41 நாட்களாக குளிர்சாதனப் பெட்டியுடன் ஓடிய நபர்
- admin
- Category: வியப்பு
- Hits: 540
நலநிதியமொன்றுக்கு நிதி திரட்டுவதற்காக குளிர்சாதனப் பெட்டியொன்றை முதுகில் சுமந்துகொண்டு, பிரிட்டனின் நீளத்துக்கு சமமான தூரம் ஓடிய டொனி பீனிக்ஸ் என்பவர் முள்ளந்தண்டு உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“புபா கிரேட் நேர்த் ரண்” என அழைக்கப்படும் இப்போட்டி 21கிலோமீற்றர் தூரம் கொண்டது. 1991 முதல் வருடாந்தம் செப்டெம்பர் மாதம் நடைபெறும் இந்த ஓட்டப்போட்டி உலகின் இரண்டாவது மிகப்பெரிய அரை மரதன் போட்டியாகும். இவ்வருடம் 56,000 பேர் இப்போட்டிகளில் பங்குபற்றினர்.
ஆனால் பீனிக்ஸ் மொரிஸன் அதேபாதையில், மீண்டும் மீண்டும் 41 நாட்களாக ஓடினார். இதன் மூலம் 1632 கிலோமீற்றர் தூரத்தை (1009 மைல்கள்) அவர் நிறைவு செய்தார். 49 வயதான டொனி பீனிக்ஸ், சேர் பொபி ரொப்ஸன் மன்றத்தின் புற்றுநோய் ஆய்வுகளுக்கு நிதி திரட்டுவதற்காக இப்போட்டியில் பங்குபற்றினார்.
இதற்காக 42.5 கிலோகிராம் எடையுள்ள குளிர்சாதனப் பெட்டியொன்றையும் முதுகில் சுமந்துகொண்டு அவர் ஓடினார்.
தனது இலக்கை அடைந்தபின் டொனி பீனிக்ஸ் நடப்பதற்கு சிரமப்பட்டார். அதையடுத்து வைத்தியசாலையொன்றில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஏம்.ஆர்.ஐ. ஸ்கான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது அவரின் முள்ளந்தண்டில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
போட்டியின் முடிவில் எனக்கு கடுமையான வலியும் அதேவேளை மகிழ்ச்சியும் ஏற்பட்டது. பலர் பதாகைகளை ஏந்தியும் எனது பெயரை கூறியும் என்னை உற்சாகப்படுத்தினர். நான் சாதாரண நபர். எனக்குப் பின்னால் பெரும் எண்ணிக்கையானோர் திரண்டு ஆதரவளித்தமை மகிழ்ச்சியளிக்கிறது” என டொனி பீனிக்ஸ் கூறினார்.