நீங்க அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரை போடுபவரா? உங்களோட இந்த உறுப்பு செயலிழக்க வாய்ப்பிருக்கு; உஷார்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 92
பாராசிட்டமால் என்பது வலிக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மாத்திரை. முக்கியமாக இது அதிகப்படியான உடல் வெப்பநிலையைக் குறைக்கவும் உதவுகிறது. இது தவிர, தலைவலி, பல் வலி, பிடிப்புகள் மற்றும் சளி, ஜலதோஷத்தால் ஏற்படும் காய்ச்சலைக் குறைக்கவும் உதவுகிறது.
மருத்துவரிடம் காய்ச்சல், தலைவலி என்று சென்றால், அவர் முதலில் பாராசிட்டமால் மாத்திரையை தான் கொடுப்பார்கள். இதை தெரிந்து வைத்துக் கொண்டு, நிறைய பேர் தாங்கள் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு மருத்துவரிடம் செல்லாமலேயே இந்த மாத்திரையை அடிக்கடி எடுக்கிறார்கள். ஆனால் இந்த மாத்திரையை அதிகமாக எடுத்தால், அது மிகவும் ஆபத்தானது.
அதுவும் தற்போது காலநிலை அடிக்கடி மாறுவதால், நிறைய பேர் காய்ச்சல், இருமல், சளி, தலைவலி போன்றவற்றால் அதிகம் அவதிப்படக்கூடும். இந்நிலையில் மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலேயே பாராசிட்டமால் மாத்திரைகளை பலர் எடுத்து வருகிறார்கள்.
ஆனால் இந்த பாராசிட்டமால் மாத்திரையை ஒருவர் அதிகமாக உட்கொண்டால், அதனால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பது தெரியுமா? இப்போது பாராசிட்டமால் மாத்திரையை ஏன் அதிகம் உட்கொள்ளக்கூடாது, அதனால் சந்திக்கும் பக்கவிளைவுகள் என்னவென்பதைக் காண்போம்.
பாராசிட்டமாலின் நன்மைகள்
பாராசிட்டமால் காய்ச்சலை குறைப்பதைத் தவிர, ஒரு உடனடி நிவாரணம் அளிக்கக்கூடிய வலி நிவாரணியாக செயல்படுகிறது. முக்கியமாக இந்த மாத்திரை பின்வரும் வலிகளில் இருந்து உடனடி நிவாரணத்தை அளிக்கிறது. அவை:
* பல் வலி
* முதுகு வலி
* தொண்டை வலி
* நரம்பு தளர்ச்சி
* தலைவலி
* மாதவிடாய் கால் வலி
ஆனால் இப்பிரச்சனைகளுக்கு எப்போதும் பாராசிட்டமாலை நீங்கள் எடுப்பவராயின், உடனே அதை நிறுத்திவிட்டு, மருத்துவரை அணுகி சரியான காரணத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறு மருந்துகளை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பின்வரும் பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும்.
இரத்தக்கசிவு
பாராசிட்டமால் மாத்திரையை யார் ஒருவர் அதிகமாக உட்கொள்கிறார்களோ, அவர்கள் இரத்தக்கசிவு தொடர்பான சிக்கல்களால் அதிகம் அவதிப்படக்கூடும். அதுவும் இந்த மாத்ரையை ஆஸ்பிரின் போன்ற பிற மருந்துகளுடன் உட்கொள்ளும் போது, நிலைமை இன்னும் மோசமாகும்.
அலர்ஜி
சிலர் பாராசிட்டமால் மாத்திரையால் அலர்ஜி பிரச்சனைகளை கூட சந்திக்கக்கூடும். அதுவும் சருமத்தில் தடிப்புகள், கடுமையான அரிப்புகள் மற்றும் மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளை சந்திக்கக்கூடும்.
இரத்த சோகை
நீண்ட காலமாக பாராசிட்டமால் மாத்திரையை உட்கொண்டால், அது இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி வழக்கத்தை விட குறைந்து, இரத்த சோகையை சந்திக்கக்கூடும். ஒருவருக்கு இரத்த சோகை வந்துவிட்டால், உடலுறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காமல், எந்நேரமும் மிகுந்த உடல் சோர்வையும், பலவீனத்தையும் உணரக்கூடும்.
கல்லீரல் சேதம்
முக்கியமாக பாராசிட்டமால் மாத்திரையை ஒருவர் அளவுக்கு அதிகமாக எடுத்தால், அது கல்லீரலில் சேதத்தை ஏற்படுத்தி, சில சமயங்களில் கல்லீரல் செயலிழப்பை கூட உண்டாக்கும். கல்லீரலில் பிரச்சனைகள் ஏற்பட்டிருந்தால், கண்கள் மற்றும் சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும், சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும் மற்றும் அடிவயிற்று வலியை சந்திக்கக்கூடும். முக்கியமாக இந்த அறிகுறிகள் காலப்போக்கில் மோசமடையும். எனவே கவனமாக இருங்கள்.
பிற பக்கவிளைவுகள்
பாராசிட்டமால் மாத்திரையை ஒருவர் அதிகமாக அல்லது தினமும் உட்கொண்டால், அதன் விளைவாக வயிற்றுப் போக்கு, அதிகப்படியான வியர்வை, பசியின்மை, வாந்தி/குமட்டல், வயிற்று பிடிப்புகள்/வலி, மேல் வயிற்று வீக்கம்/வலியை சந்திக்க நேரிடும்.
பாராசிட்டமால் எடுப்பவர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்:
* பாராசிட்டமால் மாத்திரையை எடுத்த பின், அதன் தாக்கம் தொடங்க அதிகபட்சமாக 1 மணிநேரம் எடுக்கும்.
* ஒரே நேரத்தில் 2 பாராசிட்டமாலுக்கு மேல் எடுக்கக்கூடாது. அதுவும் பெரியவர்கள் 24 மணிநேரத்தில் 4 டோஸ் பாராசிட்டமாலை எடுக்கலாம். அதுவும் ஒவ்வொரு டோஸையும் 4 மணிநேரத்திற்கு ஒருமுறை எடுக்க வேண்டும்.
* கர்ப்ப காலத்தில் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது பாராசிட்டமாலை எடுப்பது பாதுகாப்பானது தான். ஆனால் அதுவும் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் தான் எடுக்க வேண்டும்.