கோபத்தை குறைக்க என்ன செய்யலாம்?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 503
இந்த உலகில் மிகப்பெரிய ஆபத்தான ஆயுதம் கோபம் ஆகும். ஒரு மனிதன் என்னதான் மிகச்சிறந்த மனிதனாக இருந்தாலும், கோபம் என்ற கூடாத ஒரு பழக்கம் அவனுக்கு இருந்தால், அக்கோபம் அவனை வெகு விரைவில் அழித்துவிடும்.
யாருக்கு தான் இந்த உலகில் கோபம் வராது. இந்த உலகில் மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் கோபம் என்ற ஒன்று இருக்கும். ஆனால் அதனை வெளிக்காட்டும் விதம் தான் வெவ்வேறாக இருக்கும்.
சிலர் அமைதியான முறையில் தங்கள் கோபத்தை வார்தைகளால் மட்டும் வெளிப்படுத்துவார்கள். சிலர் ஆக்ரோஷமான முறையில் தங்கள் உடல் அளவில் பத்திரகாளி ஆடுவார்கள். இன்னும் சிலருக்கு கோபம் வந்தால் ரத்தக்கறை பார்க்காமல் விடமாட்டார்கள்.
சிலருக்கு கோபம் வந்தால், அந்த கோபத்தை பிறர் மீது காட்டத்தெரியாமல் தங்களுக்குள்ளேயே அடக்கிகொள்வார்கள். இது போன்ற பழக்கம் உள்ளவர்களுக்கு மனதளவில் அதிக அழுத்தம் ஏற்படும். ஏனெனில் தங்களுக்குள்ளேயே அனைத்தையும் அடைத்து வைத்துக்கொண்டு, தங்களை தாங்களே தண்டித்துக்கொள்வதால், பாதிப்பு எல்லாம் இவர்களுக்கு தான் ஏற்படும்.
எனவே கோபம் வந்தால், உங்களை நீங்களே தண்டித்துக்கொள்ளாமலும், பிறரை காயப்படுத்தாமலும் இருக்க மாற்றிக்கொள்ள பழகுங்கள். கோபம் என்ற அந்த மூன்றெழுத்து மனிதன் என்ற நான்கெழுத்தை ஆட்டுக்கொள்ளக்கூடாது.
சொல்லப்போனால் மனிதனாகிய உங்களுக்கு தான் அதிக சக்தி இருக்க வேண்டும். எனவே கோபம் உங்களை அடக்கி ஆளுவதை விட, கோபத்தை நீங்கள் அடக்கி ஆளக்கற்றுக்கொள்ளுங்கள்.
கோபத்தை குறைக்க என்ன செய்யலாம்?
கோபத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.
அடக்க முடியாத கோபத்திற்கு ஆளாகிய நேரத்தில், நீங்கள் எவ்வாறு நடந்துகொண்டீர்கள் என்பதை கொஞ்சம் அமர்ந்து சிந்தித்து பாருங்கள்.
உங்களின் அணுகுமுறை மற்றவர்களிடம் எப்படி இருந்தது, நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகள் என்ன? என்பது குறித்து நோட்டில் எழுதி வையுங்கள்.
சில சமயங்களில் கோபத்தை அடக்கி சாந்த சொரூபியாய் இருந்திருப்பீர்கள். அதனையும் தவறாமல் நோட்டில் எழுதி வையுங்கள்.
அதன் பின்னர் இந்த இரண்டு சம்பவங்களுக்கும் இடையிலான வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள். அதன் மூலம் உங்களை அதிக எரிச்சலூட்டும் விடயம் எது என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.
அதன் மூலம், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறும்போதும் அதனை சுலபமாக கையாள முடியும்.
நிதானமாக பேசுவது என்பது ஒரு கலை. அந்தக்கலையை கற்றுக்கொள்ளுங்கள். ஒருவரை ஆயுதங்களால் தாக்கி காயத்தை ஏற்படுத்துவதைவிட, வாத்தைகளால் ஏற்படுத்திய காயத்திற்கு வலி அதிகம். எனவே எக்காரணம் கொண்டும் நிதானத்தை இழந்துவிடாதீர்கள்.
கோபம் வரும்போது கொஞ்சம் மற்றவர்களை குறித்தும் சிந்தித்து பாருங்கள். அப்படி உங்களுக்கு பிடிக்காத சம்பவம் நடக்கிறது என்றால் அந்த இடத்தினை விட்டு நகர்ந்துசெல்லுங்கள்.
கூடுமான அளவு விவாதம் செய்வதை தவிருங்கள். தேவையற்ற வார்த்தைகளை விடும் போது, சில பழைய விஷயங்களை கிளற வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். கோபம் அடங்கினாலும், இத்தனை நாள், இந்த விஷயத்தை மனதில் வைத்திருந்தீர்களா? என்று கேட்டால் நம்மிடம் பதில் இருக்காது.
கோபத்தில் நான் சொல்லிவிட்டேன். என்று கூறி மழுப்பினாலும், மனதில் உள்ளவை தான் வெளியில் வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது வெறும் வாய் வார்தைகள் அல்ல. உங்கள் மனதில் மறைக்கப்பட்டிருந்த விடயங்கள் ஆகும்.
இதன் மூலம் உங்கள் உறவுகள் பாதிக்கப்படவும் வாய்ப்பிருக்கிறது.
நடந்த செயல்களை நினைத்து, நினைத்து அசை போட்டுக் கொண்டிருந்தால், கோபம் இன்னமும் அதிகமாகும், உடல் நலம் பாதிக்கப்படும். எனவே கூடிய அளவு நடந்த செயல்களை அசைபோடாமல் அதனை மறக்க முயற்சி செய்யுங்கள்.