Switch Language:   English | தமிழ்

    தாடி, மீசையுடன் காணப்படும் 2 வயது குழந்தை

    தமிழ்நாடு விழுப்புரத்தை சேர்ந்த 2 வயது ஆண் குழந்தைக்கு திடீர் ஓமோன் மாற்றத்தால் உடல் உறுப்புகளில் மாற்றங்கள் உண்டாகியுள்ளன. குறிப்பாக பெரியவர்களை போல் தாடி, மீசை மற்றும் உடல் முழுவதும் முடி வளர்வதும் தென்பட்டது. மழலை பருவத்திலேயே இத்தகைய மாற்றங்களை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதனைத் தொடர்ந்து சிறுவனை பெற்றோர் புதுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

    ஓமோன் துறை உதவி மருத்துவர் சதீஷ் பரிசோதனை செய்தபோது அவனது உடலில் ஓமோன்கள் மிகவும் அதிக அளவில் இருந்தது. ஸ்கேன் செய்து பார்த்தபோது மூளையின் அடிப்பகுதியில் உள்ள ஓமோன்களின் தலைமையிடமான ஹைப்போத்தாலமசில் ஒரு கட்டி வளர்ந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

    முதலில் அவனுக்கு ஓமோன்களை கட்டுப்படுத்த 3 மாதத்திற்கு ஒரு முறை சிறப்பு மருந்துகள் ஊசி மூலம் செலுத்தினர். ஆனால் அது அவனுக்கு முழுமையான மாற்றத்தை ஏற்படுத்தவில்லை. மேலும் அந்த மருந்து இன்னும் 10 முதல் 12 வருடங்களுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும்.

    வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட அந்த மருந்தின் விலை மிக அதிகம். இதனால் அதை வாங்க முடியாமல் குழந்தையின் பெற்றோர் அவதிப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து அவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். நரம்பியல் அறுவை சிகிச்சை துறை கூடுதல் மருத்துவர் ரூபேஷ்குமார் தலைமையிலான குழுவினர் மூளையின் அடிப்பகுதியில் உள்ள அந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் கடந்த வாரம் அகற்றியுள்ளார்.

    இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில் குழந்தையின் ஓமோன் அளவு வயதுக்கு ஏற்ப சரியாக காணப்படுகிறது என்றும் இனி அவனுக்கு ஊசி மருந்து தேவைப்படாது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.