Switch Language:   English | தமிழ்

    அணில்,பல்லியை உணவாக உட்கொண்ட நபர்

    வனப் பகுதிக்கு சென்ற வேட்டைக்காரர் ஒருவர் 19 நாட்களாக பல்லி, பாம்பு மற்றும் அணில்களைச் உணவாக உட்கொண்டு உயிர்வாழ்ந்த சம்பவமொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவைச் செர்ந்த ஜெனி பெனாப்ளோர் என்ற நபரே இவ்வாறு பல்லி, பாம்பு, அணில்களை உணவாக உட்கொண்டுள்ளார்.

    இவர் தனது நண்பருடன் அமெரிக்காவின் மென்டோசினோவில் உள்ள தேசிய காடொன்றுக்கு வேட்டைக்காக சென்றுள்ளார். அங்குச் சென்ற இருவரும் பிரிந்து தனித்தனியாக வேட்டையாட சென்றுவிட்டனர். இவ்வாறு சென்றபோது ஜெனி எதிர்பாராதவிதமாக தலையில் அடிப்பட்டு மயங்கி வீழ்ந்துள்ளார்.

    மயக்கம் தெளிந்து எழுந்தபோது இரவாகியிருந்ததை அறிந்த அவர், செய்வதறியாது அன்றைய இரவை காட்டிலே செலவழித்துள்ளார். மறுநாள் வீடு திரும்ப முயற்சித்த ஜெனி பாதை தவறி காட்டின் நடுப்பகுதிக்கு சென்றுள்ளார். பலவாறு அலைந்து திரிந்தும் அவர் வீட்டிற்கு செல்வதற்கான வழியை கண்டுபிடிக்கவில்லை.

    இந்நிலையில், 19 நாட்களை காட்டிலே செலவழித்த அவர் 19 நாட்களும் உணவாக பல்லி, அணில், பாம்பை உண்டுள்ளதுடன் ஆற்றுநீரை உண்டு வாழ்ந்துள்ளார்.

    இந்நிலையில், ஒருநாள் காட்டுப் பகுதியில் ஹெலிகொப்டர் சென்றதை பார்த்த ஜெனி, அவர்களிடம் உதவி கேட்க புகை மூலம் சமிக்ஞை கொடுத்துள்ளார். ஆனால், ஹெலிகொப்டரில் பயணித்தவர்கள் அதனை கவனிக்கவில்லை.

    இதற்கிடையே வனப்பகுதிக்குள் காணாமல்போன அவரை கண்டுபிடிக்க தனியார் துப்பறியும் நிபுணர்கள் நியமிக்கப்பட்டனர். அக்குழுவினர் மிகவும் சிரமப்பட்டு அலைந்து திரிந்து 19 நாட்களுக்கு பிறகு அவரை மீட்டுள்ளனர்.

    உடல்நலம் பாதித்த நிலையில் இருந்த ஜெனி, உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருக்கு உகியா வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.