உங்க முகத்தில் அதிகமா எண்ணெய் வழியுதா? அப்ப உங்க வீட்டில் இதை செய்யுங்க...சரியாகிடுமாம்!
- MSF.Nadhwa
- Category: அழகுக் குறிப்புகள்
- Hits: 105
அனைவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று முகத்திற்கு ப்ளீச்சிங் செய்வது, ஃபேஷியல் செய்வது, ஃபேஸ் பேக் போடுவது என்று பல விஷயங்களை மேற்கொள்வார்கள். ஏனெனில் இவை ஒவ்வொன்றுமே சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றி, சருமத்திற்கு பொலிவைத் தருகின்றன.
ஆனால் அழகு நிலையங்களில் பயன்படுத்தப்படும் கெமிக்கல் கலந்த பொருட்கள் அனைவருக்குமே பொருந்தாது. சிலருக்கு அப்பொருட்கள் அழற்சியை ஏற்படுத்தலாம். மேலும் அனைவருக்குமே ஒரே மாதிரியான சருமம் இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் வேறுபடும். எனவே சருமத்திற்கு ஏற்ற பொருட்களை பயன்படுத்த வேண்டியது அவசியம்.
நீங்கள் உங்கள் முக அழகை மேம்படுத்த விரும்பினால், அழகு நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விஷயங்களை வீட்டிலேயே செய்யலாம். அதுவும் உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், வீட்டிலேயே பழ ஃபேஷியலை செய்யலாம். உங்களுக்கு வீட்டிலேயே பழ ஃபேஷியலை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே எண்ணெய் பசை சருமத்தினருக்கான பழ ஃபேஷியலை எப்படி வீட்டிலேயே செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது.
1. கிளென்சிங்
முதலில் முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். அதற்கு பப்பாளிப் பழம் மிகச்சிறந்த பழம். பப்பாளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமாக உள்ளன. இது சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெயை வெளியேற்றுவதோடு மட்டுமின்றி, சருமத்தில் உள்ள பருக்கள், கருமையான தழும்புகள் போன்றவற்றை மங்க வைக்கும். அதற்கு பப்பாளியை மசித்து, அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
2. ஸ்க்ரப்
அடுத்ததாக, சருமத்துளைகளை அடைத்துக் கொண்டிருந்த அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க எக்ஸ்போலியேட்டிங் என்று கூறப்படும் ஸ்க்ரப்பை பயன்படுத்த வேண்டும். அதற்கு ஒரு டேபிள் ஸ்பூன் சோள மாவுடன், எலுமிச்சையின் தோலை துருவிப் போட்டு, ஆரஞ்சு ஜூஸ் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின் 5 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
3. மசாஜ்
அடுத்ததாக முகத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். அதற்கு மசாஜ் செய்ய வேண்டும். இந்த செயல்முறைக்கு வெள்ளிக்காய் சாற்றுடன், கற்றாழை ஜெல், தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம், இதில் உள்ள சத்துக்கள் முழுமையாக சருமத்தால் உறிஞ்சப்பட்டு, சரும செல்கள் ஆரோக்கியமாக இருக்கும்.
4. ஃபேஷியல் மாஸ்க்
நான்காவதாக, ஃபேஷியல் மாஸ்க்கை போட வேண்டும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து அதை மசித்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு 20-30 நிமிடம் காய வைத்து, குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஷியலானது சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை போக்குவதோடு, தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தை புத்துணர்ச்சியுடனும், பொலிவோடும் வெளிக்காட்டும்.
5. மாய்ஸ்சுரைசர்
இறுதியாக, முகம் அதிகமாக வறண்டு போகாமல் இருக்க, மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தலாம். அதுவும் கற்றாழை ஜெல்லுடன், சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, சருமத்தில் தடவி அப்படியே உலர வைக்க வேண்டும்.
இப்படி செய்வதன் மூலம், சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடனும், மென்மையாகவும் இருக்கும். இந்த பழ ஃபேஷியலை எண்ணெய் பசை சருமத்தினர் மாதத்திற்கு 2-4 முறை பயன்படுத்தினால் நல்ல மாற்றத்தைக் காணலாம்.