உங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி பலவீனமா இருக்கா? மழை வந்தாலே சளி பிடிக்குதா? அப்ப இந்த டீயை அடிக்கடி செஞ்சு குடிங்க!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 88
என்ன தான் சூரியன் கண்ணில் தென்பட்டாலும், திடீரென்று காலநிலை மாறி கன மழையும் பெய்து வருகிறது. இப்படி காலநிலை சட்டென்று மாறிக் கொண்டே இருப்பதால், நிறைய பேர் சளி, காய்ச்சல், ஜலதோஷம் போன்றவற்றால் அவதிப்படுவார்கள். பலவீனமான நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டிருந்தால் தான் இம்மாதிரியான பிரச்சனையை அதிகம் சந்திக்க நேரிடும்.
பொதுவாக மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருக்கும். எனவே மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில மூலிகை டீ அல்லது கசாயங்களைத் தயாரித்துக் குடிக்க வேண்டும். இப்படி மூலிகை டீயை குடிக்கும் போது, அதில் உள்ள மருத்துவ பண்புகள் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, நோய்த்தொற்றுக்களின் அபாயத்தைத் தடுக்கும்.
மேலும் மூலிகை டீக்களைக் குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி மேம்படுவது மட்டுமின்றி, உடலுக்கு இன்னும் பலவிதமான நன்மைகளும் கிடைக்கும். இப்போது மழைக்காலத்தில் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்த குடிக்க வேண்டிய சில மூலிகை டீக்களைக் குறித்து காண்போம். முடிந்தால் இந்த டீயை அடிக்கடி செய்து குடித்து, நன்மை பெறுங்கள்.
1. மஞ்சள் டீ
பழங்காலம் முதலாக சமையலில் மட்டுமின்றி, நாட்டு வைத்தியத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள் தான் மஞ்சள். ஏனெனில் மஞ்சளில் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் போன்றவை அதிகமாக உள்ளன. அதோடு இதில் உள்ள குர்குமின், உடலைத் தாக்கும் பலவிதமான கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது.
அப்படிப்பட்ட மஞ்சள் தூளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சி மற்றும் மிளகைத் தட்டிப் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி மழைக்காலத்தில் குடிக்கும் போது நோயெதிர்ப்பு சக்தி வலுபெறும்.
2. இஞ்சி டீ
இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பலவிதமான தொற்றுக்களில் இருந்து உடலைப் பாதுகாக்கும். மேலும் இஞ்சி சுவாச பிரச்சனைகளையும் குறைக்க உதவுகிறது.
அப்படிப்பட்ட இஞ்சியை ஒரு துண்டு எடுத்து தட்டி, கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன், மஞ்சள் தூள் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடித்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையாகும்.
3. துளசி டீ
துளசியில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. இவ்வளவு சத்துக்களை உள்ளடக்கிய துளசியின் இலைகளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் சிறிது இஞ்சி, ஏலக்காயை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து குடித்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுபெறுவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறையும்.
4. எலுமிச்சை டீ
எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளன. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த தேவையான முக்கியமான சத்து. இந்த எலுமிச்சையைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், நோயெதிர்ப்பு சக்தி வலுபெறுவதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாடும் சிறப்பாக இருக்கும்.
அதோடு இந்த டீ சளியில் இருந்து நிவாரணம் அளிக்கவும் செய்யும். அதற்கு சிறிது நீரை கொதிக்க வைத்து இறக்கி, அத்துடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
5. புதினா டீ
புதினா குளிர்ச்சி பண்புகளைக் கொண்டது என்பதை அனைவரும் அறிவோம். அதே சமயம் இது செரிமான பிரச்சனைகளில் இருந்தும் விடுவிக்கும். முக்கியமாக இந்த புதினாவில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை உள்ளன. இவை சைனஸ் பிரச்சனைகளில் இருந்து விடுவிக்க உதவி புரிகிறது.
அதற்கு ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி கொதிக்க ஆரம்பித்ததும், புதினா இலைகளை சேர்த்து 2 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் அதை வடிகட்டி, தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை கலந்து குடிக்க வேண்டும்.
6. பட்டை டீ
அனைவரது சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த மசாலா பொருள் தான் பட்டை. இந்த பட்டையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் போன்றவை அதிகம் உள்ளன. இவை உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவி புரிகிறது.
அதோடு இது இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்படுத்தி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. அதற்கு கொதிக்கும் நீரில் 1 துண்டு பட்டை அல்லது சிறிது பட்டைத் தூள் சேர்த்து 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதை வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள டீ வகைகள் அனைத்துமே நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் அற்புதமான பானங்களாகும். உங்களுக்கு மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்றவை வராமல் இருக்க வேண்டுமானால், இந்த பானங்களை அடிக்கடி தயாரித்து குடித்து வாருங்கள்.