ஒரு தாய்க்கு குறையாத தியாகம்: தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
- Editor
- Category: ஆலோசனை
- Hits: 333
அன்னையர் தினத்துக்கு சிறிதும் குறைவில்லாதது தந்தையர் தினம். இந்த இரண்டு அன்பு இத(ம)யங்களுக்கு மத்தியில் நாம் போட்டி வைப்பதைவிட இரண்டையும் சேர்த்து வெற்றிபெறுவதே சிறப்பு. அதைத்தான் கீழ்வரும் சினிமா பாடல் விளக்குகிறது.
”அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்”
தமிழ் மொழியை பொறுத்தவரை உயிரெழுத்து, மெய்யெழுத்து இரண்டும் சேர்ந்து உருவாவது உயிர்மெய் எழுத்து. இவைகளின் கலப்பே மொழி.
ஒரு குழந்தை உருவாவதிலும் தந்தைதான் உயிரை கொடுக்கிறார். தாய் வயிற்றில் குழந்தைக்கு உடலை(மெய்) கொடுக்கிறார். உயிர்மெய் எழுத்தாக குழந்தை பிறக்கிறது.
‘அம்மா’ ’அப்பா’ இந்த இரண்டு சொற்களிலுமே கவனியுங்கள் முதல் எழுத்து ‘அ’ உயிரெழுத்து, ‘ம், ப்’ மெய்யெழுத்து, ’மா, பா’ உயிர்மெய் எழுத்து. மூன்றும் சேர்ந்துள்ள இச்சொற்கள், அம்மா, அப்பா இருவருக்குமே கொடுத்துள்ள முதன்மை சமத்தின் அடையாளம்
"தாயிற் சிறந்த கோயிலுமில்லை தந்தை சொல் மிக்க மந்திரமில்லை
ஆயிரம் உறவில் பெருமைகள் இல்லை அன்னை தந்தையே அன்பின் எல்லை”
இது சினிமா பாடல் வரிகள் மட்டுமல்ல கடவுளை சிவசக்தியாக சேர்த்து பார்க்கும் இந்தியர்கள் பெற்றோர்களிடம் கற்றதையே ஆன்மீகத்திலும் சித்தரித்துள்ளார்கள்.
தந்தையர் தினத்துக்கு தந்தையானவர்
தாய் தந்தை அன்புக்கு நாடு, மதம், மொழி ஏது, உலக அளவில் தந்தையர் தினம் ஏற்படுவதற்கான காரணத்தில் கூட ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்காக செய்த உன்னதமான தியாகம் இருக்கிறது.
அமெரிக்காவில் 1909 ல் ‘சொனாரா லூயிஸ் ஸ்மார்ட் டாட்’ என்ற இளம்பெண்தான் முதன்முதலாக தந்தையர் தினம் கொண்டாடும் யோசனையை முன்வைத்தார்.
’என் தாய் இறந்த பிறகு, ஆறுபேர் கொண்ட எங்கள் குடும்பத்தை வளர்த்து ஆளாக்க என் தந்தை வில்லியம் ஒரு தியாகமாக தன்னை வருத்திக்கொண்டு சிரமப்பட்டதை நேரடியாக உணர்ந்தேன்’ என்றார்.
அதன்படியே 1910 ல் முதன் முதலாக தந்தையர் தினம் அமெரிக்காவில் கொண்டாடப்பட்டது. ஒரு தந்தையின் தியாகம் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படுவதால், இப்போது இது உலகம் முழுதும் ஒவ்வொரு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் ஜூன் மூன்றாவது ஞாயிறு(இன்று) கொண்டாடப்படுகிறது.
தந்தை தாய்க்கு சமமே
குழந்தையை பத்துமாதம் வயிற்றில் சுமப்பது, பிறந்த பிறகும் அருகிலிருந்து பால் கொடுத்து பராமரிப்பது, தாய்மைக்கு இயற்கை தந்த ஒரு குழந்தையுடனான நெருக்கம். அதனால் தந்தையை சற்று தூர வைத்துப் பார்க்கிறோம்.
ஆனால், காதலிலும் திருமணத்திலும் பெண்ணிடம் கம்பீரமாக காணப்படும் ஒரு ஆண் குழந்தைகள் பிறந்த பிறகு, மனைவியிடம் எல்லவற்றுக்கும் வளைந்தும் விட்டுக்கொடுத்தும் செல்கிறானே ஏன் தன் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவே. இதன் புரிதலிலே தந்தையரின் பெருமை தெரியும்.
’குழந்தைபாரம் உனக்கல்லவோ குடும்பபாரம் எனக்கல்லவோ
மனைவியுடன் குழந்தையையும் ஒருவனாக சுமக்கின்றேன்
சுமப்பதில்தான் சுகம் என்று மனதுக்குள்ளே ரசிக்கின்றேன்”
எப்போதோ கேட்ட இந்த எம்.ஜி.ஆரின் சினிமா பாடல் இன்று பசுமையாக காதில் ஒலிக்கிறது.