புற்றுநோய் எதனால் உருவாகிறது? அதை எப்படி தவிர்ப்பது?
- admin
- Category: உடல் நலம்
- Hits: 250
உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.
- புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
- மது அருந்தும் பழக்கம்
- அதிக உடல் எடையுடன் இருப்பது
- குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
- உடல் உழைப்பு இல்லாமை
மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.
உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.
புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.
எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?
மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், காற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.
எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாக்கும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன் மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன் மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.