மாணவர்கள் 100/100 புள்ளிகள் பெறுவது எப்படி?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 128
தேர்வு சமயத்தில் கஷ்டபட்டு படிக்கிறோம். ஆனால் முடிவுகள் வரும் போது நாம் நினைத்தாற் போல் வருவதில்லை. நம்முடைய கோணத்தில் நன்றாக மதிப்பெண் பெறுவோம் என்று நம்புவோம் ஆனால் மதிப்பெண் அளிப்பது ஆசிரியர்கள் தானே.. நீங்கள் பதில் எழுதும் விதம் அசத்தலாக இருக்க வேண்டும். ஒரு சில காரணத்தால் உங்களால் 100/100 மதிப்பெண் வாங்கமுடியாமல் போய்விடும். பரிட்சையை எப்படி எழுத வேண்டும் என்பதைப் பற்றி இங்கு காண்போம்.
வினாத்தாளை வாசிக்கப் பத்து நிமிடம்
முதலில் வினாத்தாளை வாங்கியவுடனே, கேள்விகளை நன்கு படியுங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த பதில்களின் அடிப்படையில் அந்தக் கேள்விகளை வரிசைப்படுத்தி குறித்துக்கொள்ளுங்கள். பின் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எழுத ஆகும் நேரத்தை அதன் அருகில் குறித்துக்கொள்ளுங்கள்.
மத குறியீடுகள் வேண்டாமே..!
இது எல்லாரிடமும் இருக்கும் பழக்கம் தான். அவரவர் நம்பிக்கைக்கு ஏற்றவாறு மதக் குறியீடுகளை விடைத்தாளில் எழுதுவது தேவையற்ற பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
முதலில் எதை எழுதுவது:
வினாத்தாளின் வரிசைப்படி எழுதாமல், உங்களுக்கு நன்கு தெரிந்த கேள்விகளின் அடிப்படையில் விடை எழுதுங்கள். அது விரிவாக விடை அளிக்க வேண்டிய கேள்வியாக இருந்தாலும் சரிதான். ஆனால் எந்தக் கேள்வியாக இருந்தாலும் நீங்கள் ஒதுக்கியிருக்கும் நேரத்துக்குள் அதற்கான விடையை எழுதிவிடுங்கள்.
எப்படி எழுதுவது?
எந்த கேள்விக்கு எந்தப் பதில் என்று ஆசிரியர் தேடும்படி ஆகிவிடக்கூடாது. நிறுத்தி நிதானமாக, திருத்தமாக எழுதுங்கள். முக்கியமாக எழுதும் தாள்களை மிச்சப்படுத்தி உங்களுடைய சிக்கனத்தை வெளிப்படுத்தத் தேவை இல்லை. முடிந்த வரை ஒவ்வொரு கேள்விக்கான விடையையும் புதுப் பக்கத்தில் தொடங்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எழுதும் எழுத்துகள் சற்றுப் பெரிதாகவே இருக்கட்டும். வார்த்தைகளுக்கு இடையேயும், வரிகளுக்கு இடையேயும் போதுமான இடைவெளி விட்டு எழுதுங்கள். விடைத்தாளைத் திருத்தும் ஆசிரியரின் கண்களுக்கு ஏற்படும் சிரமத்தை இது வெகுவாகக் குறைக்கும்.
தலைப்பு :
விடைகளின் தலைப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுங்கள். அதை வேறு வண்ணங்களில் எழுதுவது நன்று. அதற்காகச் சிவப்பு, பச்சையில் எழுதிவிடாதீர்கள். தலைப்புகளுக்கு அடிக்கோடிடுவது அவசியம். ஆனால், இதை உடனுக்குடன் செய்து நேரத்தை வீணடிக்காமல், கடைசியில் மொத்தமாகச் செய்வது புத்திசாலித்தனம்.
கொஞ்சம் அலங்கரிக்கலாமே..!
இறுதி 15 நிமிடங்களில் எதையும் எழுத வேண்டாம். விடைத்தாளின் பக்கங்களுக்கு எண் இடுவது, தலைப்புகளுக்கு அடிக்கோடு இடுவது, எல்லாப் பக்கங்களிலும் சுற்றுக் கோடு இடுவது ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள். முக்கியமாகக் கோடுகள் அனைத்தும் ஒரே வண்ணத்தில் இருப்பது உகந்தது.
தேவையற்றவையை தவிர்த்திடுங்கள் :
எக்காரணம் கொண்டும் விடைத்தாளில், ஆசிரியருக்குத் தனிப்பட்ட குறிப்பையோ கடிதத்தையோ எழுதாதீர்கள்.