மன்னருக்கு புறா கொடுத்த பரிசு!
- Editor
- Category: சிறுகதைகள்
- Hits: 425
அமரசிம்மா! அமைதியாக, ஆனந்தமாக தவம் செய்ய எனக்குக் காட்டில் இந்தப் பசுமை நிறைந்த சோலையை நீயும், உனது மந்திரியும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறீர்கள், மிக்க மகிழ்ச்சி. உனக்கு ஏதாவது ஒரு பறவையின் பேசும் மொழியை சொல்லித் தருகிறேன். எந்தப் பறவையின் மொழியை நீ கற்றுக் கொள்ள விரும்புகிறாய்?'' - துறவி கேட்டார்.
ஒரு நொடி யோசித்த அரசர் அமரசிம்மன், ''துறவியே, புறாக்கள் பேசும் பாஷையை கற்றுக் கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறினார்.
அதைக் கேட்ட துறவி, ''உங்கள் இருவருக்குமே யாம் கற்பிப்போம்'' என்று கூறிய அவர், மன்னருக்கும் மந்திரிக்கும் கற்பித்தார். இருவரும் மகிழ்ச்சியோடு கற்றுக் கொண்டனர்.
மன்னர் புறாக்கள் பேசும் மொழியை அறிந்துக் கொள்ளக் காரணம், இரண்டு மாதங்களுக்கு முன்னால் அமரசிம்மன் தன் தோட்டத்தை சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த போது, அவர் காலடியில் ஏதோ 'பொத்' என்று விழுந்தது. குனிந்து கையில் எடுத்தார்.
ஓர் அழகான புறாக் குஞ்சு. வெண் பஞ்சு நிறம். வெள்ளைப் பட்டின் பளபளப்பு. சுடர்விடும் குட்டி குட்டி மணிக் கண்கள். கொஞ்சிப் பார்க்கத் தூண்டும் சுடர் பிஞ்சு அலகு. அண்ணாந்து பார்த்தார். உயரத்தில் கழுகு பறப்பது தெரிந்தது.
பிறந்து சில நாட்களே ஆன அந்தக் குஞ்சை கழுகு தூக்கிச் செல்லும் போது நழுவி விழுந்து விட்டது என்று புரிந்துக் கொண்டார். நடுங்கிக் கொண்டிருக்கும் அதன் பட்டுடலை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.
''நீ பயப்படாதே. உன்னை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. உனக்கு இப்பவே சிபி என்று பெயர் வைத்து விட்டேன்'' என்று கூறி, அரண்மனைத் தோட்டத்திற்குள்ளேயே நல்ல முறையில் அதை வளர்க்கத் தொடங்கினார். எத்தனை வேலை இருந்தாலும், தினம் ஒரு முறை அதைப் பார்த்து கொஞ்சி விட்டுத்தான் செல்வார். சிபியும் மகிழ்ச்சியோடு மன்னரின் தோளிலும், கரங்களிலும் விளையாடும்.
சிபியோடு பேசி மகிழத்தான் மன்னர் துறவியிடம் அவ்வாறு தெரிவித்தார்.
அரண்மனைக்குத் திரும்பிய மன்னர் சிபியைப் பார்க்க விரைந்தார். அதன் மொழியில் பேசினார். சிபிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை.
''அரசே! என்னைக் காப்பாற்றி என் மீது அன்பு காட்டி வளர்க்கிறீர்கள். தங்கள் அன்பிற்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்'' என்று உள்ளன்போடு கூறியது.
மறுநாள் மன்னரிடம், ''அரசே! எனக்குத் துணையாக இன்னொரு புறாவையும் வளர்த்தால் மகிழ்ச்சி அடைவேன்'' என்றது.
உடனே மன்னர் இன்னொரு புறாவை வரவழைத்தார். சாம்பல் வண்ணத்தில் இருந்த அந்தப் புறாவிற்கு அபி என்று பெயர் சூட்டினார். இரண்டு புறாக்களுக்கும் ஒன்றையொன்று மிகவும் பிடித்து விட்டன.
