வயிற்று வலியை குணப்படுத்தும் முலாம் பழம்
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 463
கோடைகாலத்தில் ஏற்படும் வயிற்று வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு, சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சல் போன்ற பிரச்னைகளுக்கு தர்பூசணி, முலாம்பழத்தின் பயன்கள் என்ன. பல்வேறு நன்மைகளை கொண்ட தர்பூசணியில் நீர்சத்து அதிகம் உள்ளது. தர்பூசணியில் இருந்து சாறு எடுக்கவும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கலாம். இது, வெயில் காலத்தில் ஏற்படும் நீர் இழப்பை சரிசெய்யும் பானமாக இருக்கும்.
தர்பூசணியை பயன்படுத்தி உடல் சோர்வு, உடல் வலிக்கான மருந்து தயாரிக்கலாம். தர்பூசணி சாறு எடுத்துக் கொள்ளவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்தால் உடல் சோர்வு நீங்கும். உடல் வலி இல்லாமல் போகும். காய்ச்சல் தணிகிறது. உடல் குளிர்ச்சி அடைகிறது. இதய நோய்க்கு நல்ல மருந்தாக விளங்குகிறது. இதய அடைப்பை சரிசெய்கிறது.
முலாம் பழத்தை பயன்படுத்தி உஷ்ணத்தால் ஏற்படும் வயிற்றுபோக்கை குணமாக்கும் மருந்து தயாரிக்கலாம். விதைகளை நீக்கிய முலாம் பழத்தின் பசை எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சீரகப் பொடி, 2 சிட்டிகை சுக்குப் பொடி, சிறிது பனங்கற்கண்டு சேர்த்து கலக்கவும். இதை காலை, மாலை வேளையில் எடுத்துக் கொண்டால் வயிற்றுப்போக்கு சரியாகும். வயிற்று வலி, கடுப்பு குணமாகும். நீர் இழப்பை சமன் செய்கிறது. இது, நோய் எதிர்ப்பு சக்தி உடையது. சர்க்கரை நோயாளிகள் பனங்கற்கண்டு சேர்க்காமல் சாப்பிடலாம்.
முலாம் பழத்தை பயன்படுத்தி சிறுநீர் தாரையில் ஏற்படும் எரிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். முலாம் பழத்தின் விதைகளுடன் கூடிய சதை பகுதியை 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் சிறிது சீரகப்பொடி, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளையில் எடுத்துகொண்டால் சிறுநீர் எரிச்சல் குணமாகும். கோடைகாலத்தில் சுமார் 3 மாதங்களுக்கு அதிக வெயிலால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். சிறுநீர் சரிவர வெளியேறாமல் இருப்பதுடன், எரிச்சல் ஏற்படும் நிலை இருக்கும். உடலில் நீர்சத்து குறைந்து போகும். உடல் வெப்பம் அதிகமாகி காய்ச்சலை ஏற்படுத்தும். இதனால் வாய்கசப்பு, பசியின்மை ஏற்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைக்கு முலாம் பழம் மருந்தாகிறது. இது, சிறுநீரை வெளியேற்றுவதுடன் சிறுநீர் எரிச்சலை போக்குகிறது. உடலுக்கு குளிர்ச்சியை தருவதுடன் புத்துணர்ச்சியை கொடுக்கிறது. முலாம் பழம் உன்னத உணவாக விளங்குகிறது. உள் உறுப்புகளில் ஏற்படும் உஷ்ணத்தை போக்குகிறது. உற்சாகத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. முழாம் பழத்தை தோலில் தடவி சிறிது நேரத்துக்கு பின் கழுவுவதால் வெயிலால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.