம் வெற்றி பெறுவதற்கு பெருமளவில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இவ்வாறு இருக்க, நம்மை நாமே மேம்படுத்திக் கொண்டு தொழிலில் சிறந்து விளங்க கடைபிடிக்க வேண்டிய அணுகுமுறைகளைப் பற்றி இன்று அறிந்து கொள்வோம்.
நிதர்சனங்களைப் புரிந்து கொள்தல் :
உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் பற்றிய நிதர்சனமான பார்வையையும், புரிதலையும் வளர்த்துக் கொள்ளும்போதுதான் சுய முன்னேற்றம் என்பது சாத்தியமாகும். அதிலும் நம்முடன் இணைந்து பணியாற்றுபவர்களிடம் எதிர்பார்ப்பைக் குறைத்துக்கொள்வது மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி சூழ்நிலையை யதார்த்தமாகப் புரிந்துகொண்டு கையாள்வதே புத்திசாலித்தனம்.
பலமும் பலவீனமும் :
தப்பித்தவறிகூட தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என நமக்கு நாமே கடிவாளம் போட்டுக்கொள்வது பல சிக்கல்களை உருவாக்கும். நம்முடைய குறைகளை ஏற்றுக்கொள்ளப் பழக வேண்டும். தம்முடைய பலவீனங்களை ஏற்றுக்கொள்ள இயலாதவர்களுக்கு தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். எனவே நமது குறைகளை ஏற்றுக்கொண்டு முன்னேற முயற்சிப்போம்.
குற்றம் பார்த்தல் :
நீங்கள் ஒரு குழு தலைவராக பொறுப்பேற்று இருக்கிறீர்கள். உங்கள் குழுவில் உள்ள சக பணியாளர்களில் ஒருவர் தவறு இழைத்துவிடுகிறார். தவறு இழைத்தவரை கண்டு நீங்கள் கோபம் கொள்கிறீர்கள். தண்டிக்கவும் செய்கிறீர்கள். இவ்வாறு செய்வதால் தீர்வு கிடைக்கப்போவதில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சூழலைக் கட்டுக்குள் கொண்டுவர நிதானமாக சிந்தித்து செயல்பட முற்படுங்கள்.
மகிழ்ச்சி :
சில செயல்களில் ஆரம்ப கட்டத்தில் முழு மூச்சுடன் ஈடுபட்டு செயல்படுவோம். நாளடைவில் நமது உத்வேகம் குறைந்து அந்த செயலே நமக்கு சலிப்பூட்டும். ஆகையால், நம்முடைய மனசோர்வுக்கு நாமே காரணம் ஆகிறோம். எனவே செய்யும் செயல்களை மகிழ்ச்சியுடன் செய்ய ஆரம்பியுங்கள்.
நேர்மறை சிந்தனை :
நேர்மறை சிந்தனையானது எப்பொழுதும் நமக்கு தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளிக்க வல்லது. அத்தகைய சிந்தனைதான் அனைத்து பிரச்சனைகளிலும் நேர்மறையான விஷயங்களை பார்க்கும் மனநிலையை உருவாக்குகிறது.
எட்டக்கூடிய இலக்கு :
நம்மால் எட்ட முடிந்த இலக்கை நிர்ணயிக்கும்போது, அதற்கான உத்வேகம் தானாகவே பிறக்கும். ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் அடைய வேண்டிய உயரத்தின் யதார்த்தமான சாத்தியக்கூறுகளைக் கணக்கிட்டுத் திட்டமிடுங்கள்; வெற்றி பெறுங்கள்.
முன்வர வேண்டும் :
கொடுத்த வேலையை மட்டுமே செய்வதற்கும், முக்கிய தீர்மானங்களை தானே முன்வந்து எடுப்பதற்கும் மிகப்பெரிய வேறுபாடு இருக்கிறது. தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும்போது தானாகவே முற்படுவதற்கான உத்வேகம் அதிகரிக்கும்.
நம்பிக்கையும் கடமையும் :
நமக்குப் பிடித்ததை மட்டும் செய்வதால் உற்சாகம் எழும் என சொல்லிவிட முடியாது. பிடித்த விஷயமாக இருந்தாலும் முழு ஈடுபாடுடன் செய்யும்போது மட்டுமே அது சாத்தியம்.
ஈடுபாடு தளர்ந்துபோகும் வேளைகளில் உங்களுடைய கடமைகளை செய்யுங்கள். அதுவே உங்களை வெற்றிப் பாதையில் வழிநடத்தும்.
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி :
தடைகளை எதிர்கொள்ளும்பொழுது தளர்ந்துபோவது சகஜம்தான். ஆனால் விழும்போது நம்மை நாமே எழுப்பிக்கொள்ளும் மனோதைரியத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.