Switch Language:   English | தமிழ்

    முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த்

    முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். இந்தியா முழுவதும் சிஸ்டம் சரியில்லையா என்ற கேள்விக்கு பதிலளித்த ரஜினி இதனைத் தெரிவித்திருக்கிறார்.

    சென்னை போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த ரஜிகாந்த்திடம் கமல்ஹாசனின் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "அதற்கு காலம் தான் பதில் சொல்லும்" என்று கூறினார்.

    மேலும், தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று கூறியிருக்கிறீர்கள், தமிழகத்தில் மட்டும் சிஸ்டம் சரியில்லையா, இந்தியா முழுவதுமே அப்படித்தானா என்று கேட்டபோது, முதலில் தமிழகத்தில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டுமென ரஜினி கூறினார்.

    நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

    ரஜினிகாந்த் தொடங்கவிருக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கப்படுமா என்பது குறித்து இப்போது முடிவெடுக்க முடியாது; இரு கட்சிகளும் கொள்கைகளை அறிவித்த பிறகுதான் அது குறித்து முடிவெடுக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்திருந்த நிலையில் ரஜினி இவ்வாறு கூறியிருக்கிறார்.

    தான் நடித்த 2.0 படத்தை ஏப்ரல் 27ஆம் திகதி வெளியிட திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், அந்தப் படத்தின் கிராஃபிக்ஸ் பணிகள் இன்னும் முடிவடையாததால் படம் வெளியாவது தள்ளிப்போகலாம் என்றும் அது குறித்து 2 அல்லது மூன்று நாட்களில் அறிவிக்கப்படும் என்றும் ரஜினி கூறினார்.