காலை தூங்கி எழுந்திருக்கும்போது அடிக்கடி தலைவலிக்குதா?
- Imran
- Category: உடல் நலம்
- Hits: 171
ஒரு நாளின் தொடக்கம் காலை நேரம். இந்த நேரம் எப்படி அமைகிறதோ, அப்படி தான் அந்த நாள் முழுதும் அமையும். காலை நேரத்தில் நமது மனநிலை இருக்கும் விதத்தில் தான் அந்த நாள் முழுதும் நாம் இருப்போம். ஆகவே புத்துணர்ச்சியான காலை நேரம் தான் நாள் முழுதும் புத்துணர்ச்சியைத் தரும்.
காலை நேரத்தில் எழும்போதே உண்டாகும் சோர்வு, நாள் முழுதும் நம்மை ஆட்டிப்படைத்து விடும். இதற்கு உதாரணம், காலை எழும்போதே நமக்கு உண்டாகும் தலை வலி. காலையில் எழும்போதே தலைவலியுடன் எழுந்தால் அந்த நாள் முழுதும் ஒரு அசௌகரியம் நிலைத்து நிற்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
காலைநேர தலைவலி
பொதுவாக காலையில் எழும்போதே உண்டாகும் தலைவலிக்கு பலவித காரணங்கள் உண்டு. தனது வாழ்நாளில் இத்தகைய தலைவலியை அனுபவிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஒரு சிலர் இத்தகைய தலைவலியை அடிக்கடி அனுபவிப்பார்கள், ஒரு சிலருக்கு தினமும் காலையில் தலைவலி உண்டாகும் நிலையும் உண்டு. உங்கள் உடலில் இயற்கை வலி நிவாரணிகள் குறைந்த அளவில் இருப்பதால் காலையில் தலைவலி ஏற்படலாம். இதனால் ஒற்றை தலைவலி அல்லது வேறு விதமான தலைவலி உண்டாகலாம். கடுமையான உடல் நல பிரச்சனைகள் எதுவும் காலை நேர தலைவலிக்கு காரணம் இல்லை.
காரணம்
காலையில் உண்டாகும் தலைவலி பொதுவாக ஒற்றைத் தலைவலியாக இருக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் மருந்துகள் உறங்குபோது உங்கள் உடலில் குறைந்து விடும். இதன் காரணமாகவும் தூங்கி எழுந்தவுடன் மீண்டும் தலைவலி உண்டாகலாம்.
மூச்சுத்திணறல்
தூக்கத்தில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறவர்களுக்கு காலையில் தலைவலி உண்டாகலாம், அல்லது பல் வலி காரணமாகவும் காலையில் தலைவலி உண்டாகலாம். இரவில் சரியான உறக்கம் இல்லாததால் கூட சில நேரம் காலையில் எழும்போதே தலைவலியுடன் எழலாம். மூளையில் கட்டி இருந்தாலும் காலையில் தலைவலி ஏற்படலாம். இரவில் உறங்கும் போது பற்களை நறநறவென்று கடிக்கும் பழக்கம் சிலருக்கு உண்டு. அவர்கள் இத்தகைய காலை நேர தலைவலியை உணரலாம். அல்லது மனச்சோர்வு இருந்தாலும் காலையில் தலைவலி உண்டாகலாம். உங்களுக்கு அடிக்கடி காலையில் தலைவலி ஏற்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்யலாம்.