தினமும் மன்னர் சிபியோடும், அபியோடும் பேசிவிட்டுத்தான் அரசவைக்கே செல்வார். மந்திரியும் அடிக்கடி வருவார். இவர்களது சந்திப்பு மகிழ்ச்சியாக பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தன.
அன்று வழக்கம் போல இரண்டு புறாக்களும் மன்னரின் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தன. ஏனோ அன்று மன்னர் வரவில்லை. மந்திரியும் வரவில்லை. மறுநாளும் வரவில்லை. இப்படியாக ஒருவாரம் ஓடிப் போனது.
''அபி... ஒருவாரமாக நம் மன்னர் இங்கு வரவில்லை. ஒருவேளை அவருக்கு உடம்பு சரியில்லையோ?'' என்று கவலையோடு கேட்டது சிபி.
''எனக்கு மந்திரி வீடு தெரியும். நான் வேண்டுமானால் அவரைப் பார்த்து விட்டு வரட்டுமா?'' என்று அபி சொல்லிக் கொண்டிருக்கும் போதே மன்னர் அங்கு வந்து விட்டார். ஆசையோடு சிபியை தூக்கி வைத்துக் கொண்டார்.
''அரசே! தாங்கள் ஒருவாரமாக வராத காரணம் புரியவில்லை. உடல்நலத்தோடு தானே இருக்கிறீர்கள்?'' என்று சிபி, அவரை தன் அலகாலும், இறக்கையாலும் தொட்டுப் பார்த்தது. தடவியும் பார்த்தது. அதன் அன்பு மன்னரை நெகிழ வைத்தது.
''சிபி... உனக்குத்தான் என் மீது எத்தனை அன்பு. உன்னை வந்து பார்க்க நினைத்தாலும் நேரம் கிடைக்கவில்லை'' என்றார்.
''அப்படி என்ன மிகவும் முக்கியமான அரசியல் விஷயமா?'' சிபி வினவியது.
''ஆமாம். அண்டை நாடான அனந்தபுரி நாட்டின் மீது படையெடுக்கப் போகிறேன்.''
''அந்த மன்னர் தங்கள் மீது போர் தொடுக்க வரப் போகிறாரா?''
''இல்லை. நான்தான் வலியச் சென்று போர் புரியப் போகிறேன்.''
''ஒருவேளை நீங்கள் போரில் தோற்றுவிட்டால்...''
''ஹஹ்ஹா... ஹஹ்ஹா... நான் தோற்கவே மாட்டேன். ஏன் தெரியுமா? போர் வீரர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி கொடுத்திருக்கிறேன். அப்படியே தோற்றாலும் வெற்றி பெறும் வரை ஓயமாட்டேன். எனக்கு என்ன ஆசை தெரியுமா? பல நாடுகளை வெல்ல வேண்டும். என்னை எல்லோரும் 'சக்ரவர்த்தி அமரசிம்மன்' என்று கூறிட வேண்டும். என் பெயரைக் கேட்டாலே எல்லா மன்னர்களும் நடுங்க வேண்டும். தோற்றவர்கள் எனக்குக் கப்பம் கட்ட வேண்டும்.'' இதைக் கேட்டதும் சிபி திடுக்கிட்டது. அதிர்ச்சியில் அதனால் சில நொடிகள் பேசக் கூட முடியவில்லை.
''சிபி, எதிரிகளை எளிதில் வீழ்த்த அதிக பொருட் செலவில் புது வகையான ஆயுதம் ஒன்று கண்டுபிடிக்க ஆலோசனை வழங்கியுள்ளேன். அது வெற்றி பெற்றால் அப்புறம் என்ன? இந்த உலகமே என் கையில்தான்'' கர்வத்தோடு கூறினார்.
தன்னை சமாளித்துக் கொண்டு சிபி கேட்டது. ''மன்னரே, மந்திரி என்ன சொல்கிறார்?''
