உங்க குழந்தை இரவு நேரத்தில் தூங்காம இருக்கா...அப்ப இந்த விஷயங்கள்தான் காரணமாம்!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 122
ஒவ்வொருவருக்கும் நிம்மதியான இரவு தூக்கம் என்பது அவசியம். ஆனால், புதிதாக பிறந்த குழந்தையை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு இரவு தூக்கம் என்பது சற்று கடினமானதாக இருக்கும். ஏனெனில், குழந்தைகள் பெரும்பாலும் இரவில் தூங்காமல் விழித்திருக்கும் அல்லது நடு இரவில் விழித்த்துக்கொண்டு அழலாம்.
இது பெற்றோரின் தூக்கத்தை முற்றிலும் பாதிக்கும். ஆனால், இந்த இடையூறு குறுகிய காலத்திற்கு மட்டுமே. குழந்தை மற்றும் பெற்றோரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நிம்மதியான தூக்கம் அவசியம். தூக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அறிந்துகொள்ள, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை உலக தூக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.
நடப்பு ஆண்டில்(2023) மார்ச் 17ஆம் தேதி வரும் உலக தூக்க தினத்தின் கருப்பொருள் "உறக்கம் ஆரோக்கியத்திற்கு அவசியம்" என்பதாகும். இந்த நாள் நல்ல மற்றும் ஆரோக்கியமான தூக்கத்தின் நன்மைகளைக் கொண்டாடவும், தூக்க பிரச்சனைகளின் சுமை மற்றும் அதனுடன் தொடர்புடைய காரணங்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அனுசரிக்கப்படுகிறது. இக்கட்டுரையில் உங்கள் குழந்தைகள் இரவில் தூங்காததற்கான காரணங்களைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.
பசியின் காரணமாக எழலாம்
உங்கள் குழந்தை ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாததால், நீங்கள் தாய்ப்பால் கொடுத்தாலும், விரைவில் ஜீரணமாகிவிடும். இதனால், இரவு நேரங்களில் பசியின் காரணமாக உணவிற்காக அடிக்கடி குழந்தைகள் எழலாம். குழந்தைகள் ஆரோக்கியமாக வளர உணவு அவசியம். எனவே இந்த தேவையை மாற்ற முயற்சிப்பது ஆரோக்கியமானதல்ல. உங்கள் குழந்தைக்கு உணவு தேவைப்படுகிறதா என்பதைச் சரிபார்ப்பது முக்கியம். இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைக்கு உணவளித்திருந்தாலும் கூட, மீண்டும் பால் கொடுங்கள். குழந்தைகள் சீக்கிரம் எழுவதற்கு தாகம் மற்றொரு பொதுவான காரணம். அவர்களின் அசௌகரியத்தைத் தணிக்க பால் போதுமானது.
உடல்நிலை சரியில்லாமல் இருக்கலாம்
எப்போதும், புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால், குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகலாம். இது பெற்றோர்களுக்கு மிகுந்த கவலையளிக்கும். இருமல், சளி, ஒவ்வாமை, வாயு அல்லது மலச்சிக்கல் உள்ளிட்ட பல காரணங்களால் இரவில் குழந்தை அடிக்கடி எழுந்திருக்கக்கூடும். வலி அல்லது ஒவ்வாமை ஒரு பங்களிக்கும் காரணியாக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், உங்கள் குழந்தை மருத்துவரை அணுக வேண்டும்.
குழந்தைக்கு இரவா, பகலா என்று தெரியாது
பொதுவாக பிறந்த குழந்தைகளுக்கு பகல் எது? இரவு எது? என்பது தெரியாது. அவர்களுக்கு தூக்கம் வரும் நேரம் தூங்குவார்கள், மற்ற நேரங்கள் விழித்திருப்பார்கள். உங்கள் குழந்தை பகலில் நன்றாக தூங்கி இருந்தால், இரவு முழுவதும் விழித்திருக்க வாய்ப்புள்ளது. இது பெற்றோர்களுக்கு விரக்தியாகவும் சோர்வாகவும் இருக்கலாம். ஆனால், இது தற்காலிகமானதுதான் என்பதை பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தைக்கு நீங்கள் தேவை
சில சமயங்களில், குழந்தைகள் தூங்க முடியாத அளவுக்கு பெற்றோருடன் அன்பாக பிணைந்து இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் உங்களுடன் விளையாட விரும்புகிறார்கள். ஒரே அறையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் நெருக்கமாக இருக்கும் போது ஓய்வெடுக்கலாம்.
இறுதிக் குறிப்பு
உங்கள் குழந்தை பிறந்த முதல் சில மாதங்களில் குறுகிய காலத்திற்கு அவர்கள் இரவில் விழித்திருக்கலாம். இதனால் நீங்கள் சோர்வடையாலாம். ஆனால் இது பொதுவாக சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு மட்டுமே நீடிக்கும். உங்கள் பிள்ளைக்கு கண்டறியப்படாத நோய் அல்லது ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உங்கள் குழந்தை மருத்துவரிடம் பேசுங்கள்.