முகப்பரு தழும்பு இருந்த இடம் தெரியாமல் மறையுமா? சில ஃபேஸ் மாஸ்க்குகள் டிப்ஸ் இதோ!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 70
அழகாக இருக்க வேண்டுமென்று அனைவரும் ஆசைப்படும் நிலையில், அந்த அழகைக் கெடுக்கும் வகையில் சில சமயங்களில் முகப்பருக்கள் வரத் தொடங்கும். ஒருவருக்கு முகப்பரு எப்போது வருமென்றால், சருமத்துளைகளில் அதிகப்படியான எண்ணெய் மற்றும் இறந்த செல்கள் அதிகம் சேர்ந்து அடைப்பை ஏற்படுத்தும் போது வரும்.
எனவே முகப்பரு வராமல் இருக்க வேண்டுமானால், சருமத்தில் சேரும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை அவ்வப்போது தவறாமல் நீக்க வேண்டும். அதற்கு ஸ்கரப், ஃபேஸ் பேக் போன்றவற்றைப் போட வேண்டும். அதோடு முகத்தில் வரும் பருக்கள் மறையும் போது, அவ்விடத்தில் அசிங்கமாக தழும்புகளை விட்டுச் செல்லும். இப்படியான தழும்புகள் அவ்வளவு எளிதில் மறையாமல் இருப்பதோடு, முக அழகையே சீரழிக்கும்.
உங்கள் முகத்திலும் இப்படி அசிங்கமான முகப்பரு தழும்புகள் உள்ளதா? இந்த தழும்புகளை மறைக்க சிரமப்படுகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் கீழே முகப்பரு தழும்புகளைப் போக்க உதவும் சில ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அந்த ஃபேஸ் மாஸ்க்குகளைப் பயன்படுத்தினால், விரைவில் முகப்பரு தழும்புகளைப் போக்கலாம்.
கற்றாழை ஃபேஸ் மாஸ்க்
ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அத்துடன் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க் முகப்பரு தழும்புகளை போக்குவதோடு, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை சருமத்தில் இருந்து நீக்கும்.
மஞ்சள் மற்றும் தேன் மாஸ்க்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேனை எடுத்து, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்க்கை போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள முகப்பருக்கள் குறைவதோடு, அந்த பருக்களால் ஏற்பட்ட தழும்புகளும் மறையும். அதற்கு இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த வேண்டும்.
ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் க்ரீன் டீ ஃபேஸ் மாஸ்க்
இதை ஃபேஸ் மாஸ்க் என்பதை விட டோனர் என்றே கூறலாம். ஏனெனில் இது சருமத்தின் pH அளவை சீராக்க உதவி புரிகிறது மற்றும் சருமத்தில் உள்ள அழுக்குகுள் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. அதோடு, இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளதால், இது சருமத்தை இளமையாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுகிறது.
அதற்கு ஒரு கப் நீரில் 1 டீஸ்பூன் க்ரீன் டீ இலைகளைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி குளிர வைக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, அத்துடன் 1 கப் ஆப்பிள் சீடர் வினிகரையும் சேர்த்து கலந்து, அதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பின் அதை ஃப்ரிட்ஜில் வைத்து, தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை பஞ்சுருண்டையில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுக்க வேண்டும். ஒருவேளை உங்களுக்கு சருமத்தில் அரிப்புக்கள் ஏற்பட்டால், உடனே அதை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்.
பாதாம் பால் மற்றும் முட்டை ஃபேஸ் மாஸ்க்
ஒரு பௌலில் 2 டீஸ்பூன் பாதாம் பால் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து கலந்து, அத்துடன் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். அதன் பின் அந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை போடுவதால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்படுவதோடு, முகப்பரு தழும்புகளும் மறையும். அதோடு இந்த ஃபேஸ் மாஸ்க் சருமத்திற்கு நல்ல பொலிவைக் கொடுக்கும்.