''நான் போர் தொடுப்பதில் அவருக்கு சிறிது கூட விருப்பம் இல்லை. ஆனால் நான் உறுதியாக இருக்கிறேன். என் முடிவை யாராலும் மாற்ற முடியாது. இன்னும் நான்கு நாட்களில் கிளம்புகிறேன்.''
சில நொடிகள் யோசித்த சிபி, மன்னரின் தோள் மீது அமர்ந்துக் கொண்டது. மன்னரிடம், ''அரசே! தாங்கள் சண்டைக்கு கிளம்புவதற்கு முன்பு என்னோட சிறிய விருப்பம் ஒன்றை தாங்கள் நிறைவேற்றுவீர்களா?'' என்று பணிவுடன் கேட்டது.
''சிபி... உன் மீது நான் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் தெரியுமா? நீ என் குழந்தை மாதிரி. என் உள்ளத்திலே உனக்கு இடம் கொடுத்து விட்டேன். உன் விருப்பத்தை கட்டாயம் நிறைவேற்றுவேன், இது உறுதி.''
''மன்னா... மிக்க நன்றி! நாளை மதியம் தாங்கள் என் விருப்பப்படி தனியாக அமர்ந்து சாப்பிட வேண்டும். சாப்பிடும் போது தங்களுக்கு ஒரு பரிசு கொடுக்கப் போகிறேன்.''
''அப்படி என்ன பரிசு?'' - மன்னர் ஆவலுடன் வினவினார்.
''தங்களால் மறக்க முடியாத பரிசு. இப்பொழுது சொல்ல விரும்பவில்லை.''
அரசரின் மனம் பூராகவும் போர் சம்பந்தமான விஷயங்களில் ஈடுபட்டிருந்ததால், ''சரி... சிபி, உன் பரிசை கட்டாயம் ஏற்றுக் கொள்கிறேன்'' என்று கூறிவிட்டுச் சென்றார்.
மறுநாள், நண்பகல். மன்னருக்கு நல்ல பசி. சிபியின் வேண்டுகோளின் படி மன்னர் மட்டும் சாப்பிட அமர்ந்தார். தங்கத் தட்டில் உணவு வகைகள் பரிமாறப்பட்டன. தும்பைப் பூவைப் போல மின்னும் சாதத்தை கையில் எடுத்தார். அருகில் தங்கள் கிண்ணத்தில் நெய் மணக்கும் வாசனைப் பொருட்கள் மூக்கைத் துளைக்க, வெள்ளையும் சிவப்புமாகக் கலந்த அந்த உணவுப் பொருளை வியப்புடன் பார்த்தார்.
''இது என்ன புதுவகையான உணவு?'' - மன்னர் வினவினார்.
''அரசே! இது புறாக் கறி. மிகவும் சுவையாக சமைத்திருக்கிறேன்'' - புதிய சமையல்காரர் தெரிவித்தார்.
''மன்னா! என்ன யோசிக்கிறீர்கள்? சாப்பிடுங்கள்'' என்று புறா பாஷையில் பேசுவது காதில் விழவே திடுக்கிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார்.
சற்று தள்ளி இருந்த மேடையில், அபி புறா வருத்தம் தோய்ந்த முகத்தோடு இருந்தது.
''நீ வந்திருக்கே? என் சிபி எங்கே?''
''உங்கக் கிண்ணத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே... அதுதான் சிபி.''
''எ..ன்..ன..?'' அதிர்ச்சியில் மன்னரின் கையில் இருந்த உணவு நழுவி கீழே விழுந்தது. கரங்கள் நடுங்கின. அவர் பார்வை அவரையும் அறியாமல் தங்கக் கிண்ணத்திற்குள் சென்றது.
