பெற்றோர்களே...உங்க கைக் குழந்தையை இந்த மழைக்காலத்தில் எப்படி பாத்துக்கணும் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 88
மழைக்காலத்தில் குழந்தைகளின் உடல்நலம் சீக்கிரமாகவே பாதிக்கப்படுகிறது. காரணம் இந்த மழைக்காலங்களில் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தி மிகக் குறைவாக இருக்கும். காற்றில் அதிகரிக்கும் ஈரப்பதம் குழந்தைகளுக்கு பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
அதிலும் உங்கள் வீட்டில் கைக் குழந்தைகள் இருந்தால் அவர்களை கவனமுடன் கவனித்து கொள்வது மிகவும் அவசியம். ஏனெனில் சலதோஷம், பூஞ்சை தொற்று, சுவாச கோளாறுகள், நிமோனியா போன்ற பல நோய்கள் குழந்தைகளை தாக்க வாய்ப்பு உள்ளது. எனவே இந்த மழைக்காலத்தில் உங்கள் கைக் குழந்தையை எப்படி கவனமுடன் கண்காணிக்க வேண்டும் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு சரியான ஆடையை அணிவியுங்கள்
அதிக வெப்பத்தை உண்டாக்கும் ஆடைகள் வேண்டாம். முடிந்த வரை குழந்தையின் உடல் வெப்பநிலையை சீராக பாதுகாக்கும் ஆடைகளை அணிவியுங்கள். பருத்தியால் ஆன ஆடைகள் குழந்தைகளுக்கு எப்பவுமே ஏற்ற ஒன்றாக இருக்கும். சரும தடிப்புகள் மற்றும் தோல் எரிச்சலை ஏற்படுத்தும் செயற்கை அல்லது இறுக்கமான ஆடைகளை தவிருங்கள்.
சரியான சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும்
மழைக்காலத்தில் குழந்தைகளின் சருமத்தில் பூஞ்சை தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அடிக்கடி டயப்பர்களை மாற்றுவது அவசியம். இது குழந்தையின் சருமத்தில் தடிப்புகள் வராமல் தடுக்க உதவி செய்யும்.
நல்ல தரமான டயப்பர்களை குழந்தைகளுக்கு பயன்படுத்துங்கள். சரும வடுக்கள் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பேரில் க்ரீம்களை பயன்படுத்தலாம். அதே மாதிரி குழந்தைகளின் கை மற்றும் கால்களை லேசான சோப்பு மற்றும் வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ளுங்கள்.
கொசுக்களிடமிருந்து குழந்தையை காப்பாற்றுவது அவசியம்
மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதால் கொசுக் கடி ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே கொசுக்கடியில் இருந்து குழந்தையை பாதுகாக்க பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொசு வலைகள், கொசு மருந்து, வேப்ப எண்ணெய் அல்லது சிட்ரோனெல்லா போன்ற இயற்கை பொருட்களையும் கொசு விரட்டியாக நீங்கள் பயன்படுத்தி வரலாம். மாலை நேரங்களில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். அந்த மாதிரியான சமயங்களில் குழந்தைகளை வெளியே அனுமதிக்க வேண்டாம்.
சுற்றுப்புறத்தை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருங்கள்
குழந்தைகள் இருக்கும் பகுதி தண்ணீர் தேங்காமல் சுத்தமாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் தேங்கி நிற்கும் நீரில் தான் கொசுக்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே உங்கள் வீட்டிற்கு அருகில் தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்க குழந்தைகள் குடிக்கும் பாட்டில்கள் மற்றும் குழந்தைகளின் பொம்மைகள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். கிருமி நீக்கம் செய்வது அவசியம்.
கடுமையான மழையின் போது குழந்தைகளை வெளியே அனுமதிக்க வேண்டாம் மழைக்காலத்தில் அடிக்கடி குழந்தையை வெளியே அழைத்துச் செல்வது சலதோஷம் பிடிக்க வாய்ப்பு உள்ளது. குழந்தைகள் மழையில் நனையாத வண்ணம் பார்த்துக் கொள்வது அவசியம். குழந்தை ஈரமாகாமல் பாதுகாக்க நல்ல தரமான ரெயின் கோட் அல்லது குடையை பயன்படுத்துங்கள்.
நீரால் பரவும் நோய்கள் இருப்பதால் எச்சரிக்கையாக இருங்கள்
மழைக்காலத்தில் வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நீரால் பரவும் நோய்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இதைத் தடுக்க குழந்தைக்கு தண்ணீரை சுத்தமாக வடிகட்டி சூடுபடுத்திக் கொடுங்கள். நீங்கள் பாட்டிலில் அடைக்கப்பட்ட தண்ணீரை பயன்படுத்துகிறீர்கள் என்றால் அதன் முத்திரை மற்றும் காலாவதி தேதியை சரி பாருங்கள்.
குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்
குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தி மிகவும் முக்கியமானது. குழந்தைக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி பாடிகளை வழங்க வேண்டும். இதற்கு தாய்ப்பால் ஒரு சிறந்த வழியாகும். குழந்தைக்கு கூடுதலான வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை வழங்க குழந்தையின் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
குழந்தை மருத்துவரிடம் பரிசோதனை மேற்கொள்ளுங்கள்
குழந்தை மருத்துவரிடம் அடிக்கடி குழந்தையை பரிசோதனைக்கு அழைத்துச் செல்லுங்கள். பல்வேறு நோய்களில் இருந்து குழந்தையை காப்பாற்ற தடுப்பூசிகள் உதவுகிறது. எனவே மழைக்காலத்தில் கைக் குழந்தையை வைத்திருப்பவர்கள் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுங்கள்.