இந்த 4 உணவுகளை சர்க்கரை நோய் உள்ளவர்கள் மறந்தும் சாப்பிட்ராதீங்க.. இல்ல உயிருக்கே ஆபத்தாயிடும்!
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 53
உலகளவில் இந்தியாவில் தான் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மேலும் நாளுக்கு நாள் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பரம்பரை முதன்மையான காரணமாக இருந்தாலும், தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளன.
சர்க்கரை நோய் வந்து வந்தால், உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதுவும் இவர்கள் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்த மற்றும் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் குறைவான பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களை உட்கொள்ள வேண்டும். தற்போது நம்மைச் சுற்றி வாய்க்கு விருந்தளிக்கும் வகையிலான ஏராளமான உணவுகள் உள்ளன. அவற்றை பார்த்தவுடனேயே கட்டாயம் சுவைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் எழும் அளவில் உள்ளன.
இந்த வகை உணவுகளை சிறிது உட்கொண்டாலும், அவை இரத்த சர்க்கரை அளவு மற்றும் இன்சுலின் அளவு சட்டென உயர்த்தி, உடலினுள் சிக்கலை ஏற்படுத்த தொடங்கிவிடும். சர்க்கரை நோய் இருப்பவர்கள் உணவில் மிகவும் கவனமாக இல்லாவிட்டால், அது இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் குருட்டுத்தன்மை போன்ற நாள்பட்ட ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரித்துவிடுவதாக கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டில் சுமார் 537 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயுடன் வாழ்ந்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் 2030 ஆம் ஆண்டிற்குள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 643 மில்லியனாகவும், 2045-ல் 783 மில்லியனாகவும் அதிகரிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இப்படி அதிகரிப்பதற்கு உணவுகள் மற்றும் பானங்கள் தான் காரணமாக இருக்கும் என சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனவே சர்க்கரை நோய் வராமலும், சர்க்கரை நோய் தீவிரமாகாமலும் இருக்க எந்த மாதிரியான உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்பதை இப்போது காண்போம்.
சர்க்கரை நிறைந்த உணவுகள்
சர்க்கரை நிறைந்த உணவுகளை அதிகளவில் உட்கொள்வது, சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதுவும் ஏற்கனவே சர்க்கரை நோயைக் கொண்டவர்கள், தங்கள் உணவில் சர்க்கரையை மிதமான அளவில் தான் சேர்க்க வேண்டும்.
அதுவும் பெண்கள் ஒரு நாளைக்கு 25 கிராம் அல்லது 6 டீஸ்பூன் சர்க்கரையையும், ஆண்கள் ஒரு நாளைக்கு 36 கிராம் அல்லது 9 டீஸ்பூன் சர்க்கரையையும் தான் உட்கொள்ள வேண்டும் என அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் தெரிவித்துள்ளது. முடிந்தவரை 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் சர்க்கரை நோய் வராமல் இருக்க தினமும் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவை குறைத்துக் கொள்வது நல்லது.
ப்ளேவர்டு காபி
காபி உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் இது சர்க்கரை நோயின் அபாயத்தை அதிகரிக்கும். ஏனெனில் மற்ற சர்க்கரை நிறைந்த பானங்களைப் போன்றே காபியிலும் வெற்று கலோரிகள் அதிகமாகவும், வேறு எந்த ஒரு ஊட்டச்சத்துக்களும் இல்லை. எனவே சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த வகை காபியை குடித்து வந்தால், அதில் உள்ள வெற்று கலோரிகளால் உடல் பருமன் அதிகரிப்பதோடு, சர்க்கரை நோயும் தீவிரமாகும்.
ட்ரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகள்
ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடல் ஆரோக்கியத்தை மிகவும் மோசமாக பாதிக்கக்கூடியவை. இந்த வகை கொழுப்புக்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது இதய நோய், சர்க்கரை நோய் மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிக்கும்.
என்ன தான் ட்ரான்ஸ் கொழுப்புகள் நேரடியாக இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காவிட்டாலும், உடலினுள் வீக்கத்தை அதிகரிப்பது, இன்சுலின் எதிர்ப்பை அதிகரிப்பது, தொப்பையை உண்டாக்குவது, உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைப்பது போன்றவற்றின் மூலம் இரத்த சர்க்கரை அளவை உயர்த்துகிறது. எனவே ட்ரான்ஸ் கொழுப்புக்கள் நிறைந்த ஐஸ் க்ரீம், சாக்லேட், பிஸ்கட், கேக், செரில்கள், பர்கர், பிரட், எண்ணெயில் பொரித்த உணவுகள், பிட்சா போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ஆல்கஹால்
தற்போது ஆல்கஹால் அருந்துவது என்பது ஒரு ஃபேஷனாகிவிட்டது. ஆண்கள், பெண்கள் என இருபாலருமே சகஜமாக மது அருந்துகிறார்கள். ஆனால் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மது அருந்தினால், அது நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடும்.
எப்படியெனில், ஆல்கஹாலானது கல்லீரலில் க்ளுக்கோஸை உற்பத்தி செய்யும் திறனை பாதித்து, இரத்த சர்க்கரை அளவை மிகவும் குறைத்துவிடும். மேலும் சர்க்கரை நோய்க்கு மருந்து எடுப்பவர்கள், ஆல்கஹாலை அருந்தும் போது, அந்த மருந்துகளின் செயல்பாட்டில் இடையூறை ஏற்படுத்தி, நிலைமையை மோசமாக்கக்கூடும்.