பளபளக்கும் வெண்பட்டு உடல். மின்னும் மணிக் கண்கள், மொட்டு போன்ற அலகு, மணியான பேச்சு. பறந்து ஓடி ஆடி தோளிலும், கையிலும் அமர்ந்துக் கொண்ட வெண் பஞ்சு பாதங்கள். எல்லாம்... எல்லாம்... மேற்கொண்டு பார்க்க முடியாது கண்ணீர் திரை மறைத்தது. நெஞ்சை துக்கம் அடைத்தது. இதயம் ஓலமிட்டது. உடைந்து நொறுங்கிய உள்ளம் துடித்தது.
''அரசே! பல மாதங்களாக நீங்கள் வளர்த்து புறாவிற்கே இப்படி வருந்துகிறீர்கள். பத்து மாதம் சுமந்து பெற்று, வளர்த்து, ஆளாக்கிவிட்ட மகன் நாளையே போரில் ரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது, அந்தத் தாயின் உள்ளம் என்ன பாடுபடும்? தங்களை அனைவரும் 'மாமன்னர்' என்றும், 'சக்கரவர்த்தி' என்றும் அழைக்க எத்தனை உயிர்களை காவு கொடுக்கப் போகிறீர்கள்?''
மன்னர் அதிர்ந்தார். அபி பேச்சைத் தொடர்ந்தது.
''அரசே! நீங்கள் ஆசைபடுவது போல் மற்ற நாட்டு மன்னர்களும் தங்கள் நாடுதான் பலம் வாய்ந்த நாடாக இருக்க வேண்டும்; தங்களைக் கண்டு மற்ற மன்னர்கள் நடுங்க வேண்டும் என்று நினைத்தால் வருங்கால உலகம் எப்படி இருக்கும்? பலம் வாய்ந்த நாடு பலம் குன்றிய நாட்டை அழிக்க நேரம் பார்த்துக் கொண்டிருக்கும். அப்புறம் மாறி மாறி போர் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.
அதிக பொருட் செலவில் ஒரு புதுவகையான ஆயுதம் கண்டுபிடித்து எதிரிகளை மடக்க விரும்புவதாகச் சொன்னீர்கள். எதிரிகளையும் நம் வசம் இழுக்க அன்பு என்கிற ஆயுதம் போதும். அன்பிற்கு இணையான ஆயுதம் எதுவும் கிடையாது. உங்கள் மனதிலும் அன்பு, பாசம், கருணை போன்ற உயர்ந்த பண்புகள் இருக்கின்றன. அந்தப் பண்புகள்தான் சிபியை வளர்க்கத் தூண்டின. தங்கள் உள்ளத்தை இரக்கமற்றதாக மாற்றிக் கொண்டு விலைமதிப்பற்ற உயிர்களை உங்களுக்காக கொல்லாதீர்கள். மந்திரி சொல்வதையே கேட்காத நீங்கள், புறா சொல்லியா கேட்கப் போகிறீர்கள்? அதனால்தான் சிபி இந்த முடிவுக்கு வந்தது. தங்கக் கிண்ணத்தில் இருக்கிறதே... அதுதான் சிபி தங்களுக்கு கொடுத்திருக்கும் பரிசு'' என்று கூறிவிட்டு, அபி வெளியே சென்று வானில் பறக்கத் துவங்கியது.
''சிபி... நான் கொடுக்கும் பரிசு மறக்க முடியாத பரிசு என்று சொன்னாய். உண்மையிலேயே மறக்க முடியாத பரிசு மட்டுமில்லை, என் உள்ள கதவுகளைத் திறந்து விட்ட பரிசு. இனி இந்த அமரசிம்மன் எந்த நாட்டின் மீதும் வலிய சென்று போர் செய்யமாட்டான். இது உறுதி'' - மன்னர் மனதிற்குள் முடிவெடுத்தார்.
விழிகளில் அவரையும் மீறி கண்ணீர் பெருகி, தங்கக் கிண்ணத்திற்குள் இருந்த சிபியின் சிதைக்கப்பட்ட உடலில் விழ ஆரம்பித்தது.